Monday 16 April 2012

காலம் கரைத்த கபடி


நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா....
இதைப் போன்ற பாடல்கள் எல்லாம் கிரிக்கெட் கூச்சல்களில் அமுங்கிப்போய் விட்டன. ஒருகாலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் இருந்த கபடி அணிகள் எல்லாம் காலத்தில் கரைந்து விட்டன. சுவர்களில் கரியால் போட்ட கோடு ஸ்டம்ப் ஆகி, பிளாஸ்டிக் பந்தும் கைக்குக் கிடைத்த கட்டை பேட் ஆகவும் மாறி கிரிக்கெட் மோகம் உள்நாட்டு விளையாட்டுகளை விழுங்கி விட்டது.

நகரங்களில் மட்டைகளும் பேட்களும் ஹெல்மெட்களும் கொஞ்சம் பயன்பாட்டில் உள்ளன என்றாலும் பெரும்பாலும் இப்படிப்பட்ட கிரிக்கெட்தான் நாடெங்கும் இருக்கிறது. சில வீடுகளில் காம்பவுண்ட் கதவுக்கும் வீட்டுக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதி பிட்ச் ஆக மாறிவிடுகிறது. விளையாட்டு சாதனங்கள் இல்லாமலே விளையாடப்படும் விளையாட்டாக கிரிக்கெட் பரவி விட்டது. இலக்கும் இல்லை, நோக்கமும் இல்லை, முனைப்பும் இல்லை. எத்தனை ரன்களும் எடுக்கலாம், எடுக்காமலும் இருக்கலாம், அவுட் ஆனபிறகும் ஆடலாம்...

இன்றைய இந்த நிலையையும், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையையும் மனது தவிர்க்க இயலாமல் ஒப்பிடுகிறது. வீதி விளையாட்டுகள் முற்றிலுமாக மறக்கப்பட்டு விட்டன. தென்தமிழகக் கடைக்கோடி கிராமங்களில் பண்டைய விளையாட்டுகளுக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருப்பதாகத் தோன்றுகிறது. தமிழகம் எங்கும் பரவலாக விளையாடப்பட்டு வந்த கபடி விளையாட்டு எங்கே போனது....

எந்தவித சிறப்பான கருவிகளோ, சாதனங்களோ, ஏற்பாடுகளோ தேவைப்படாத எளிமையான விளையாட்டு கபடி. தமிழில் சடுகுடு என்றும் வடக்கே ஹூ-டு-டு என்றும், பஞ்சாபி-இந்தியில் கபட்டி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் கபடி இந்தியாவுக்கு உரிய விளையாட்டு. கை-பிடி என்பதுதான் கபடி என்று மருவியதாகவும் ஒரு கருத்து உண்டு.

கபடி வீரனுக்குத் தேவை, மூச்சுப் பிடிக்கும் திறன், துரிதமாக முடிவெடுக்கும் திறன், எதிராளியின் ஒவ்வொரு சிறு அசைவையும் கவனித்து உடனே பதில் நடவடிக்கை எடுக்கும் வகையில் கண், காது, மூக்கு, வாய் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய திறன். உடல் வலிமையும், கைகால்கள் நீளமாக இருப்பதும் கூடுதல் வசதி. அத்துடன், சூழ்ந்திருக்கும் ரசிகர்கள் கொடுக்கும் ஆலோசனைகளைக் கூச்சல்களைப் பொருட்படுத்தாமல் தன் இலக்கில் கவனம் செலுத்துவது மற்றொரு அவசியம்.

கபடி விளையாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான விதிகள் நிலவின. ஆனால் பொதுவான விதிகளாக இருந்தவை ஆடுகளத்தின் நடுக்கோடு, ஏறுகோடு, எல்லைக்கோடு ஆகியவை. ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ, ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பலீஞ்சடுகுடு...சடுகுடு... என்று பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படை. ஒரு அணியைச் சேர்ந்தவர் பாடிக்கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, கையால் அல்லது காலால் தொட்டு விட்டு பிடிபடாமல் வரவேண்டும். பிறகு எதிரணியும் அதேபோல் செய்ய வேண்டும். எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக் கருதப்படும். 


