Tuesday 27 March 2012

உண்மை எனப்படுவது யாதெனின்

இன்றைய பத்திரிகைகளில் தலைப்புச்செய்தி ஒன்று -
ராணுவத்துக்கு தரம்குறைவான வாகனங்களை வாங்குவதற்காக எனக்கு 14 கோடி லஞ்சம் தருவதாக தைரியமாக ஒருவர் என்னிடமே வந்து கூறுகிறார். 
இப்படிச்சொன்னவர் யாரோ ஒரு சாதாரண அதிகாரி அல்ல. தளபதி வி.கே. சிங்.


I was offered Rs 14 crore bribe: Army Chief General VK Singh 
இவர் கூற்றில் உண்மை எவ்வளவு, இவர் கூறுவது மட்டும்தான் உண்மையா என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே சர்ச்சைக்கு உள்ளான இவர் தனக்குத்தானே சுருக்கு மாட்டிக்கொள்கிற மாதிரியான ஒரு அறிக்கையை வெளியிட மாட்டார் என்பது நிச்சயம். அடுத்த சில நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விவாதம் சூடுபறக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மயிர்பிளக்கும் வாதங்கள் நிகழும். அதெல்லாம் கிடக்கட்டும். இங்கே கவனிக்க வேண்டியது -

இதுதான் இந்தியா. லஞ்சமும் ஊழலும் புரையோடிப் போயிருக்கிற இந்தியா. ஊழல் செய்து பணம் சேர்த்தவன் திருடன் அல்ல, பிழைக்கத் தெரிந்தவன் என்ற பெயர் பெறுகிற நாடு நம் நாடு. நேர்மைக்குக் குரல் கொடுக்கிறவனுக்கு பிழைக்கத் தெரியாத பயல் என்ற பட்டம் தருகிற நாடு நம் நாடு. இங்கே அரசும் அரசு இயந்திரங்களும் சொல்வதெல்லாம் உண்மை என்று நாம் நம்ப வேண்டும். அவர்களுக்கு ஜால்ரா போடுகிறவர்கள் சொல்வதும் உண்மை. விமர்சிப்பவர்கள் எல்லாரும் பொய்யர்கள். இதுதான் சூத்திரம். வாழ்க ஜனநாயகம்.

* * *
நண்பர் திரு கன்னியப்பன் அவர்கள் கீழ்க்கண்ட செய்தியுடன் ஒரு சுட்டியும் இணைத்து அஞ்சலை அனுப்பியுள்ளார்.
அன்பு வலைய நண்பர்களே!!!!!
வணக்கம்!!!!
கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த, எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலினை நீங்களும் படித்துப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்!!!!! ஆகவே அதனை உங்களுக்கும் அனுப்பியுள்ளேன். நிதானமாகப் படியுங்கள்.
உண்மை நிலையை நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள்!!!!!     

