Tuesday 13 November 2012

கதம்பம் 3

இன்னுமொரு தீபாவளி
இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு பதிவை படித்தது போலத் தெரிகிறதே என்று யோசிக்கும் நண்பர்களே... புதிதாக வேறு எந்த மாற்றமும் வந்துவிடவில்லை என்பதால் (இன்னுமொரு தீபாவளி) அதையே படிக்கலாம். கொசுறாக சில செய்திகள்.

இந்த ஆண்டு பட்டாசுச்சத்தம் மிகமிகக் குறைவு. எந்தவொரு விஷயத்தையும் அது சிறப்பு, இது பெரிது, இது குறைவு என்று கூறும்போது நம் மனம் பின்னணியில் ஒப்பீடு ஒன்றைச்செய்த பிறகுதானே நமக்குத் தெரிவிக்கிறது. நானும் அதைத்தான் கூறுகிறேன். 1991இல் நான் தில்லிக்கு வந்த காலத்தில் இருந்ததில் கால்பங்குகூட இல்லை என்று நிச்சயம் கூறலாம். கடந்த ஆண்டில் இருந்ததில் பாதி அளவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது. வரவேற்கத்தக்க இந்த மாற்றத்துக்கு இப்போதும் விலைவாசி உயர்வே காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. 


முகநூலில் இப்படி ஒரு வாழ்த்து எழுதினேன் -
            Wish you all a happy Diwali.
            Celebrate this festival of light by caring the unfortunate ones.
            Experience the joy of sharing by lighting their hopes.
இந்த ஆண்டு முந்தைய தீபாவளிகளைவிட ஏராளமான தின்பண்டங்கள் வந்து குவிந்ததற்கு இது காரணமாக இருக்காது என்றே நம்புகிறேன். வந்ததில் நாங்களும் தந்தது போக இருக்கிற டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கிற தீனி இன்னும் ஒருவாரத்துக்குக் காணும். நட்புக்கு வணக்கம்.

* * *

யார் அது...?
அதிகம் விளம்பரப்படுத்தப்படாத என் வலைப்பூவுக்கு வருகை தரும் நண்பர்களுக்கு நன்றி. என் பதிவுகள் உங்களுக்கு விருப்பமானவையாக இருந்திருக்கும் - இல்லாவிடினும் வெறுப்பூட்டுவதாக இருந்திருக்காது என நம்புகிறேன்.

கூகுளில் புதியவன் என்று தேடி சிலர் வந்தடைகிறார்கள், சரி. வேறு சிலர் இருக்கிறார்கள் - ஒருவர் " கண்காட்சி நடைபெறும் " என்று கூகுளில் தேடியே வந்து கொண்டிருக்கிறார். மற்றொருவர் ஒவ்வொருமுறையும்  " வரவேற்புரை கவிதை " என்று தேடியே வந்து சேர்கிறார். இது ஏன் என்றுதான் புரியவில்லை.

வலைப்பூவுக்கு வருகை தந்தவர்கள் யார் என்று பார்க்கும்போது ரஷ்யாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும் சிலர் தொடர்ந்து - தினமும் படித்து வருகிறார்கள் என அறிகிறேன். ஜெர்மனி, போலந்து, லண்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளிலிருந்து தொடர்ந்து பார்வையிடுபவர்கள் யார் என்பதை கொஞ்சம் ஊகிக்க முடிகிறது. ரஷ்யாவிலிருந்து பார்வையிடும் நண்பர்(கள்) யார் என்பதுதான் புரியவில்லை. அறிமுகம் செய்து கொண்டால் எனக்கு திருப்தியாக - மகிழ்ச்சியாக இருக்கும்.

* * *

ஆதம் குன்று
வீட்டில் வாக்காளர் அட்டையைத் தேடிக் குடையும்போது பான் கார்டு கிடைப்பதில்லையா.... எப்போதோ யார் யாரோ கொடுத்துவைத்த விசிட்டிங் கார்டுகள் கிடைப்பதில்லையா... அவர்களின் முகம் எப்படியிருக்கும் என்று கொஞ்சநேரம் குழம்ப வைக்கும் இல்லையா. அப்படித்தான் நிகழ்ந்தது அண்மையில் இணையத்தில் ஒரு விஷயத்தைத் தேடியபோது.

இலங்கைச் சிறுகதை ஒன்றில், . . . . . . . . . . (என்ற நபர்) புகழின் உச்சியை அடைந்தார் என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ஒருவர். வாக்கியம் பொருந்தவில்லையே என்று ஆங்கிலத்தை சரிபார்த்தபோது ஆதம்ஸ் பீக் என்று இருந்தது. அட, ஆதம்ஸ் பீக் என்பதற்கு புகழின் உச்சி என்றுகூடப் பொருள் உண்டா என்று வியந்துபோய் சரிபார்க்கப் புகுந்தேன். அப்போது தெரிந்தது - இலங்கையில் இருக்கிற ஆதம் குன்று அது என்று. 


உலகில் நான்கு மதங்களுக்குப் புனிதமான மலை இது ஒன்றுதான் என்று தோன்றுகிறது. ஆதம்ஸ் பீக் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிவனொளி பாதமலை என்னும் மலை, இந்துக்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள், கிறித்துவர்கள் ஆகிய நான்கு சமூகத்தினருக்கும் புனிதமான மலையாம். அங்கே இருக்கிற பாதக் குறியை நான்கு சமூகத்தினரும் தமது நம்பிக்கைகளுக்கேற்ப தமது மதத்துக்குச் சொந்தமான பாதக்குறி என்று வழிபடுகின்றனர்.


இறைவனால் அனுப்பப்பட்ட ஆதம் நபியின் பாதக்குறி என்று இஸ்லாமியர்கள் கருதுவதால் அவர்களுக்கு இதுவும் ஒரு புனிதத்தலம்.
சிவதாண்டவத்தில் கால் பதித்த சிவனின் காலடி என்று இந்துக்கள் கருதுவதால் இது இந்துக்களின் பூஜைத்தலம்.
புத்தரின் காலடி என்று நம்புவதால் பௌத்தர்களின் புண்ணியத்தலம்.
கிறுத்துவர்களின் ஈடன் தோட்டம் என்பதாலும், ஆதிமனிதன் ஆதாம் அவர்களுக்கும் உரியவர் என்பதாலும் மட்டுமல்ல, புனித தாமசின் காலடி அது என்று போர்த்துகீசிய கிறித்துவர்கள் நம்புவதாலும் இது கிறித்துவர்களுக்கும் புனிதத்தலம்.
எது எப்படியோ, நான்கு மதத்தினரும் உரிமை கோரி மோதிக்கொள்ளாமல் அவரவர் முறைப்படி போற்றிக்கொள்கிறார்கள் என்ற வகையில் மகிழ்ச்சி.