அமர் என்னும் கபடி வடிவத்தின் படி, தொடுபட்டவர் வெளியேற மாட்டார். குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டம் முடியும்போது எந்த அணி அதிகப் புள்ளிகள் பெற்றாரோ அது வெற்றி பெறும்.  சஞ்சீவினி என்ற வடிவத்தின்படி, பாடிச் சென்றவர் யாரையேனும் தொட்டால் அவர் அவுட் ஆவது மட்டுமல்ல, தொட்டவர் அணியில் அவுட் ஆகி வெளியே இருந்தவர் திரும்பவும் உள்ளே வரலாம். ஜெமினி என்ற வடிவத்தின்படி, ஒருமுறை அவுட் ஆகி வெளியேறியவர் அந்தச் சுற்று முடியும்வரை திரும்ப வர முடியாது. ஒரு அணியில் இருந்த அனைவரும் அவுட் ஆனால் எதிரணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும், மீண்டும் ஆட்டம் தொடரும். இவ்வாறு விதிகள் ஒவ்வொரு பகுகிக்கும் ஒவ்வொரு வகையாக இருந்தன. இந்திய கபடி கூட்டமைப்பு 1952இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பு தெளிவான விதிகளை வகுத்தது. 1980இல் ஆசிய கபடி கூட்டமைப்பின் விதிகள் வகுக்கப்பட்டன.  

ஆண்கள் ஆடும் களம் 13 மீ x 10 மீ பரப்பு கொண்டிருக்கும். பெண்கள் ஆடும் களம் 12  மீ x 8 மீ ஆகும்.  ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும் கோடுகளும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குலம் இருக்க வேண்டும்.

பாடிச் செல்பவர் ரெய்டர் என அழைக்கப்படுகிறார். கபடி கபடி என்று மூச்சு விடாமல் பாடுவதை கான்ட் என்கிறார்கள். கான்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, முடிவே இல்லாமல் தொடர்ந்து சொல்வதால் பொருளிழந்து போன சொல் என்று பொருள். ஹு-டு-டு, டோ-டோ, தி-தி, சடு குடு, குடு குடு, இந்தச் சொற்கள் எல்லாம் நீக்கப்பட்டு, இப்போது கபடி-கபடி என்ற பாட்டுதான் அங்கீகரிக்கப்பட்ட பாட்டு.

எதிராளியைத் தொட்டுவிட்டால் புள்ளி கிடைக்கும். பாடிச் சென்றவர் மாட்டிக் கொண்டால் எதிரணிக்குப் புள்ளி கிடைக்கும். பாடிச் சென்றவர் மூச்சை விட்டு விட்டாலும் எதிரணிக்குப் புள்ளி கிடைக்கும்.

இடையில் புதிதாக ஒரு விதி அறிமுகம் ஆனது. அதாவது, தொடர்ந்து மூன்று முறை ரெய்டு சென்றும் புள்ளிகள் எதுவும் பெறவில்லை என்றால் எதிரணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும் என்ற விதி வந்தது. ஆனால், இந்த விதியால் ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்தது. எனவே சில ஆண்டுகள் கழிந்த பிறகு. இந்த விதி நீக்கப்பட்டது.