இதை செய்தியாக மட்டும் அனுப்பியிருந்தால் நேராக சுட்டியின் கட்டுரைக்குப் போயிருக்கலாம். அவர் தன் செய்திக்கு ஏராளமான ஆச்சரியக்குறிகளையும் சேர்த்திருப்பதால் அதன் பொருளையும் தொனியையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
    எந்தவொரு பிரச்சினையையும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவரவர் உரிமை. அதுதான் ஜனநாயகம் தந்திருக்கும் வலிமை. கூடங்குளத்தை நிச்சயம் அரசு கைவிடப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். அரசுகள் இன்று மக்களுக்கான அரசுகளாக இல்லை என்பதால். இந்தப் பிரச்சினையில் மட்டுமல்ல, உலகமயம், தனியார்மயம், அணுசக்தி, ராணுவத்துக்கு பூதாகரமான நிதி ஒதுக்கீடு, சுற்றுச்சூழலை முற்றாக சீரழிக்கும் கனிமவளச் சுரண்டல் கொள்கைகள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களை தாரைவார்த்தல், நீரையும் தனியாருக்கு வழங்கும் திட்டம், தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கப்போகும் ஆதார் அடையாள அட்டை, இரண்டு நாட்களுக்கு முன்னால் அரசு அறிவித்த வறுமைக்கோட்டின் வரையறை என இன்னும் பல பிரச்சினைகளிலும் அரசு தன்னிச்சைப்படிதான் நடந்து கொண்டு வந்திருக்கிறது. தன்னிச்சைப்படி என்றால், தன் எஜமானர்களின் இச்சைப்படி. அத்தனை திட்டங்களினாலும் பயன்பெறப்போகிறவர்கள் ஆகச்சிறுபான்மையினர், பாதிக்கப்படப்போகிறவர்கள் மிகப்பெரும்பான்மையினர். ஆனால் இந்த ஆகச்சிறுபான்மையினர்தான் அரசை ஆட்டுவிக்கிறார்கள் என்பதாலும், அதன் விளைவுகள் நம் எதிர்காலத் தலைமுறைகளை பாதிக்கப்போவது பற்றி நடுத்தர வர்க்கம் கவலை கொள்ளாதிருப்பது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாகவும் குரல் கொடுப்பதாலும்தான் மக்கள் இயக்கத்தினர் இன்னும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதாகிறது. இப்படி குரல் கொடுப்பவர்களை எல்லாம் - அவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு முறையான, நேர்மையான வாதங்களை முன்வைக்காமல் - அந்நியக் கைக்கூலி, தேசபக்தி இல்லாதவன், மதவாதி, புளுகன், கழுதை என இன்னபிற முத்திரைகள் குத்துவதும் வழக்கமாகி விட்டது.

    கன்னியப்பன் என் இனிய நண்பர். இப்போதும் இதை எழுதும்போது அவருடைய நேர்மைமீது எள்ளளவும் எனக்கு ஐயமில்லை, எங்கே தவறு நிகழ்ந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் தைரியம் உள்ள மிகச்சிலரில் அவரும் ஒருவர் என்பதற்காக அவரை எப்போதும் மதிப்பேன் என்றும் வலியுறுத்தி விட்டு, சுட்டியின் கட்டுரை என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.

    பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும் - அணுமின் உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்
    என்பது அவர் இணைத்திருந்த சுட்டியின் தலைப்பு. 
    கட்டுரையைப் படிக்க - http://puthu.thinnai.com/?p=9595

    முன்குறிப்பு - இதை எழுதியவர் யார் என்று பார்க்க முனைந்த போது, இந்திய அணு உலைகளில் பல்லாண்டு காலம் பணியாற்றி அனுபவம் பெற்ற ஜெயபாரதனுக்கு
    பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப்பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன
    என்று தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. அந்தப் பாரதப் பற்றின் காரணமாகவோ என்னவோ, பதவிஓய்வுக் காலத்துக்கு முன்னரே முன்னோய்வு பெற்றுக்கொண்டு கனடாவின் அணுமின் நிலையத்தில் ஒன்பதாண்டு காலம் பணியாற்றச் சென்றார் போலும். பாரதப்பற்று என்றால் அமெரிக்கப்பற்று, கனடா பற்று, டாலர் பற்று, மேற்கத்தியப் பற்று எல்லாம் அடக்கம் என்பது எங்கள்கால தேசப்பற்றில் இருக்கவில்லை...

    கட்டுரையின் முன்னுரையில் ஜெயபாரதன் கூறுகிறார் -
    இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    இவருடைய குடும்பம் நியூக்ளியர் பேமிலி என்று தெரிகிறது. மிகவும் நல்லது. இவர் யாரோ எவரோ எனக்குத் தெரியாது. யாராக இருந்தாலும் இவரும் இவருடைய குடும்பத்தினரும் இன்னும் பல்லாண்டுகள் நலமாக வாழட்டும். உலகோர் அனைவரும் வளமாக இல்லாவிட்டாலும் நலமாக இருக்கட்டும் என்பதுதான் எனது விருப்பமும்கூட. ஆனால், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்றால் உலகமே நலமாக இருப்பதாகக் கூறுவது... குண்டுமணி தங்கம் வைத்திருந்த நாவிதன் ராஜாவிடம் சொன்ன கதைபோல அல்லவா இருக்கிறது.