(சிறுகதையில் குறிப்பிடப்பட்ட நபர், ஒருகாலத்தில் ஏறுவதற்குக் கடினமான ஆதம் மலையின் உச்சிக்கு ஏறுகிற அளவுக்கு வலிமையானவராக இருந்தவர் என்பதுதான் மூலக் கதையில் கூறவந்த கருத்து என்பது வேறு விஷயம்.)

* * *

சிறகுக்கு கைகொடுப்போம்
யாரோ ஒரு நண்பர் முகநூல் பக்கத்தில் சுயம் என்றொரு தொண்டு நிறுவனம் பற்றிய செய்தியைப் பகிர்ந்திருந்தார். இணையத்தில் தேடி அந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் பணிகளைப் பற்றி அறிந்தேன். நான் புரிந்துகொண்டவரை சிறப்பான சேவை செய்வதாகத் தோன்றியது. அந்த அமைப்புக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்துவிட்டேன். நீங்களும் என்னைப்போலவே உதவி செய்ய விரும்பலாம் அல்லவா...  அதற்காக விவரங்கள் கீழே.

சுயம் - http://www.suyam.org
வங்கி விவரங்கள் 
Name of the Account : Suyam Charitable Trust
Nature of the Account : Savings Bank Account
Account Number : 603101272441 
Bank : ICICI Bank, Sowcarpet Branch
IFSC/NEFT Code : ICIC0006031
மேலதிக தகவலுக்கு - http://www.suyam.org/donatenow.htm

* * *

தமிழில் தட்டச்ச
ஏற்கெனவே சில தட்டச்சுக் கருவிகள் இணையத்தில் இருந்தாலும், கூகுளும் இப்போது தட்டச்சுக் கருவிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே இந்த வசதி http://www.google.co.in/transliterate என்ற பக்கத்தில் இருக்கிறது. ஆனால் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இதில் தட்டச்ச முடியும். இப்போது உருவாக்கியிருக்கும் கருவியை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளலாம், இணைய இணைப்பு இல்லாமலே பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு. முக்கியமான இந்திய மொழிகள் அனைத்துக்கும் கருவிகள் இங்கே கிடைக்கின்றன. 

* * *

தேவி... ஸ்ரீதேவி...
இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் பற்றி நண்பர் சந்துரு எழுதியது சொல்வனம் இதழில் வந்திருக்கிறது. நானும் பார்த்த அந்தத் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு விஷயம்.

படத்தைப் பார்த்ததும் எனக்கும் ( ! ) கூட இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. நேரமின்மை தடையாய் இருந்தது ஒருபுறம் இருக்க, அதை நன்றாகவே செய்வதற்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் நாம் எதற்கு என்று விட்டுவிட்டேன். இருந்தாலும் நம்ம ஸ்ரீதேவி இல்லையா... எத்தனை வருசமாச்சு அவரைப் பாத்து...! கட்டுரை எழுதியிருந்தால் ஸ்ரீதேவி நடிப்பைப் பாராட்டியே என் கட்டுரை அமைந்திருக்கும். குறிப்பாக அது ஸ்ரீதேவியின் பலவிதமான பாவங்கள். 

ஆங்கிலப்பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் காட்டும் பாவங்கள். முதல்முதலாக ஆங்கில வகுப்புக்குச் செல்லும்போது காட்டும் தயக்கம், வெளிவந்து நடக்கும்போது அச்சம், அடுத்து கொஞ்சம் தைரியம், அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் தைரியம், பிறகு அபார தன்னம்பிக்கையுடன்கூடிய நடை, காதல் வெளிப்படுத்தப்பட்ட பிறகு முகத்தில் குழப்பமும் கலக்கமுமான நடை. 



இயக்குநர் இதை எதிர்பார்த்தார் என்றால், அதை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி. எத்தனைபேர் இதைக் கவனித்து ரசித்தார்கள் அல்லது புரிந்து கொண்டார்கள் என்று தெரியாது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலே இருக்கும் படங்களில் இது சற்றே வெளிப்படுவதை உணர முடியும் என்று நம்புகிறேன்.

ஒரு ரகசிய வேண்டுகோள் : படத்தில் மனைவியை கிண்டல் செய்து கொண்டே இருக்கும் ஸ்ரீதேவியின் கணவருக்கும், இதைப்படிக்கும் பெரும்பாலான கணவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை யாரும் வெளியே சொல்லி விடாதீர்கள்.

Friday 2 November 2012

முதல் ஆசிரியை



பதினாறு ஆண்டுகளுக்கு முன் பதிப்பக வேலையிலிருந்து விலகி, கணினியில் புத்தகங்களை வடிவமைக்கும் தொழிலை நிறுவிய நேரம். நான் கணினியை வாங்கியிருந்தேனே தவிர அதற்குமுன் கணினியைத் தொட்டதே இல்லை. முன்னர் வேலை செய்த நிறுவனத்தில் எனக்குக் கீழே இருந்தவர்கள் கணினியில் வேலை செய்வார்கள், அவர்களிடம் வேலை வாங்கியிருக்கிறேனே தவிர கணினியைத் தொட்டதில்லை. கம்ப்யூட்டரை ஏசி ரூமில்தான் வைக்கணும், ஏதாவது தப்பா கீ அமுக்கிட்டா எல்லாமே போயிடும் என்று ஆளாளுக்கு பயமுறுத்தியிருந்த காலம்.

386 சிஸ்டம், 4 எம்பி ராம், 260 எம்பி வன்தட்டு. விண்டோஸ் 3.0, பேஜ்மேக்கர் 4 என ஒற்றைக் கணினியுடன் ஆரம்பித்திருந்தேன். கோப்புகளை பிரதி எடுக்கவும் நீக்கவும் எம்எஸ்-டாஸ் சரளமாகப் பயன்படுத்திய காலம். எம்.எஸ். வேர்ட் உருவாகிக்கொண்டிருந்த காலம். ஆங்கிலத்தில் அடிக்க வேண்டியிருந்தால் டாஸ்-இல் அடித்துக்கொண்ட காலம். முடித்த வேலைகளை அவ்வப்போது பிளாப்பியில் சேமித்து வைத்துக்கொண்ட காலம். 

தில்லியின் இந்திரபுரியில் முதல்முதலாக அலுவலகம் அமைத்த காலம். அப்போது வேலைக்கான நேர்காணலுக்கு வந்தார் ஒருவர். ஐந்தடி உயரம், ஒல்லியான தேகம். நீள நீள விரல்கள். துணைக்கு அவருடைய கணவர்.

அவரிடம் தமிழில் சில பக்கங்களைக் கொடுத்து அடிக்கச் சொன்னேன். மெல்லிய விரல்கள் தட்டச்சுப்பலகையே அரங்கமாய் பாவித்து சுழன்று சுழன்று நடனமாடின. நான் வாங்கியிருந்த தமிழ் மென்பொருளும் கணினியும் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் அடித்து முடித்த அரை நிமிடம் கழித்தபிறகே ஒவ்வொரு எழுத்தாக திரையில் வந்தன. நியமனம் உறுதியானது. அவர் பெயர் மைதிலி. மைதிலி சங்கரன்.