கிராமத்தின் ஆற்று மணலிலும், திறந்த மைதானங்களிலும் நிகழ்ந்த கபடி விளையாட்டுகள் என் கண்முன் நிழலாடுகின்றன. சிறுவயதிலிருந்தே நான் ஒல்லிக்குச்சி என்ற பட்டப்பெயரைத் தக்கவைத்து வந்தவன் என்றாலும்கூட உயரமாகவும், மூச்சை இழுத்துப்பிடிக்கும் திறமையும் இருந்தவன் என்பதால் எனக்கும் எங்கள் ஊரில் கபடி அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆற்றில் குளிக்கும்போது நீருக்குள் மூழ்கி மூச்சடக்கும் போட்டியில் பங்கேற்றது கபடிக்கும் துணை செய்தது. வெறுமனே மூச்சை இழுத்துப் பிடிப்பதற்கும் பாடிக்கொண்டே மூச்சை இழுத்துப்பிடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீருக்குள் இரண்டு நிமிடங்கள் வரை இருந்தவன், கபடியில் ஒரு நிமிடம் ஒன்றரை நிமிடம்தான் தாக்குப்பிடிக்க முடியும். நான் சிறந்த கபடி வீரன் இல்லை என்றாலும், என் அணி எதிரணியைவிட அதிகப் புள்ளிகள் எடுத்திருந்தால், ஆட்ட நேரம் முடியும் வரை வெறுமனே நேரத்தைப் போக்க - அதாவது, ஏறு கோட்டை மட்டும் தொட்டுவிட்டு மூச்சுப்பிடித்த நேரத்தை வீணடித்து டைம் பாஸ் செய்ய என்னைப் போன்றவர்களும் அணிக்குத் தேவைப்படுவார்கள்.

ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவார்கள். ஒருவர் எதிரணிப் பகுதிக்குள் சென்றதும் தன் தொடையைத் தட்டி பந்தா காட்டுவார். இன்னொருவர் ஏறுகோட்டைத் தொட்டுவிட்டு நடுக்கோட்டைத் தொடுகிற தூரத்தில் பந்தாவாக படுத்துக்கொண்டு வெறுப்பேற்றுவார். மற்றொருவர், ரஜினி வில்லனை ஒவ்வொருவனாக அடிக்கப்போகிறேன் என்று விரலால் சுட்டுவது போல அடுத்த நீதான் என்கிற பாணியில் எதிரணியில் எவரையேனும் சுட்டுவார். இது ஒரு தந்திரம். எதிராளிக்கு ஆத்திரமூட்டி அவன் தன் கையைப் பிடிக்கத் தூண்டுகிற தந்திரம். கபடியில் புதிதாக வந்தவன்தான் கையைப் பிடிப்பான். கையைப் பிடிப்பது போன்ற முட்டாள்தனம் கபடியில் வேறேதும் இருக்க முடியாது. பாடி வந்தவன் சட்டென்று கையை உருவிக்கொண்டு திரும்பி விடுவான்.

பாடி வருபவனைப் பிடிக்க இரண்டிரண்டு பேராக கைகளைக் கோத்துக்கொண்டு வளைய வருவதும், எதிராளி அருகே வரும்போது அதே வளையம் பின்னோக்கி நகர்வதும் உடைந்த வளையல்கள் அருகருகே இருப்பது போன்று எனக்குத் தோன்றும். பாடி வருபவனைக் கண்டு பயந்ததுபோல இயன்ற அளவுக்கு பின்னால் போய், அவனை நன்றாக உள்ளே ஏறவிட்டபின் அப்படியே அமுக்கி விடுவது இன்னொரு தந்திரம். எனக்கு இந்தத் தந்திரங்கள் எல்லாம் அத்துபடி. ஏறுகோட்டைத் தொடுவதோடு சரி, யாரையும் அவுட்டாக்கும் உத்தேசம் இல்லாதவனாய் பாடிக்கொண்டே குறுக்காக தளுக்கு நடை போட்டு வெறுப்பேற்றுவேன். இந்த ஒல்லிக்குச்சிக்கு திமிரு பாரு என்று யாரேனும் ஒருவனுக்கு நிச்சயம் கோபம் வந்து பின்னால் வந்து பிடித்து விடுவான். அப்படியே அவனையும் இழுத்துக்கொண்டு நடுக்கோட்டைப் பார்த்து கைநீட்டியபடி விழுந்தால் போதும், ஆள் அவுட்டு. ஐயாவுக்குப் பாராட்டு. ஜாக்கி சான் செய்யும் அத்தனை சேஷ்டைகளும் கபடி அரங்கில் அன்றே அரங்கேறியவைதான். அத்தனையும் இன்று நினைவேடுகளில் மட்டுமே பதிந்து கிடக்கின்றன.