    இப்போது (2012 மார்ச்) ஞாநி கல்பாக்கம் அணுமின் உலைகள் தூங்கும் எரிமலை மேல் படுத்துள்ளது என்றும், அது 1757 ஜனவரி 20 இல் வெடித்ததை பரிணாம வளர்ச்சி மேதை டாக்டர் சார்லஸ் டார்வின் நேராகப் பார்த்ததாக ரா. ரமேஷ் தன் நூலில் எழுதி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். 

    ஞானியின் கட்டுரைக்கு இணைப்பு இங்கே - Gnani

    ஞானி சார்லஸ் டார்வின் பற்றிக் குறிப்பிடவில்லை. ஞானி குறிப்பிடாத ஒன்றை குறிப்பிட்டதாகப் பொய்யாக எழுதுவது படித்தவருக்கு அழகா....

    யந்திர யுகத்தில் தொழிற்சாலை விபத்துக்கள் ஏதாவது நேர்வது உண்மை.  ஆனால் கடந்த 40 ஆண்டில் அடுத்தடுத்து இயங்கும் 20 இந்திய அணு உலைகளில் ஒருவர் கூட இதுவரை மரிக்க வில்லை என்பதும் உண்மை.  கதிரடி பட்டு இதுவரை ஒருவர் கூட நோய்வாய்ப்பட வில்லை என்பதும் உண்மை.

    அடேயப்பா... எத்தனை உண்மைகள். அப்படியானால் அணுமின் நிலைய விபத்துகள் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்டால் அரசு அப்படியை உண்மைத் தகவல்களைத் தரும் என்று நம்பலாமா... வெளியே தெரியவந்த விபத்துகளே ஏராளம். இணையத்தில் கொட்டிக் கிடக்குது தகவல். பின் எங்கே இருக்கிறது உண்மை. நம் நாட்டில் என்ன, உலகில் எங்குமே அணுஉலை விபத்து நிகழ வேண்டாம் என்பதே எம் விருப்பமும். இதுவரை விபத்து நிகழவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், நாளை எந்த விபத்தும் நிகழாது என்று யார்தான் உத்தரவாதம் தர முடியும்... ஏதாவது  விபத்து நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்றுக்கொள்ளப்போகிறார்கள்.

    உலகத்தில் கடந்த 40 ஆண்டுகளால் அடுத்தடுத்து இயங்கி வரும் 430 மேற்பட்ட அணுமின் உலைகளில் பெரும்பான்மையானவை நதிக் கரையிலோ, கடற்கரையிலோ, ஏரிக்கரை மீதோதான் அமைக்கப் பட்டுள்ளன.  ஆகவே மேற்கூறிய கருத்து முற்றிலும் மெய்யாகாது.  அணு உலைகளில் இருந்து அனுதினமும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்கள் வெளியாவதில்லை.  விபத்துக்கள் அனுதினம் நேர்வதில்லை.  என்ன ஆதாரம் வைத்து இப்படி வெறுமையாகப் புகார் செய்ய முடியும் அனுதினம் வெளியாகும் திரவ, திடக் கழிவுகள், வாயுப் புகை யாவும் சோதிக்கப் படாமல் வெளியே விடப் படுவதில்லை.

    நல்லவேளை, அனுதினமும் விபத்துகள் நிகழ்வதில்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டிருக்கிறார். இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகள் பற்றி நான் எழுதிய ஒரு பதிவில், கழிவுநீர் சம்பல் நதியில் விடப்பட்டது குறித்து அணுஉலை ஊழியரின் மனைவியே எழுதியிருப்பது பற்றிக் குறிப்பிட்டேன். இந்தியாவில்தான் இப்படி என்றால், இவருடைய மகள் பணியாற்றும் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டதாக சரியாக ஓராண்டுக்கு முன் செய்திகள் வெளியானதே... அது உண்மை இல்லையா... அந்த விபத்தினால் ஒன்டாரியோ ஏரிக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்ததே. அதுவும் உண்மை இல்லையா...