அதற்குப் பின்னால் பதினைந்து ஆண்டுகளில் எத்தனையோ கணினிகள் வாங்கியாயிற்று. எத்தனையோ பேர் வேலைக்கு வந்தார்கள், போனார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் அங்கத்தினர் போலவும், வேலையில் உசாத்துணையாகவும் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. நான் ஊருக்குப் போவதாக இருந்தாலும் கவலையில்லை. அவர் தனியாகவே கவனித்துக்கொள்வார். 

பள்ளிப்படிப்பு முடித்தபின் விடுமுறையில் இரண்டுமாதம் தட்டச்சு கற்க வேண்டும் என்ற நியதிப்படி நானும் ஒரு காலத்தில் கையில் பேப்பரை சுருளாக்கிக்கொண்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் சென்றவன்தான். அதற்குப்பின் முப்பது ஆண்டுகளில் எல்லாம் மறந்து போய்விட்டிருந்தது. அவரிடம்தான் நான் A S D F G F என்று தட்டச்சவும் கற்றேன். கணினியின் அரிச்சுவடியும் கற்றேன். தமிழ் டைப்ரைட்டிங் முறையில் அடிக்கவும் கற்றேன். கணினியில் என் முதல் ஆசிரியர் அவர்.

விண்டோஸ் 3.1, 3.1.1, .... XP என காலம் மாறியது. பேஜ் மேக்கர் 5.0, 6.0, 6.5, 7.0 என முன்னேறியது. வேலையின் ஊடாக இருவருமே மேலும் நிறையக் கற்றுக்கொண்டோம். இருவருமே இன்ஸ்கிரிப்ட் கீபோர்ட் கற்றுக்கொண்டோம். எம்.எஸ். வேர்டில் ஆட்டோகரெக்ட் வசதியைப் பயன்படுத்தி நீளமான சொற்களுக்கு பலவித குறுகிய குறியீடுகளை உருவாக்கி தட்டச்சை எளிதாக்கிக் கொள்வதில் அவர் திறமை அபாரம். நேரமும் தேவையும் இருந்ததால் நான் விரைவாக மேலும் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். "சார் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் ஆயிட்டேள்" என்று அவர் கிண்டல் செய்தது காதுகளில் ஒலிக்கிறது.


அவர் தட்டச்சு செய்யும் முறையே தனியாக இருக்கும். நாற்காலியில் சப்பணமிட்டு உட்காருவார். கையெழுத்துப் பிரதியைத்தான் பார்ப்பார், மானிட்டரை பார்க்கவே மாட்டார். ஒவ்வொரு பத்தி அல்லது பக்கம் அடித்து முடித்ததும் ஒரு கன்ட்ரோல் + எஸ். அப்புறம் மேலோட்டமாக கண்ணோட்டி பிழைகளை சரிசெய்வது, மீண்டும் ஒரு கன்ட்ரோல் + எஸ். அவர் தட்டச்சு செய்து முடித்த பல புத்தகங்கள் இன்னும் முடிக்கப்படாமல் என்னிடம் இருக்கின்றன. அந்தக் கோப்புகளைத் திறக்கும்போதெல்லாம் அவர் தட்டச்சு செய்த காட்சி கண்முன் விரிகிறது.

* * *
ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும்...
யாரு... ராகவனா... எப்படி இருக்கடா... மன்னி நன்னாருக்காளோன்னா... ஆத்துல மத்தவால்லாம்.... ஆமா நேத்து தலைக்கு ஊத்திண்டு நேரே ஆபீசுக்கு வந்துட்டேனோ, ஜலதோஷம் பிடிச்சுண்டுடுத்து... ஆரு அத்திம்பேரா... ஆஹா அவருக்கென்ன...

அடுத்து வேறொரு தொலைபேசி வரும்
யெஸ் சார். இல்லியே... போன் பிசியா இருந்துச்சு. சார்தானே, இருக்காரே. என்ன விஷயம்... அதெல்லாம் கரெக்‌ஷன் போட்டு ரெடியா இருக்கே. சரி, இன்னிக்கே பிரின்ட் எடுத்து வைக்கறேன்.

பிராமண பாஷைக்கும் சாதாரண மொழிக்கும் சட்டென மாறிக்கொள்ளும் திறன். 

* * *

- ஏன் சார், இந்த கவிஞருங்க எல்லாருமே ஒரே மாதிரிதான் இருப்பாங்களா...
- ஏன்... என்ன ஆச்சு... இப்படி மொட்டையாக் கேட்டா...
- ஆமா இனி கிராப்பு வைச்சு கேக்கணும்.... வேற ஒண்ணுமில்லே. செல்லம்மா அங்கங்கே கடன்வாங்கி அரிசி வாங்கி வச்சா இந்தாளு பாட்டுக்கு குருவிக்கும் காக்காய்க்கும் தூக்கிப்போட்டிருக்காரே... இந்த மனுசனுக்கு கொஞ்சமாச்சும் மண்டையில மசால் இருந்திருந்தா இப்பிடிச் செஞ்சிருப்பாரா...
இது பாரதி சுயசரிதை அடித்துக்கொண்டிருக்கும்போது நடந்தது.

* * *

- ஏன் சார்... திருவள்ளுவருக்கு ஒரு முன்னூறு வயசு இருந்திருக்குமா...
- ஏன் இப்படி ஒரு சந்தேகம்
- இல்லே... அப்பாவுக்கு வளவளன்னு நம்ம பாஷையில ஒரு லெட்டர் எழுதணும்னு ஆரம்பிச்சாலே முடிக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுது. இந்த மனுசன் சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் ஆராஞ்சு ஒரு விஷயம் பாக்கி வைக்காம அத்தனையையும் நுனுக்கி நுனுக்கி எழுதியிருக்காருன்னா எவ்வளவு அனுபவம் இருந்திருக்கணும்... எவ்வளவு யோசிச்சிருக்கணும்... 
இது திருக்குறள் வேலை நடந்து கொண்டிருந்தபோது.

* * *

- ஹை... . . . . . . . . . . . . . எழுதுன புக்கு வந்துடுச்சா... அப்பாடா கொஞ்ச நாளைக்கு மண்டையப் பிச்சுக்காம அடிக்கலாம்.
மணிமணியான எழுத்துகளில் மொழிபெயர்க்கும் ஒருவரின் கையெழுத்துப் பிரதி வந்ததும் கிடைக்கிற கமென்ட் இது.
- சுத்தம்... இவங்க விரல்களை ஒடிச்சு எழுதச் சொல்லிக்குடுக்கணும்....
என் நெருங்கிய நண்பர்கள் இருவரின் எழுத்தைப் பார்க்கும்போது வரும் கோபம்.
- ஏன் சார்... இந்த ஆளு எப்படி பொம்பளைங்க மனசுக்குள்ள ஓடறதை புகுந்து பாத்தாருன்னு தெரியணும்...
இது ஆதவன் சிறுகதைகள் அடிக்கும்போது.