கபடி விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் ஒலிக்கும். குறிப்பாக பஞ்சாபிலிருந்துதான் குரல் வலுவாக ஒலிக்கிறது. 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டு டெமான்ஸ்டிரேஷன் கேம் வகையில் ஆடிக்காட்டப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. சற்றே ஆராய்ந்தபோது, மகாராஷ்டிரத்தின் ஹனுமான் வியாயம் பிரசாரக் மண்டல் என்ற உடற்பயிற்சிக் கழகத்தினர் பெர்லினில் உடற்பயிற்சிகள் செய்து காட்டியதாகத் தெரிகிறது. இதற்காக ஹிட்லர் பதக்கம் அளித்தார் என்கிறது இந்து நாளிதழின் செய்தி. இந்த உடற்பயிற்சிக் கழகத்திற்கு நூறாண்டு ஆகப்போகிறது. இதன் கட்டிடத்தை காந்தி 1926இல் திறந்து வைத்தார் என்றும், நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வருகை தந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. ஆனால் ஒலிம்பிக்கில் கபடி இடம்பெற்றதாக ஆதாரபூர்வமான செய்திகள் ஏதும் இல்லை.

ஒலிம்பிக்கில் ஏதேனும் ஒரு விளையாட்டு சேர்க்கப்பட வேண்டும் என்றால், குறைந்தது மூன்று கண்டங்களில் ஐம்பது நாடுகளில் ஆடப்படும் விளையாட்டாக இருக்க வேண்டும் என்பது ஒலிம்பிக் விதி. கபடி இப்போது ஆசியக் கண்டத்தில் மட்டுமே - அதிலும் தெற்காசிய நாடுகளில் மட்டுமே ஆடப்படுகிறது. 

வங்கத்தில் கபடி தேசிய விளையாட்டு. ஈரானில் கபடி தேசிய விளையாட்டுகளில் ஒன்று. சீன தைபெய், நேபாளம், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் கபடி மிகவும் பிரபலம். இந்தியாவின் சகோதர நாடான பாகிஸ்தானிலும் கபடி பிரபலம் என்று கூறத்தேவையில்லை.

1990 ஆசிய விளையாட்டில் கபடி முதல் முறையாக இடம் பெற்றது. இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது - அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. 2010இல் ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி அறிமும் ஆனது, இந்திய மகளிர் தாய்லாந்தை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

கபடி உலகக் கோப்பை 2004இல் அறிமுகம் ஆனது. இந்தியா சாம்பியன் ஆனது. தொடர்ந்து 2007, 2010, 2011 உலகக் கோப்பையிலும் இந்தியா சாம்பியன் ஆனது, மகளிர் உலகக் கோப்பை கபடிப் போட்டி முதல்முதலாக 2012 ஜனவரியில் பீகாரில் நடைபெற்றது. இந்திய மகளிர் ஈரானை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

இங்கிலாந்து, நியூ சிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கபடி ஆடப்படுகிறது. 2010இல் பஞ்சாபில் நடைபெற்ற கபடி உலகக் கோப்பையில் இத்தாலியும் ஸ்பெயினும்கூட இடம் பெற்றன. 1979இல் ஜப்பானில் கபடி அறிமுகம் ஆனது. ஆசிய நாடுகளைத் தவிர வேறு நாடுகளைப் பொறுத்தவரை, கபடி அணிகளில் இடம்பெறுபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்தான். இன்றைய தேதியில் முப்பது நாடுகளில் கபடி ஆடப்படுவதாகத் தெரிகிறது.

ஆக, ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வேண்டுமானால் கபடி இன்னும் பல நாடுகளில் ஆடப்பட்டு ஒலிம்பிக் குழுவைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு முக்கியமான ஆட்டமாக வேண்டும். 2020 ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்படும் என்று இந்திய கபடி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நிகழ்ந்தால் 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் நிச்சயம்.