    அல்லது கனடாவில் சோதிக்கப்பட்டு பின்னர் கசிய விட்டார்களோ... கனடாவாக இருந்தால்தான் என்ன... அங்கும் அதிகாரவர்க்கம் இதே விளக்கம்தான் சொன்னது - கசிந்த நீர் பாதிக்கின்ற அளவுக்கு இல்லை. அது எப்படி எல்லா நாடுகளிலும் எல்லா அணுஉலை விபத்துகளிலும் ஒரேமாதிரி பதில் கிடைக்கிறது... அணுத் தொழில்நுட்பப் பாடத்திட்டத்தில் இப்படித்தான் பதில்சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்து விடுகிறார்களோ...

    1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்தில் ஹைடிரஜன் வாயுக் கோளம் உருண்டு விபத்து ஏற்படப் பயமுறுத்தினாலும் வெடிப்பு ஏற்பட வில்லை.. 

    உண்மையைச் சொன்னால் முழு உண்மையும் சொல்ல வேண்டும். திரீமைல் தீவு விபத்தில் வெடிப்பு ஏற்படவில்லை கசிவுதான் ஏற்பட்டது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வோம், அதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அரசு அறிக்கை சொன்னதையும் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். கதிரியக்கத்தை சுத்தப்படுத்தும் பணி 14 ஆண்டுகள் நடந்து, 1 பில்லியன் டாலர் - ஒரு லட்சம் கோடி டாலர் செலவான உண்மையும் குறிப்பிட்டிருக்கலாமே... எனக்கு கணக்கு அவ்வளவு வராது. எத்தனை கோடி ரூபாய் என்று யாரேனும் எழுதினால் நல்லது.

    அந்த கதிரிக்க விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் தமது அணுமின் உலைகளில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகளை (Hydrogen Recombiners) உடனே அமைத்துக் கொண்டன.  தனியார் துறை இயக்கும் புகுஷிமா ஜப்பான் அணுமின் உலைகளில் அவ்விதம் ஏன் இல்லாமல் போயின என்பது 2011 ஆம் ஆண்டில் வியப்பாக இருக்கிறது.   கூடங்குளத்தில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகள் இருப்பதால் அந்தப் பிரச்சனை எழாது.

    அப்படியானால் ஜப்பானியர்களைவிட இந்தியர்கள் புத்திசாலிகள்.... ஜப்பானியர்களைவிட இங்கே முன்னேறிய தொழில்நுட்பம்... ஜப்பானைவிட இங்கே அறிவியல் முன்னேறி விட்டது... இல்லையா... திரீமைல் தீவில் விபத்து ஏற்பட்ட பிறகும்கூட அணுஉலைக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத அளவுக்கு ஜப்பானியர்கள் முட்டாள்கள். ஆனால் ஊழல் என்ற வார்த்தையே அறிந்திராத இந்தியர்கள் புத்திசாலிகள். இதுதான் உண்மை இல்லையா... அதனால்தான் ஜப்பானை நினைத்து வியப்பாக இருக்கிறது.

    போபால் விஷவாயு விபத்துக் கசிவில் பல்லாயிரம் இந்தியர் மரித்தனர்.  பல்லாயிரம் இந்தியர் கண்ணிழந்தார்.  அங்கயீனப் பிறப்புகள் உண்டாயின.  அவருக்கு முறையான காப்பீடு இழப்பு நிதி சரியான தருணத்தில் அளிக்கப் படவில்லை என்பது உண்மை.  இரசாயனத் தொழிற்துறை நிறுவகங்களில் இந்திய அணுசக்திச் சட்டம் போல் (Atomic Energy Act) தெளிவாகக் காப்பீடு முறைகள்/பொறுப்புகள் விளக்கமாக எழுதப் படவில்லை.  ரஷ்ய அணு உலைச் சாதனங்கள் ஆரம்பத்தில் பழுதானால் அவற்றைச் செம்மைப் படுத்தும் பொறுப்பு & செலவு ரஷ்யாவைச் சேர்ந்தது.  அணு உலை இயங்க ஆரம்பித்து மனிதத் தவறாலோ, யந்திரப் பிசகாலோ விபத்து உண்டானால் அந்த நிதி இழப்பை நியூகிளியர் பவர் கம்பெனி (NPCIL) ஏற்றுக் கொள்ளும். செலவு குறிப்பிட்ட வரம்பு மாறினால், இந்திய அரசாங்கம் ஈடு செய்யும்.