* * *

எப்படி எல்லாரையும் அவரால் நட்பாக்கிக்கொள்ள முடிந்தது என்பது எனக்கு மிகப்பெரிய வியப்பளிக்கும் விஷயம். எனக்குத் தெரிந்தவர்கள், எங்கள் உறவினர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவருக்கும் தெரியும். என் பிறந்த நாளன்று முதல் வாழ்த்து அவரிடமிருந்துதான் வரும்.

ஒருநாள் கையில் பையுடன் வந்தார்.
- என்ன இது ?
- நேத்து மார்க்கெட்டுக்குப் போனே... டீ-சர்ட் வாங்கிட்டு வந்தே...
- யாருக்கு ?
- நம்ம ஜெயாவுக்கு...
- ஜெயாவா... ?
- அட நம்ம ஜெயகுமாருக்கு சார். அவருக்கு இன்னிக்கு பொறந்த நாளில்லே...!
ஜெயகுமார் திருநெல்வேலிக்காரர். தில்லிக்கு வந்தும் சரியாக வேலை அமையாமல் போனவர். என் குடும்பத்தில் ஒருவராக இருந்த மற்றொருவர். 

* * *

ஒவ்வொருவருடைய பிறந்த நாளையும் மணநாளையும் இதர முக்கிய நாட்களையும் நினைவு வைத்து, அன்று காலையில் முதல் காரியமாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவிக்கத் தவறாத குரல் அவருடையது.

... இன்னிக்குத்தா நா வேலையில சேந்த நாளு.
... இன்னிக்கு ஜெய்சங்கர் மேரேஜ் டே இல்லே ?
... இன்னிக்குத்தா நீங்க முனீர்க்காவுக்கு குடிவந்த நாளு.
... இன்னிக்கு உங்க அக்கா பொண்ணுக்கு கல்யாண நாளில்லே ?
... போன வருசம் இதே நாள்லதானே நாமெல்லாம் இண்டியா கேட் போனோம் ?

* * *

முதல் மகளுக்குப் பிறகு இரண்டாவதாக மகன் பிறந்த பிறகு உடல்நலம் குன்றியது. சர்க்கரை நோய் வந்தது. சிறுநீரகங்கள் இரண்டுமே பாதிக்கப்பட்டு விட்டன. இரண்டும் சராசரியாக ஐம்பது சதவிகிதம் வேலை செய்து வந்தன. அதனால் அதிகம் பிரச்சினை இல்லாமல் பத்திய உணவும் தைரியமும் கொடுத்த நம்பிக்கையில் தொடர்ந்து வேலை செய்து வந்தார்.

பிறகு சிக்கல் கொஞ்சம் அதிகமானபோது வீட்டில் கணினியை வைத்து வேலை செய்து வந்தார். மின்னஞ்சல் வசதி வந்தது இன்னும் வசதியாகிப்போனது. அவர் வீட்டிலேயே வேலை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார். 2010இல் சிக்கல்கள் அதிகமாயின. டயலிசிஸ் தொடர வேண்டியதாயிற்று. சங்கிலித்தொடர்போல பிரச்சினைகளும் அதிகமாயின. இருந்தாலும் 2010 ஆகஸ்ட் வரை வேலை செய்து கொண்டே இருந்தார்.

2010 அக்டோபர் இறுதி... எனக்கு ஊருக்குப்போக வேண்டியிருந்தது. செல்வதற்கு முன் தொலைபேசியில் தெரிவித்தேன். ஒருதடவை வீட்டுக்கு வந்துட்டுப் போங்களேன் சார் என்றார். இல்லம்மா... வேல நிறைஞ்சு கிடக்கு, ரோகிணிக்கு வந்தா ஒரு நாள் போயிடும். வந்ததும் வர்றேன் என்று கூறிவிட்டுச் சென்றேன்.

2010 நவம்பர் 1 - ஊரில் இருந்தவாறே வானொலிக்கு ஆட்டக்களம் நிகழ்ச்சிக்கு எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய கணவரின் தொலைபேசி அழைப்பு வந்தது. உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக. இதுபோல ஏற்கெனவே பல முறை மருத்துவமனைக்குச் சென்று சிரித்துக்கொண்டே திரும்பியவர் என்று தைரியம் கொடுத்தேன். அப்படியே இருக்கும் என்று நம்ப விரும்பினேன். ஆனால் அவர் நம்பிக்கைத்துரோகம் செய்து விட்டார்.

இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன அவர் மறைந்து.


எத்தனையோ தேதிகளை நினைவு வைத்திருந்த அவரே இப்போது தேதியாகி விட்டார். தேதியாய் நினைவுகளில் வாழ்கிறார் என் முதல் ஆசிரியை.

Friday 26 October 2012

சின்மயி விவகாரம் - தாமதமான விழிப்பா? விரைவில் வந்த தளையா ?


சின்மயி விவகாரம் வெடித்து தமிழ் வலையுலகமே இதே பிரச்சினை பற்றி விவாதிக்கத் தொடங்குவதற்கு முன் - 20 அக்டோபர் அன்று மாமல்லனின் ஒரு பதிவை ராஜன்குறை முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பதிவின் துவக்கம் இது -