Wednesday 4 April 2012

குரங்குக்கும் கொஞ்சம் பட்ஜெட்


இது நேற்று நடந்தது. இன்று நடந்திருந்தாலும் அதில் பெரிய வித்தியாசம் எதுவும் இருந்திருக்காது. நேற்று மார்ச் 11 என்பது மட்டும்தான் வித்தியாசம் - அதாவது போன கணக்காண்டின் இறுதி மாதம். சரி, நடந்தது என்ன என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
நேற்று வானொலி நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது ஒரு நிகழ்ச்சி ஒலிப்பதிவுக்காக. இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். விஷயம் ஒலிப்பதிவு சம்பந்தப்பட்டதல்ல என்பதுதான் விசேஷம்.
அதற்கு முன்னால் ஒரு கேள்வி. நீங்கள் எப்போதாவது ரேடியோ ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறீர்களா? போயிருக்கிறவர்கள் அடுத்த பத்து பத்திகளை ஒதுக்கிவிட்டு மேலே போகலாம். போகாதவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு படிக்கலாம்.
வானொலி நிலையம், மைய அரசின் பாதுகாப்பு அதிகம் தேவைப்படுகிற அலுவலகம் அல்லவா? அதனால், நுழையும் வாசல்கள் எல்லாவற்றிலும் செக்யூரிட்டி இருக்கும். பாதசாரிகள் நுழைவதற்கான வாசலில் நுழைந்ததும் கீழே விரிக்கப்பட்டிருக்கிற பளபளவென மின்னும் வழுக்கும் மொசைக் டைல்ஸ் உங்களை மிரட்டும்.
சில நாட்கள் முன்னால் நான் போனபோது அங்கே வினைல் புளோரிங்தான் போடப்பட்டிருந்தது. பாவப்பட்டிருந்த கற்களில் காலை வைக்கவே பயமாய் இருந்தது. வழுக்கல் என்றால் வழுக்கல் அப்படியொரு வழுக்கல். ஒருவழியாக சர்க்கஸ் வித்தைக்காரன் மாதிரி பேலன்ஸ் செய்து, ஒருவழியாக வரவேற்பரையில் நுழைவுக்கான அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன்.
புதிய வழுக்கு மொசைக் கற்கள் எதற்கு, உள்ளே நுழைவதற்கான கதவு சாத்தப்பட்டிருந்தது எதனால் என்ற கேள்விகள் உள்ளே குடைந்து கொண்டே இருந்தன. ஒருவேளை தீவிரவாதிகள் திபுதிபுவென்று ஓடிவர முனைந்தால் வழுக்கி விழட்டும் என்று போடப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளுக்குத்தான் பாஸ் எதுவும் தேவையில்லையே. அல்லது இந்த மொசைக் கற்கள் போடுவதில் யாரேனும் ஒரு அதிகாரிக்கு காண்ட்ராக்டரிமிருந்து லாபம் கிடைத்திருக்கலாம். அல்லது யாராவது ஒரு விஐபி அண்மையில் வந்திருப்பாராக இருக்கலாம்.
இப்படி பல 'கலாம்'களை அலசிப்பார்த்துக்கொண்டே கம்பிவலை சுழல் கதவை நெருங்கினேன். அங்கே இருந்த செக்யூரிட்டி ஆட்கள் மும்முரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை பாலஸ்தீன பிரச்சினையை அலசிக் கொண்டிருக்கலாம். என்னை எதுவும் கேட்கவும் இல்லை. சோதனை செய்யவும் இல்லை. தீவிரவாதிகள் திபுதிபுவென உள்ளே ஓட வேண்டியதே இல்லை. எத்தனை கிலோ வெடிமருந்தையும் எடுத்துக்கொண்டு நிதானமாக பந்தாவாக நடந்து நுழைந்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்று தோன்றியது. அதைப்பற்றி இப்போது எதற்கு? நான் சுழல் கதவைக் கடந்து உள்ளே போனேன்.