    போபாலில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் நிர்வாகம் படிப்படியாக விலக்கிக் கொண்டிருந்தபோதும் கண்டுகொள்ளாமல் இருந்ததும் ஆண்டர்சனை தப்பிப்போக விட்டதும் காப்பீடு முறைகள் எழுதப்படாததால் அல்ல. ஊழலால் என்பது சமூகவியலின் அரிச்சுவடி அறிந்தவருக்கும் தெரியும்.

    அது சரி, மனிதத் தவறால் விபத்து உண்டானால் இந்திய அணு ஆற்றல் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்பதாவது சரிதான். ஆனால் பல்லாயிரம் கோடிகள் கொட்டி வாங்கிய யந்திரப் பிசகுக்கும் நம் நிறுவனமே ஏற்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்...

    விபத்து ஏற்பட்டால் நிதி இழப்பு என்று இவர் குறிப்பிடுகிறாரே. மனித உயிரிழப்புக்கு யார் பொறுப்பு... சூழல் சீர்கேட்டுக்கு யார் பொறுப்பு...

     கூடங்குள அணு உலைத் தீய்ந்த எருக்கோல்களை மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பலாம்.  அல்லது சுத்தீகரித்து எஞ்சிய எருக்கருவை மீட்கலாம்.  இவற்றில் முதல் பொறுப்பு இந்தியாவுக்கு நிதி விழுங்குவது. கப்பலில் கனத்த கவசமோடு நீண்ட தூரம் அனுப்பவதில் சிரமங்கள் அதிகம். தீய்ந்த எருக்கருச் சுத்தீகரிப்பு முறைகள் இந்திய அணுவியல் நிபுணருக்குப் பழக்கமானவை.  மேலும் சேமிப்புச் சுரங்கங்களில் கதிரியக்கக் கசிவுகள் நேர்வதில்லை.  இரண்டாம் வழியைப் பின்பற்றுவதில் பாதுகாப்பு உள்ளது.

    ஆக, சுற்றி வளைத்து ஒரு உண்மை புரிகிறது - தீய்ந்த எருக்கோல்களை ரஷ்யாவுக்கு அனுப்பப் போவதில்லை, நாமே புதைத்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான். எத்தனை ஆயிரம் ஆண்டு காலம், அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவு என்ற உண்மையையும் குறிப்பிட்டிருக்கலாமே...

    குறிப்பிட முடியாது. ஏனென்றால் கழிவுகளைப் பாதுகாக்க எத்தனை தலைமுறைகளுக்கு எத்தனை கோடிகள் செலவாகும் என்பது யாருக்குமே தெரியாது. உத்தேசமாகத் தெரிந்தவர்களும் சொல்ல மாட்டார்கள்.

     கட்டி முடிக்கப் பட்ட 15,000 கோடி கூடங்குள இரட்டை அணுமின் உலை முடக்கத்தால் இந்திய அரசுக்கும், இந்தியர் வரி நிதிக்கும் குறைந்த அளவு வருவாய் இழப்பு தினமொன்றுக்கு சுமார் 100,000 டாலர் (50 லட்சம் ரூ).  ஆதலால் முதல் இழப்பு, வட்டி இழப்பு, கடன் அடைப்புப் பிரச்சனைகள் அணு உலை முடக்கத்தால் குறையப் போவதில்லை.  கடல் அருகே இருக்கும் அணு உலைச் சாதனங்கள் துருப்பிடித்துப் பயனற்றுப் போகவும் வாய்ப்புள்ளது.

    இந்தியாவில் விபத்துகளில் மட்டும் 91 கோடி டாலர் - சுமார் 4500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது பகிரங்கமாகத் தெரிந்த ஒரு புள்ளி விவரம்.  உண்மையில் இழப்பு இதைவிட அதிகமாகவே இருக்கும். இந்த உண்மை நமக்கு எப்போதும் தெரியவராது என்பதுதான் உண்மை.  