அறியாத முகங்களை அறிந்த முகங்கள்

* * *
நான்கு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியைப் படிக்கும் வரை சின்மயி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி ஒரு பாடகி இருக்கிறார் என்பதும்கூடத் தெரியாது. அதே போல ராஜன் யார் என்றும் தெரியாது. என்னடா இவன்... சின்மயியைக் கூடத் தெரியாத இவன் எந்த உலகத்துல இருக்கிறான் என்று யாரோ கிண்டலடிப்பது புரிகிறது. ஆனால் இதுதான் உண்மை. இவரைப் போன்றவர்களைத் தெரிந்துகொள்ளாமலே நன்றாக வாழ்க்கை நடத்த முடிகிற சிலரின் நானும் ஒருவன். இவர்களைப் பற்றித் தெரியாமல் இருப்பதாலேயே பயனுள்ள வேறு பலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது என்று இப்போது தோன்றுகிறது.
இணையம் இந்தியாவுக்குள் வந்த காலத்திலிருந்தே பயன்படுத்தி வருபவன்தான் என்றாலும் வலைப்பதிவு துவங்கி ஓராண்டுதான் ஆகிறது. முகநூலுக்கு வந்து ஏழெட்டு மாதங்கள்தான் இருக்கும். ட்விட்டரில் பதிந்து, ஓரிரு நாட்களுக்குள் அதில் நுழைவதையே விட்டு விட்டேன். பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதினாலே ஒத்த கருத்து நண்பர்களை உருவாக்குவது கடினமாக இருக்கின்ற நிலையில் 140 எழுத்துகளில் எதை சாதித்துவிட முடியும் என்ற எண்ணம் காரணம். அதற்காக துவித்தர்களின்மீது காழ்ப்பு என யாரும் கருதிவிட வேண்டாம். எனக்கு அது ஒத்து வராது, அவ்வளவுதான்.
முகநூலில் யாரோ சில நண்பர்களின் கருத்துகளில் சில ட்வீட்களின் படங்களைப் பார்த்தேன். அதில் மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்வது தவறில்லை என்பதான பொருளில் சின்மயி என்பவரின் ஒரு ஸ்கிரீன்ஷாட் பார்த்தேன். இதுபோன்ற அர்த்தமற்ற பலவற்றையும் முகநூலில் பார்த்திருப்பதாலும், சின்மயி யார் என்றும் தெரியாமல் பின்னணி என்ன என்றும் தெரியாமல் இருந்ததாலும் இதைப் பொருட்படுத்தவில்லை.
அடுத்து விவகாரம் வெடித்தது - புகார்-புலம்பல்-கைது-தொடர் கைது எனத் தொடர்ந்தது. முதலில் செய்தியைப் படித்ததும், பெரும்பாலானவர்களைப் போலவே என்னடா இது, ஒரு பெண்ணையும் தாயையும் இழிவுபடுத்தி விட்டார்களே என்றுதான் எனக்கும் தோன்றியது. விவரங்களைத் தேடத் துவங்கிய பிறகுதான் முழு விவரமும் புரிந்தது.
சின்மயி ட்வீட்டுகள் என்ன, ராஜன் போன்றோரின் பதில் ட்வீட்டுகள் என்ன என்பதையெல்லாம் நானும் தேடித்தேடி இணைப்புக்கொடுக்க வேண்டியதில்லை. அவையெல்லாம் இணையத்தில் நிறையவே உண்டு. எனக்கத் தோன்றியது --- தவறு அனைத்துத் தரப்பினரிடமும் இருந்திருக்கிறது.
இங்கே நான் தேட/தொட விரும்புவது முற்றிலும் வேறு --- இது போன்ற பிரச்சினைகளுக்கான மூலம் எது, இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கான பதில் அறியும் முயற்சி.
மேலே குறிப்பிட்ட மாமல்லனின் சுட்டி இதற்கு உதவுகிறது.
பிரச்சினையின் மூலமாக இருப்பது முகம் மறைக்கும் வசதி. புனைபெயரில், போலிப்பெயரில் எத்தனை அடையாளங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிற வசதி. அதுவே கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், மன்மோகனையும், சோனியாவையும் தாக்கி எழுத தைரியம் தருகிறது. நாகரிகமான கேலிச்சித்திரங்கள் அல்லது கருத்துகளால் விமர்சிப்பதையும் தரக்குறைவான வார்த்தைகளால் அல்லது படங்களால் தாக்குவதையும் சமமாகக் கருத முடியாது. இணையத்தில் இந்த இரண்டு வகைகளுமே பரவலாகவே இருக்கின்றன. காரணம், எழுதியவன் யார் என்று தெரியாது என்கிற தைரியம்தான்.
சைபர் கிரைம் துறை நினைத்தால் யாருடைய ஜாதகத்தையும் தோண்டி எடுத்துவிட முடியும் என்பது புரியாதவர்கள், ஆமா... இருபது கோடிப் பேரில் என்னைத்தான் வந்து பிடிக்கப் போறாங்களாக்கும் என்று நினைப்பவர்கள்தான் பெரும்பாலும் இப்படி புனைபெயர்களில் எழுதுகிறார்கள்.
மற்றொரு காரணமாக எனக்குத் தெரிவது --- திடீரெனக் கிடைத்த கருத்துச் சுதந்திரம். ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. வெளிப்படுத்த ஊடகங்களில் வாய்ப்பில்லை, சாத்தியமும் இல்லை. கேட்பதற்கு ஆளும் இல்லை. நாமாகவே வலிந்து மாற்றிக்கொண்ட வாழ்க்கைமுறையில் நிஜ நட்புகளை அறுத்துக்கொண்டு வர்ச்சுவல் நட்புகள்மீதான சார்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பரவலாகிவிட்ட சமூக வலைதளங்கள் இத்தகைய கருத்து வெளிப்பாட்டுக்கு அபாரமான கருவியாகி விட்டன. இந்த வர்ச்சுவல் நட்புவட்டத்தினர் வழங்கும் பாராட்டும் அங்கீகாரமும் இன்னும் தைரியத்தைக் கொடுத்து விடுகிறது. அப்புறம் இது ஒரு விஷச்சுழல்போலத் தொடர்கிறது. ஆனால் இங்கே பலர் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம் --- கருத்துச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதோடு சமூகப் பொறுப்பு என்பதும் அதில் அடங்கியிருக்கிறது என்பது.
இதைக்குறிப்பிடும் வகையில்தான் மாமல்லனின் பதிவுக்கு முகநூலில் நான் கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டேன் -
புனைபெயர் பயன்படுத்துபவர்கள், தம் முகமறிய வாய்ப்பில்லை என்ற தைரியம் உள்ளவர்களுக்கு மட்டுமே விஜயலட்சுமியின் எச்சரிக்கை பொருந்தும். உண்மைப்பெயரில், நண்பர்களை எச்சரிக்கையாகத் தேர்வு செய்வோர், நிஜவாழ்வில் இருப்பதுபோலவே இந்த வர்ச்சுவல் உலகிலும் உலவுகிறார்கள் என்பது என் ஓராண்டு முகநூல் அனுபவம்.
* * *
மீண்டும் சின்மயி விவகாரத்துக்கு வருவோம்.
அவருடைய பதிவு, ட்வீட்டுகள், பதில் ட்வீட்டுகள், வவ்வாலின் ஆராய்ச்சிப் பதிவு எனப் பலதையும் பார்த்தபிறகு எனக்கு சில விஷயங்கள் வியப்பளிக்கின்றன.
மீனவர் விவகாரம், இட ஒதுக்கீடு, வருணமுறை போன்ற பல விஷயங்களில் அவருடைய ட்வீட்டுகள் ஆட்சேபத்துக்கு உரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி தான் கூறவே இல்லை என்று சொன்னால் யாரும் நம்பத்தேவையும் இல்லை. அந்த அளவுக்குத் தெளிவாகவே இருக்கின்றன.
அப்படி இருக்கும்போதும் அவரை எதற்காகத் தொடர வேண்டும்.... பிரபலம் என்ற மோகம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்... இந்தச் செயல், ஒருவர் பிரபலம் என்பதாலேயே அவர் எல்லா விஷயங்களிலும் கருத்துக்கூறும் தகுதியுடையவராக அங்கீகாரம் அளிப்பதாக ஆகிவிடுகிறது அல்லவா... அதே அங்கீகாரம் பிரபலங்களை இஷ்டப்படி இன்னும் பேச வைத்திருக்கிறது அல்லவா....
தான் படித்தவர், மேல் ஜாதியைச் சேர்ந்தவர், சகலமும் அறிந்தவர் என்பதான தொனி அவருடைய பல ட்வீட்டுகளிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. அப்படியிருக்கையில் 140 எழுத்துகளுக்குள் விமர்சனம் செய்து அவரை மாற்றிவிட முடியும் என்று யாரேனும் எண்ணியிருந்தால் அவர்களை என்னவென்று அழைப்பது...
இந்துஸ்தான் டைம்சில் சின்மயி பெயருக்கு இணையாக ராஜனின் பெயர் வந்தபிறகுதான் மோதல் தொடங்கியிருக்கிறது. ராஜன் இதை மார்ச்-ஏப்ரல் மாதத்திலேயே தன் பதிவில் எழுதி இருக்கிறார். நான் பார்த்த அளவில் இந்த விவகாரத்தில் ராஜன் ஆபாசமாக எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படியும் அவர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அரசியல் தலையீடும் காவல்துறையின் ஒருபக்கச்சார்பும்தான். இணையமுகவரி எண்ணை வைத்துப் பிடித்ததாக காவல்துறை சொன்னதாக பத்திரிகைகள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை.
சின்மயியும் அவரது தாயாரும் தமது இசைப்பாரம்பரியம், ராமநாதபுரம் மகாராஜா குடும்பத்துடன் உறவு, இசைப்பயிற்சி என பல கட்டுக்கதைகளை தம் வலைப்பக்கத்தில் இட்டுக்கட்டியிருக்கிறார்கள். சரி. ஆனால் இப்போதுதான் இதை ஆராய வேண்டுமா... வவ்வால் மிகவும் சிரமப்பட்டு பலமணிநேரம் செலவுசெய்து இதை எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் சின்மயி புகார் செய்து ராஜன் கைது செய்யப்படுவதற்கு முன்பே செய்திருந்தால் சின்மயியின் உண்மை முன்னரே இன்னும் பலருக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா...
குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் - யாரை நாம் நட்பு வட்டத்துக்குள் இணைத்துக்கொள்கிறோம், யாரைத் தொடர விரும்புகிறோம் என்பது. வேலைகளுக்கு இடையில் மாற்றத்துக்காக முகநூல் நண்பர்களின் விவரங்களைப் பார்ப்பது உண்டு. அப்போது எனக்குப் புரிய வந்தது --- வலைப்பூக்கள், முகநூல் போன்ற சமூகவலை வசதிகளில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்பட எந்தெந்தப் பெண்கள் கொஞ்சம் அழகாகத் தோன்றுகிறார்களோ அவர்கள் பின்னால் நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் எந்தக் கருத்தை உதிர்த்தாலும் சொத்தைக் கருத்தாக இருந்தாலும் பின்னூட்டமிடுவதற்கான துடிப்பு அவற்றில் தெரிகிறது. உதாரணங்கள் கொடுக்க விரும்பவில்லை. அப்புறம் இவரையா அழகு என்று சொல்கிறாய் என்று ஒரு கூட்டம் படையெடுத்து வரலாம்.