நல்லவேளையாக உள்ளே அதுபோல வழுக்குக் கற்கள் பதிக்கப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. வட்ட வடிவில் அமைந்திருந்த தாழ்வாரம் வழியாக நடந்து நடந்து பிரிட்டிஷ் காலத்துக் கட்டிடத்தின் மையப் படிகளை அடைந்தேன். ஒவ்வொரு முறையும் வியப்பை ஏற்படுத்துகிற உயரமான கூரை. வட்டவடிவக் கூடத்தின் நடுவிலும் ஓரங்களிலும் பழைய கால வானொலிப் பெட்டிகள், ஒலிப்பதிவுக் கருவிகள் எல்லாம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இதைப் பார்க்கும்போதெல்லாம் மாமனார் வீட்டில் பழைய சாமான்களிடையே இன்னும் கிடக்கிற வால்வு ரேடியோவை இங்கே கொண்டு வந்து வைக்க வேண்டும் என்று வழக்கம்போல நேற்றும் நினைவு வந்தது. அங்கே இருந்த வானொலிப் பெட்டிகளைவிட அரதப்பழசு அது. நானும் ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் அந்த ரேடியோவைத் தூக்கி எறியுங்கள் என்று சொல்லி வெளியே எடுத்து வைப்பேன். நான் இருக்கிற நாட்கள் எல்லாம் பேரீச்சம்பழக்காரன் வரவே மாட்டான். நான் அடுத்த முறை மறுபடியும் மாமனார் வீட்டுக்குப் போகும்போது மீண்டும் அந்த ரேடியோ அதே இடத்தில் கம்பீரமாக அடைத்துக் கொண்டிருக்கும். அதற்கு ஆன்ட்டிக் வேல்யூ இருக்கும் என்று தெரிந்துதான் என் மாமியார் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறாரோ என்று எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது. இதை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று இன்னும் தெரியவில்லை. சரி அதை விடுங்கள்.
அந்த வட்டவடிவக் கூடத்திலிருந்து மேலே செல்லும் படிகளில் ஏறிச் சென்றால்தான் தமிழ்ப்பிரிவுக்குப் போகலாம். நானும் பார்த்துவிட்டேன் - நான் இடப்புறப் படிகளில் செல்லும் போதெல்லாம் யாரேனும் அந்த வழியில் இறங்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது படிகளில் நின்றபடி பேசிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் உட்கார்ந்து தின்று உட்கார்ந்து தின்று உட்கார்ந்து தின்று பொழுதுபோக்கிய பெரிய உடம்புக்காரர்கள். அவர்களைப் பற்றிய வர்ணனை இப்போது எதற்கு? நான் விஷயத்துக்கு வருகிறேன்.
மாடிப்படியேறி முதல் மாடிக்கு வந்து தமிழ்ப்பிரிவுக்குச் செல்ல வேண்டிய திசையில் திரும்பியதும் அங்கும் வட்ட வடிவத்தில் செல்லும் ஒரு வராந்தா. நானும் பார்த்துவிட்டேன் - வராந்தாவின் முதல் அறையை ஒட்டி வெளியே இரண்டு நாற்காலிகள் இருக்கும். அங்கே எப்போதும் இரண்டு மூன்று பியூன்கள் உட்கார்ந்து பீடி குடித்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். அரசு அலுவலகங்களுக்குள் பீடி குடிக்கக்கூடாது என்ற சட்டமெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை ஒரு ம...க்குச் சமம் என்பது அவர்களின் கண்களில் தெரியும். பக்கத்தில்தான் இருக்கிறது அதிகாரியின் அறை. இந்த பீடி நாற்றம் அங்கும் எட்டாமல் இருக்காது. ஒருவேளை அவருக்கு இது பழக்கமாகி விட்டிருக்கலாம். அல்லது அவரும் உள்ளே சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கலாம். எக்கேடு கெட்டால் என்ன, நாம் விஷயத்திற்குப் போவோம்,
மேலும் தொடர்ந்து நடந்தால் பத்திருபது அடி வைத்ததும் ஒரு வாட்டர்கூலர் வரும். அவ்வப்போது நீலக்கலர் பெயின்ட் அடித்த அடையாளங்கள் அதில் தெரியும். அதுவும்கூட ஸ்பிரே முறையில் பெயின்ட் அடித்ததல்ல. தில்லிக்கே உரித்தான வகையில் துணியால் தடவித் தடவி பெயின்ட் அடித்தது. பெயின்ட் அடித்த அடையாளங்கள் கோடு கோடாகத் தெரியும். சுற்றிலும் கம்பிவலை போடப்பட்டு சிறை வைக்கப்பட்ட ஒரு கூலர். கம்பிவலை பல இடங்களில் துருப்பிடித்திருக்கும். தண்ணீர் பிடிக்கும் பைப்புக்குக் கீழே ஒரு டிரே இருக்கும் - வீணாகி வழிகிற தண்ணீர் வெளியேறுவதற்காக. சில மாதங்களுக்கு முன்பு வரை