    இந்தப் பதிவு எழுதப்படும் இன்றைய (21-3-2012) செய்தியின்படி, ஒன்டாரியோவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு எதிராக சுற்றுச்சூழல்வாதிகள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். கனடாவின் மின்சக்தித் தேவையில் 50 விழுக்காடு அணுமின்சாரம்தான். அங்கேயும் அணுமின்சாரம் வேண்டாம் என்ற குரல் எழுகிறது. அதுவும் கூடங்குள எதிர்ப்பாளர்கள் முன்வைத்துள்ள அதே வாதங்கள்தான் அங்கும் எழுப்பப்பட்டுள்ளன.

    இவர்களும் பாமர மக்களைப் பயமுறுத்துகிறார்களோ....

    கடைசியாக, இதுவரை அணுஉலை விபத்துகள் பற்றிய முழு உண்மைகள் வெளிவந்ததே இல்லை. அது செர்னோபில் ஆனாலும் சரி, புகுஷிமா ஆனாலும் சரி. நம் கல்பாக்கம் ஆனாலும் சரி. எல்லா நாடுகளுமே உண்மைகளை மூடிமறைத்தும் மழுப்பியும்தான் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன. ஜப்பானில் விபத்தை சரிசெய்ய தம்மையே தியாகம் செய்ய முன்வந்தவர்கள் 50 பேரின் நிலைமை உண்மையில் இப்போது என்ன... அங்கிருந்த 800 ஊழியர்களில் எத்தனை பேர் எத்தனைவிதமான பாதிப்புகளுக்கு ஆளானார்கள்... கசிந்த கதிரியக்கம் ஜப்பான் அரசு அறிவித்ததைவிட இரண்டு மடங்கு என்பது உண்மையா.... 3,60,000 குழந்தைகளுக்கு தைராய்டு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாமே... அதில் எத்தனை பேருக்கு பாதிப்பு என்று அறிவிக்கப்பட்டதா... ஒன்றரை லட்சம் பேர் இடம் பெயர்க்கப்பட்டு இன்றும் மறுவாழ்வு கிடைக்காமல் தவிக்கிறார்களாமே...

    இதையெல்லாம் வெறுமனே வியப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையா...

    கடைசியாக ஒரு உண்மை பற்றிய சந்தேகம்.

    இந்தியாவில் இயங்கிவரும் 20 அணுமின்சக்தி நிலையங்களில் 18 நிலையங்கள் கனடாவின் காண்டு கனநீர் அழுத்த மாடல் (CANDU Heavy Water Pressurized Reactor Models) டிசைன் அடிப்படையில் கட்டப்பட்டவை. ... இந்தியா கனடாவின் காண்டு கனநீர் அணுமின் உலை டிசைன்களை வாங்கிப் பன்மடங்கு அணுமின்சக்தி உற்பத்தியைப் பெருக்கினாலும், கனடாவின் கதிரியக்கக் கழிவு புதைப்பு விதி முறைகளை ஏனோ பின்பற்றவில்லை! 
    என்று ஜெயபாரதன் எழுதியுள்ள ஒரு கட்டுரை கூறுகிறது. அதாவது, காண்டு நிறுவனம் இந்தியாவுக்கு பல உலைகளை விற்பனை செய்திருக்கிறது என்ற உண்மை தெரிகிறது. இணையத்திலும் இதுகுறித்து ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன. காண்டு நிறுவனத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இந்தியா கொடுத்திருக்கிறது என்ற உண்மை நமக்குத் தெரியப்போவதே இல்லை.

    ஜெயபாரதன் இந்திய அணுசக்தி நிறுவனத்திலிருந்து முன்னோய்வு பெற்றுக்கொண்டு பின்னர் கனடாவில் கான்டு அணுமின் நிலையத்தில் பணியாற்றுவதற்காகச் சென்றார் என்பது அவர் வாக்கிலிருந்தே தெரிகிறது.

    அணுஉலைக்கு ஆதரவாக இவர் எழுதுவதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்பதற்கான உண்மையும் நமக்குத் தெரியப்போவதில்லை. 