உதாரணத்துக்கு ஒரு அனுபவம். இரண்டு நாட்கள் முன்புவரையில் என் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஏதும் இருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் உரையாடலில் வந்தார். நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளிலிருந்து என்னை பெண் என்று நினைத்திருக்கிறார் என்பது புரிய வந்தது. அப்பனே நான் படிப்பதை எல்லாம் நிறுத்தி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவர் நம்பவில்லை. அப்போதுதான் என் பக்கத்தில் படம் ஏதும் போடவில்லை என்பது புரிந்து, புகைப்படத்தை இணைத்தேன்.
சின்மயி விவகாரத்திலும் இத்தகைய போக்கைத்தான் நான் பார்க்கிறேன். அவர் திரைப்பாடகராம். நல்லது. இவருடைய கருத்துகள் பலவும் அரைவேக்காட்டுத்தனமானவை, ஜாதிப்பற்று கொண்டவை என்று தெரிந்தபின் இவரை ப்ளாக் செய்துவிட்டு ஒதுங்கிக்கொண்டல்லவா இருக்க வேணடும்... அவருடைய கருத்துகளுடன் உடன்படவில்லையா, எதிர்த்து எழுதலாம். --- ஆனால் நாகரிகமாக. பெண்தானே, என்ன செய்துவிட முடியும் என்ற தைரியமா அல்லது பேருந்தில் சீண்டும்போது கூச்சல் எழுப்பாத பெண்ணை இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாம் என்ற எண்ணமா...
* * *

சின்மயி மீதும் புகார் கொடுக்கப்பட்டு விட்டது என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் சமரசம் ஆகவும் வாய்ப்புண்டு. அல்லது ராஜனும் மற்றவர்களும் கண்டனத்துடன் வெளியே வந்து விடலாம். அல்லது குற்றமற்றவர்களாகவே வெளியே வரலாம். ஆனால் காவல்துறை, கைது ஜெயில், வழக்கு, நீதிமன்றம் ஆகிய உளைச்சல்களை மறக்க முடியுமா... 
* * *
இந்த விவகாரத்தின் விளைவுகளாக கண்ணிலும் மனதிலும் படுபவை -
ஆங்கிலத்தில் Pandora’s box என்பார்களே, அப்படி புதிய புதிய செய்திகள் எல்லாம் வெளியாகியுள்ளன. இன்னும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. உதாரணத்துக்கு, ராஜமௌலியின் ஜாதிவெறி அப்பட்டமாகியது.
இந்த விவகாரம் வெளியானதும் ஆளாளுக்கு ட்வீட்களை கட்-பேஸ்ட் செய்து தனக்குப் பிடிக்காத நபர்கள்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டார்கள். இது கவலைக்குரியது என்றாலும் சில நாட்களில் அடங்கி விடும்.
ஆபாசத்தையே எழுத்தாக வைத்திருக்கும் சாரு நிவேதிதா எல்லாம் நாகரிகம் பற்றிப் பேசுகிற நிலை வந்துவிட்டது. இதுவும் நல்லதுதான். இனி எழுதுவதற்குமுன் அவரும்கூட யோசிக்க வேண்டியிருக்கும்.
இந்த ஒருவாரத்தில் மதத்துவேஷ-ஜாதித்துவேஷ வெறித்தனமான கருத்துகள் குறைந்துள்ளன. இன்னும் குறையும். இது வரவேற்கத்தக்கது.
ஆனால் வரவேற்கத்தக்க இந்த மாற்றத்துக்கு நாம் கொடுக்கப்போகும் விலை மிக அதிகமானதாக இருக்கும். சின்மயி இதற்கு அஸ்திவாரம் இட்டு விட்டார், அவர் எதிரிகளாகக் கருதுபவர்கள் அந்த அஸ்திவாரத்துக்கு சிமென்டும் மணலும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கடைசி விஷயம்தான் எனக்கு முதன்மையான கவலையாக இருக்கிறது.
ஏற்கெனவே கட்டுக்குள் அடங்காத அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் காவல்துறைக்கு இன்னும் வசதியாகி விடும். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல, பதிவர்கள்-சமூகவலைதள நண்பர்களுக்குள் எழும் மோதல்கள் காவல்துறையின் மிரட்டலுக்கு, துன்புறுத்தலுக்கு, பணம் பிடுங்கலுக்கு மேலும் வாய்ப்புகளை அளிக்கும். அதிலிருந்து தப்பிக்க அரசியல்வாதிகளை அண்ட வேண்டியிருக்கும்.  
கட்டற்ற சுதந்திரம் இனி சாத்தியமில்லை. தளைகளோடுதான் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
* * *
மாமல்லனின் சுட்டியில் துவங்கியதை அவரது வரியுடன் முடிக்கலாம்.
இத்துனைபேர் சுற்றி இருக்கிறார்கள் என்பது வியப்பாகவும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எச்சரிக்கையாகவும் கவிழாமல் மிதந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  கூச்சத்தைக் கொஞ்சம்போல கூட வைத்துக்கொண்டிருந்தால் பொய்யின் சுமையை மட்டுமின்றி உண்மையின் உப்புசத்தைக்கூட கணிசமாகக் குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