மக்களின் நம்பகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் ஒரு சங்கிலியில் கோக்கப்பட்ட டம்ளர் ஒன்று அதன்மீது இருக்கும். அண்மைக்காலமாக அதையும் காணவில்லை. அதை எடுத்துக்கொண்டு போனவன் சங்கிலியோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போனானா அல்லது சங்கிலியிலிருந்து டம்ளரை மட்டும் எடுத்துக்கொண்டு போனானா என்பது இன்னும் எனக்குத் தெளிவாகவில்லை. அதிகம் போனால் பத்து ரூபாய் மதிப்புடைய டம்ளர். அதைப் போய் திருட வேண்டுமா என்ற கேள்விக்கும் எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
கூலரின் பைப்பில் எப்போதும் நீர்த்துளி பனித்துளிகள் போல கோத்துக்கொண்டிருக்கும். ஆனால் அதுவும் துருப்பிடித்து இற்றுப்போய் ஒருபக்கமாகச் சாய்ந்து இளித்துக் கொண்டிருக்கும். அங்கே டம்ளர் இருந்த வரைக்கும் தண்ணீர் பிடிக்கிற ஒவ்வொரு முறையும் ஷாக் அடிக்குமோ என்ற அச்சம் வராமல் இருந்ததே இல்லை. தண்ணீர் கீழே வடிந்து வராந்தாவில் ஓரடி அகலத்திற்கு ஈரமாக ஓடிக்கொண்டிருக்கும் அல்லது ஈர அடையாளம் இருக்கும். ஜாக்கிரதையாக அதைக் கடந்து செல்ல வேண்டும்.
கூலரைத் தாண்டியதும் வரும் ஒரு மரம். மாடி வராந்தாவில் மரம் எங்கே வந்தது என்று கேட்காதீர்கள். கீழே இருக்கும் ஒரு மரத்தின் கிளை மாடியின் கைப்பிடிச் சுவரைத் தொட்டுக்கொண்டு உள்ளே வரை நீள முயற்சி செய்து கொண்டிருக்கும். இதில் ஏதும் தவறில்லைதான். மரம் பசுமையாய் இருந்தால் எங்கேயும் அழகுதான். ஆனால் இந்த மரம் ஒரு பெரிய பிரச்சினை. என்ன... ஒருகாலத்தில் மரத்தை வெட்டியே கட்சி வளர்த்தவர்கள்கூட பசுமை இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்...மரம் எப்படி பிரச்சினையாகும் என்று கேட்கிறீர்கள் இல்லையா?
சௌத் பிளாக், நார்த் பிளாக் உள்ளிட்ட நாடாளுமன்றப் பகுதிகளில் அலுவலக நேரத்திலும் சுற்றித் திரிகிற பல அரசு ஊழியர்கள் மாதிரி சுதந்திரமாகச் சுற்றித் திரிகிற பல குரங்குகள் இந்த மரத்திற்கும் வரும். மேலே ஏறி மாடிக்கும் வந்துவிடும். தில்லிவாசிகளுக்கு இதில் வியப்படைய ஏதுமில்லை. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் பிரதமரின் நாற்காலியில் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்ததாம். பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் அது எத்தனை கோப்புகளில் கையெழுத்துப் போட்டு கிளியர் செய்தது என்ற செய்தி வரவில்லை என்பதுதான் என் வருத்தம்.
மேலும், குரங்கு அனுமாருடன் தொடர்புடையது. எனவே அதை மதிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் தில்லிவாசிகள் - குறிப்பாக அரசு அலுவலர்கள். அதனால் மதிய நேரங்களில் உணவு நேரத்தில் அல்லது ஒரு நாளுக்கு ஆறேழு முறை டீ குடிக்க வெளியே வரும்போது தாம் உண்ணும் உணவு அல்லது வேர்க்கடலை அல்லது கொய்யாப்பழம் அல்லது வாழைப்பழம் என்று சீசனுக்கு ஏற்றாற்போல எதையாவது கொடுத்து கடவுளுடன் சமரசம் செய்து கொள்வார்கள். நாடாளுமன்றமும் அதையொட்டி இருக்கும் பகுதிகளும் ரிட்ஜ் என்னும் காட்டை ஒட்டி இருப்பதால்தான் குரங்குகள் இங்கே அதிகம் உலவுகின்றன என்பதைவிட, இத்தகைய தர்மவான்களின் ஆதரவால்தான் இங்கே குரங்குகள் அதிகம் உலவுகின்றன என்பது அந்தக் குரங்குகளுக்கும்கூடத் தெரிந்த விஷயம். எனக்கும்தான். சரி. நேற்று என்ன நடந்தது என்று கேட்கிறீர்கள். இல்லையா? சொல்கிறேன்.