    உண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா....

    9 comments:

    1. aiya, ippave kannai kattuthe!! Ennada ithu, evvalavu serious aana matterai ezuthiyirukken. Indhamma vadivelu comment kudukuthu appudinnu tension aagadenga thalai!! Nan kannai kattudu-nu sonnathu bayathila kan iruludu- appadingirathukaga.
      .
      Sathya

      ReplyDelete
    2. நண்பர் அருண்,

      30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் உலைகளைத் "தேவையான தீங்குகள்" என்று தெளிவாகத் தெரிந்துதான் இயக்கி வருகின்றன, பேரளவு மின்சக்தி கிடைப்பதால்.

      அணுமின் உலைகள் இன்னும் 25 - 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், கதிர்வீச்சில்லாத அணுப்பிணைவு (Nuclear Fusion Power) நிலையம் வாணிப ரீதியாக வரும்வரை.

      மதுவும், சிகரெட்டும் கோடான கோடி ரூபாய் வருமானம் தருவதால் அவற்றைத் தமிழக அரசாங்கம் நிறுத்துமா வென்று கேளுங்கள்.
      .

      சி. ஜெயபாரதன்.

      ReplyDelete
    3. காலை வணக்கம்.

      மிகவும் உன்னதமான சேகரிப்பு கலந்த உண்மைத் தகவல்கள் தந்திருக்கிறீர்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். சில பல உண்மைகள் நன்கு விளக்கப்பட்டிருந்தாலும், புரியாத புதிராக இன்னும் நிறைய கேள்விகள் அடிப்படையில் (உயிரோடு விளையாடும் இந்த வினோத விளையாட்டு தொடர்பாக) இருக்கத்தான் செய்கிறது...

      விடை (நிஜமான) தேடும் ஒரு வினோதப்பிறவி

      பட்டாசு...

      ReplyDelete
    4. ஷாஜஹான் இந்திய அணுசக்தித் துறை பற்றி அரைகுறை விஞ்ஞான அறிவோடு மூடத்தனமாக என்னைப் பற்றி எழுதி இருக்கிறார். டாக்டர் கோபாலகிருஷ்ணன் அமெரிக்க முறையில இந்தியப் பாதுகாப்பு விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அமெரிக்காவில் இந்தியா போலின்றி அணுவியல் துறைகள் தனியார் வசம் உள்ளன.
      ஆதலால் அந்த விதிமுறைகள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல.

      சி. ஜெயபாரதன்
      http://jayabarathan.wordpress.com/

      ReplyDelete
    5. கூடங்குளம் போன்ற ஓர் அணுமின் உலை 1000 மெகாவாட் மின்சார ஆற்றல் 30 ஆண்டுகள் மின்கடத்தில் அனுப்பி வருவதால், மின்சாரமோடு 100 கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி அது நீடித்து ஓடச் சாதனங்கள் தயார் செய்வதுடன், ஆயிரக்கணக்கான பேருக்கு ஊழியமும் ஊதியமும், அரசாங்கத்துக்கு வருமானம் தருகிறது.

      In India Atomic Power Industries & Space Exploration are two major components of its sustaining Infrastructures

      ஷாஜஹான் கண்களுக்கு கிட்டப் பார்வை தவிர தூரப் பார்வை இல்லை.

      சி. ஜெயபாரதன்

      ReplyDelete
    6. நான் யாரென்று "புதியவன்" தெரிந்து கொள்ள வேண்டும்.

      ஷாஜஹான் உண்மையைத் திரித்துக் காட்டி என்னைத் தாழ்த்தித் தன்னை உயர்த்தி உள்ளார்.

      அவர் வாழ்க்கையில் என்ன சாதித்தி ருக்கிறார் குறை கூறுவதைத் தவிர ?

      http://jayabarathan.wordpress.com/about-the-author/

      சி. ஜெயபாரதன்

      ReplyDelete
    7. @Jayabarathan.

      "மதுவும், சிகரெட்டும் கோடான கோடி ரூபாய் வருமானம் தருவதால் அவற்றைத் தமிழக அரசாங்கம் நிறுத்துமா வென்று கேளுங்கள்."