Saturday 6 October 2012

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ...



இப்படியும் இருந்தார்கள் - 
நான் ஆரம்பித்த இந்தக் கப்பல் கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல... மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காகவும் சேர்த்தே இந்தக் கப்பல்கள் பயன்படும் என்று வ.உ.சி. அறிவித்தார்.
இதனை அறிந்த வ.உ.சி.யின் நண்பர் சிவா... மூட்டை முடிச்சுகளை வெள்ளையர்கள் இங்கேயே விட்டு விட வேண்டும். ஏனெனில் அவை நம்மிடம் கொள்ளையடிக்கப்பட்டவை. அவற்றை விட்டுவிட்டே வெள்ளையர் ஓட வேண்டும் என்று உரக்கக் கூறினார். 

* * *

கடைசியில் புலி வந்தே விட்டது. இங்கே மிட்டல்களும் அம்பானிகளும் என்ன விரும்புகிறார்களோ அதெல்லாம் நிச்சயம் நடக்கும். வேதாந்தாக்கள் என்ன நினைக்கின்றனவோ அதுவும் நடக்கும். சாமானியர்களாகிய நீங்களும் நானும் என்ன எதிர்பார்க்கிறோமோ அதற்கு எதிரானவை நிச்சயம் நடக்கும்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை இப்போது அனுமதிப்பதற்கு சிறப்பான காரணம் ஏதும் இப்போது புதிதாக உருவாகி விடவில்லை. 2 அல்லது 4 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட இப்போது புதிய மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடவில்லை - எதிர்ப்புக்காட்டக்கூடிய வலியவர்கள் இல்லை இப்போது என்பதைத் தவிர.

பொருளாதார சீர்திருத்தம் என்பது தொடர்நிகழ்வு - continuous process - என்று மன்மோகன் சிங் சொன்னதெல்லாம் ஒரே பொருளைத்தான் குறிக்கும் - தொடர்ந்து ஒவ்வொன்றாக அந்நிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்து கொள்ளைகொண்டு செல்ல அனுமதிப்பது என்பதே அது. அதில் லாபம் சிலருக்கு மட்டுமே இருக்கும். நாட்டுநலன் என்பதற்கு அந்தச் சிலரின் நலன் என்றுதான் மன்மோகன்-அலுவாலியாக்களின் அகராதியில் இருக்கும்.

வால்மார்ட்-உடன் இணைந்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார் மிட்டல். யுபிஏ-1இன் காலத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸ் ஆதரவில் இருந்தார்கள் கடைசிவரை. அவர்கள் இருக்கும்வரை சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிந்திருந்த காங்கிரஸ் வாய்மூடி இருந்தது. நியூக்ளியர் லயபிலிடி விவகாரத்தில் இடதுசாரிகள் வெளியேறினார்கள். காங்கிரசுக்கு தைரியம் பிறந்தது. அடுத்த தேர்தலில் இடதுசாரிகள் பலமிழந்தார்கள். இன்னும் தைரியம் அதிகரித்தது. யுபிஏ-2இல் உண்மையில் நிரந்தரக் கூட்டாளிகள் யார் என்று காங்கிரசுக்குக் கவலையே இல்லை. எல்லாருடைய குடுமியும் அவர்களிடம் சிக்கியிருக்கிறது. பாஜக பலவீனப்பட்டிருப்பதும், அதன் உள்கட்சி மோதலும் காங்கிரசுக்கு அபார தைரியத்தை அளித்திருக்கிறது என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

இந்து நாளிதழில் வந்த கேலிச்சித்திரம் இதை அழகாக வெளிப்படுத்துகிறது.
 
நிலக்கரி ஊழல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு சரியான வாய்ப்பாகி விட்டது. பிரச்சினையிலிருந்து தப்பிக்க அல்லது கவனத்தை திசைதிருப்ப சரியான வழி - அதைவிடப் பெரிய பிரச்சினையை உருவாக்கி விடுவது. காங்கிரசும் பாஜக-வும் இதில் கரைகண்டவை. காங்கிரஸ் இப்போதும் அதைத்தான் செய்தது.

குளிர்பான நிறுவனங்கள் வந்தன. உள்நாட்டு குளிர்பானத் தொழிலை முற்றமுழுக்க அழித்தன. கார் நிறுவனங்கள் வந்தன. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் - மாருதி உள்பட - திணறுகின்றன. புத்திகெட்ட நடுத்தரவர்க்கம் இதெல்லாம் ஏதோ பெரிய சாதனையாக, வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதாகப் போற்றி ஏமாளிச்சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. பெப்சி-கோலா நிறுவனங்கள் நிலத்தடி நீர்வளத்தை சுரண்டி, பாழ்படுத்தி வருவதைப்பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. பொதுப்போக்குவரத்து வசதி அதிகரிக்கப்பட்டால் வாகன நெரிசல், புகை, மாசு, பெட்ரோல் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகள் குறையும் என்பதைப்பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. சிறுநகரங்களில்கூட கென்டுக்கி வந்ததுதான் முன்னேற்றம் இவர்களுக்கு. இவர்கள்தான் கருத்துகளை உருவாக்குபவர்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்கள் காதில் எந்தச்சங்கின் ஒலியும் விழப்போவதில்லை. அமெரிக்காவில் வால்மார்ட் நுழைந்த இடத்தில் எல்லாம் அதைச்சுற்றிலும் இருந்த சிறு வர்த்தகங்களை எவ்வாறு அழித்தது என்று எத்தனை ஆவணப்படங்கள் பார்த்தாலும் அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பவர்களாகவே இருப்பார்கள். பத்து லட்சம் மக்கள் தொகை உள்ள நகர்களில் மட்டும்தானே அனுமதி, இதில் என்ன தவறு என்று கூறுபவர்கள், இந்தப் பத்து லட்சத்தை 5 லட்சமாக, 1 லட்சமாகக் குறைக்க அதிக காலம் எடுக்காது என்பதை முன்கணிக்க மறுக்கிறார்கள். இதில் அன்னிய முதலீடு வந்தால் விவசாயிகளுக்கு பயன் கிடைக்குமாம்...! அப்படியானால் அரசு எதற்கு? நம்முடைய அரசுகளும் நம்முடைய தனியார் துறைகளும் செய்ய முடியாததை, செய்யத்தவறியதை அன்னியர்கள் செய்வார்கள் என்றால் சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்வதுதான் எதற்கு? இனி காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீட்டாளர்கள் இன்னும் வரப்போகிறார்கள். இந்தியர்கள் மேல் அவர்களுக்குத்தான் எத்தனை அக்கறை ! தொண்டு செய்து பழுத்த பழங்களோ இவை...?!

அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்றால் அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு நம் அரசுகள் தரக்கூடியவை, செய்யக்கூடியவை -
  • வரிச்சலுகைகள்
  • வரிவிலக்குகள்
  • மானியங்கள்
  • சிறப்பு மண்டலங்கள்
  • இலவசமாக அல்லது சலுகை விலையில் நிலங்கள்
  • அதற்காக எவருடைய நிலங்களையும் கையகப்படுத்தல்
  • கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உதவிகள்
  • அவற்றுக்கான மானியங்கள்
  • கூட்டுசேரும் நிறுவனங்களுக்கு கடன் உதவிகள்
  • தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகள் தராமல் கொத்தடிமைகளாக நடத்த அனுமதி
  • கூட்டுசேரும் பெருநிறுவனங்கள் நம் பொதுத்துறை வங்கிகளை சுரண்டி பல்லாயிரம் கோடிகளை கடன் வாங்க அனுமதித்தல், அவற்றைக் கட்டாமல் இருந்தால் கண்டு கொள்ளாமலும் இருத்தல்
இவையெல்லாம் இல்லை என்றால் எந்த வெளிநாட்டு நிறுவனமும் இந்தத் திசையில் தலைவைத்துப்படுக்கவும் எண்ணாது.
சுமார் 15-20 ஆண்டுகளாக அறிமுகமான BOOT / BOT (Build, Own, Operate, Transfer / Build, Operate, Transfer) திட்டங்கள் நெடுஞ்சாலைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது தொலைதூர, பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளுக்காகத்தான் அறிமுகமாயின. இப்போது என்ன ஆயிறறு. முக்கியச் சாலைகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியார்மயமாகி வருகின்றன. மக்களின் போக்குவரத்துக்கான சாலை வசதி என்னும் பொறுப்பிலிருந்து அரசு கைகழுவிக்கொண்டது. அடுத்து மின்விநியோகம், அப்புறம் மின் உற்பத்தி என படிப்படியாக தனியாருக்குத் தரப்பட்டது. இயற்கை வளங்கள் ரிலயன்சுக்கு தாரை வார்க்கப்பட்டன. நீர்வளத்தையும் தனியார்மயமாக்கும் திட்டங்கள் தொடங்கி விட்டன. இப்படித்தான் தொடர்நிகழ்வில் இப்போது வந்திருப்பது சில்லறை வர்த்தகம்.

இந்தியாவின் சில்லறை வர்த்தகம் என்பது மிகப்பெரிய சந்தை. இன்றுவரை சில தனிநபர்களிடம் மட்டும் சிக்காமல் கிராமப் பெட்டிக்கடையிலிருந்து நகரின் மளிகைக்கடை வரை என பலகோடிப் பேரின் கைகளில் இருக்கிறது. அப்படி பலருக்கும் வாழ்வாதாரமாக, வருவாய் தரக்கூடியதாக இருப்பதை விட முடியுமா? சிலருக்கு மட்டும் லாபம் தருவதாக இருந்தால்தானே அடுத்த ஆண்டுகளின் பில்லியனர்ஸ் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ! பட்டினியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பத்திரிகைகளில் வரப்போகிறதா என்ன...?

மம்தா பானர்ஜி மீது எனக்கு மரியாதை என்று ஏதும் இருந்ததில்லை. இருந்தாலும் அவருடைய தைரியம் பாராட்டக்கூடியது. இதை சற்று வெட்கத்துடன்தான் கூறுகிறேன் - தமிழன் என்ற வகையில். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று தமிழர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் துரோகமிழைக்கும் செயலுக்கு துணை போயிருக்கிறது. மம்தாவும் அதே கூட்டணியில் அமைச்சராகத்தான் இருக்கிறார். தான் வெளியேறினால் முலாயமும் மாயாவதியும் காங்கிரசின் வால்பிடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். தெரிந்தே ஆதரவை விலக்கிக் கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது. ஆனால் தமிழகத்தின் தானைத்தலைவருக்கு 2-ஜி முக்கியமானது, எதிர்த்து முனகக்கூட தைரியம் வரவில்லை.

திமுக எதிர்க்காமல் போனதற்கு இது மட்டுமே காரணமா... எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வால்மார்ட்டோ, கீல்மார்ட்டோ - எது வந்தாலும் அதில் கூட்டுசேர தன் குடும்பத்திற்கும் வாய்ப்புக்கிட்டும் என்று எண்ணி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
பத்து-இருபது-முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சி இப்போது இருப்பதுபோன்ற வருவாய் தரக்கூடிய தொழிலாக இருக்குமா...? அப்படியே இருந்தாலும் இன்னும் போட்டியாளர்கள் அதிகரித்து விடலாம் இல்லையா...? மக்கள் காலாகாலத்துக்கும் இதேபோல குப்பை சினிமாக்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று என்ன நிச்சயம்...? அதுபோக, ஆளும் கட்சியாக அல்லது அரசியல் கட்சியாக கழகம் இருக்கும் வரைதானே அதிகாரத்தை குடும்ப லாபத்துக்குப் பயன்படுத்த முடியும்....? எத்தனை காலத்துக்கு இந்த ஆட்சிகளும் அரசியலும் நீடித்துவிட முடியும்...? ஆக, எதுவும் நிரந்தரமில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் நிரந்தரமாக இருக்கும் - மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என்பதே அது. அரிசியும் பருப்பும் காய்கறியும் மளிகையும் இல்லாமல் மனிதன் எக்காலத்திலும் இருக்க முடியாது. இப்போதே அதில் நுழைந்துவிட்டால் இப்போது பத்து தலைமுறைக்கு மட்டுமே இருக்கிற சொத்து பலநூறு தலைமுறைக்கும் வரக்கூடியதாக பெருகும் என்ற கணக்கும் இருக்கலாம். அதுவே அவர்களை வாய்மூடி மௌனிகளாக வாழச்செய்திருக்கலாம்.

என் சந்தேகங்கள் பொதுவாக பொய்த்துப்போவதில்லை. இது பொய்த்துப்போனால் மகிழ்ச்சிதான்.