      தாங்கள் எப்பொழுதாவது குஜராத்துக்கு வந்து உள்ளீர்களா !!! அங்கு மது இல்லை !!! மது இல்லாமலே அங்கு அரசாங்கம் நன்கு வருமானம் ஈட்டிக் கொண்டிருகின்றது !!! இங்கு மனிதர்களை அடிமைப்படுத்திக் கொள்வதற்காக மதுவைத் தடை செய்யாது இருக்கிறார்கள்.


      இங்கு எங்கும் எதிலும் ஊழல்.அதனால் இங்கு எந்தவொரு விடயத்திலும் அரசியல்வாதிகளுக்கு profitability இல்லாமல் அவர்கள் அதனை ஆதரிப்பது இல்லை.அதற்க்கு நல்ல உதாரணம் உங்களுக்கே தெரியும் 2g,ISRO S Band Scam,Etc... இதனால் இந்த கூடங்குளம் விவகாரத்தில் எத்தனை மதிப்பு கூட்டு ஊழல்கள்,யார் யார் பயன் பெற்றார்கள் என்று தெரிய வில்லை ??? இதனால் இந்த 15000 செலவு அரசுக்கு இழப்பு என்பது ஏற்கத்தக்கது அல்ல.

      Please refer below link for list of scandals
      en.wikipedia.org/wiki/List_of_scandals_in_India

      This is not the loss to Govt....

      தாங்கள் தயவுசெய்து முதலில் அவர் கேட்டுள்ளக் கேள்விகளுக்கு முழுப்பதில் அளியுங்கள்.

      தங்களைப் பற்றி தெரியவந்தமைக்கு மிக்க நன்றி.ஆனால் நீங்கள் ஏன் இந்தியாவிற்கு சேவை செய்யாமல் அயல் நாட்டுக்கு சேவைச் செய்கின்றீர்????இதுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள "பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன" வின் அர்த்தங்களா ????

      ReplyDelete
    8. Dear Author,

      The three mile island incident's clean up costed about 2.4 Billion dollars. That would be 240 crore dollars. Not 2 lakh dollars as you are stating. Please correct it. 1 billion is only 100 crores.

      I am not against Atomic power. I live in USA and live within 20 miles of Limerick Nuclear power plant. What I hate is the way Indian Government handling this kudankulam issue. There is no democracy shown to people in this regard at all. Without openness, there is no point in saying " We are only doing good to people". They do not want to follow USA in this regard. Jeyabharathan is supporting these politicians only because of his admiration on nuclear power in Canada. He does not live in India. Hence, you can disregard his views.

      In my view, if the people in a region are opposing a government plan, a democratic government cannot ignore that movement. That's not called Democracy. Its something back in time like 500 years ago how we lived.

      If the government can abandon "Sedu Samuththiram" project for some invalid reasons, so too this kudankulam project! Why the hell not?

      -Bala.

      ReplyDelete
      Replies
      1. Thanks for correcting me Sir. I have already quoted that i am not clear about billion. And, dictionary says "Denoting a quantity consisting of one thousand million items or units in the United States". Anyway, you have corrected.
        What is to be noted in Three Mile Island incident is, despite my hate for American hegemony, I respect the way it protects its own people, the cleanup work continued for 14 years. Here, in India, we have not yet decided what to do with the Bhopal toxic wastes even after about two decades.
        I, too, wouldn't oppose atomic power, provided we had our own technology, sound regulatory mechanism, and if we do not have any other sources. Despite being a tropical country with vast coastlines, we have not at all explored the possibilities of renewable energy. What we do is just copying others - at the behest of multinationals. Hence this opposition. If Indian Government had come out clean on all aspects, including safety, environmental concern, rehabilitation, handling of wastes etc. there would have not been much problem. But here the attitude was of the master's. It is unclear what will be the fate of waste from Kudankulam.
        Thanks for your last paras. It is not just Kudankulam. It is how the Govt behaves in all issues like Aadhar card, POSCO deals, mining licences, dams etc.
        Happy to receive your unbiased views.

        Delete