அன்றைக்கும் அப்படித்தான் ஒரு குரங்கு மரத்தின் மீதேறி மாடியை அடைந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் வழக்கம்போல ஸ்டுடியோ காலியாக இருக்குமா, ரிகார்டிங் முடித்துவிட்டு சீக்கிரம் வீடு திரும்ப முடியுமா என்ற சிந்தனையுடன் போய்க்கொண்டிருக்கையில் திடீரென்று ரஷ்ய அறையிலிருந்து வெளியே வந்தது ஒரு குரங்கு. நிச்சயமாக அது ரஷ்ய மொழி செய்திகளைப் படிப்பதற்காக உள்ளே போயிருக்காது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். சரி அதை விடுங்கள்.
குரங்கு உள்ளேயிருந்து வெளியே வந்தது. என்னைப் பார்த்தது. ஒரே தாவில் மாடியின் கைப்பிடிச் சுவரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. எனக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. வட்ட வராந்தா என்பதால் பீடி குடித்துக்கொண்டிருந்த பியூன்கள் என் பார்வை எல்லையில் இல்லை என்பதை திரும்பிப் பார்க்காமலே என்னால் சொல்ல முடியும். முன்னே போகத் தயக்கமாக இருந்தது. குரங்கு என்னைப் பார்ததது, மரத்தைப் பார்த்தது, கீழே பார்த்தது, சொய்ங் என்று தாவி. வெயில் திரையின் கயிறைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடியது. நிச்சயமாக எனக்குப் பொறாமை ஏற்படுத்துவதற்காக அது அப்படிச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும் என்றாலும் ஒரு கணம் எனக்குள் பொறாமைத் தீ பற்றியெரியத்தான் செய்தது.
அதைவிட வயிற்றுக்குள் அச்சத்தீ ஆட்டி வைத்தது. சாலையில் நடந்து செல்லும்போது தெருவோரத்தில் அதுபாட்டுக்கு உட்கார்ந்து கொண்டிருந்தாலும் சற்றே தலையைச் சாய்த்து நம்மைப் பார்க்கிற நாயின் பார்வை சில நொடிகளுக்கு அடிவயிற்றில் ஒரு இழுப்பு ஏற்படுத்துவது போல ஒரு அச்சம். சில மாதங்களுக்கு முன்புதான் என் நண்பர் ஒருவரை குரங்கு கடித்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். குரங்கு கடித்தாலும் பதினாலு ஊசிதான். நாய் கடித்தாலும் பதினாலு ஊசி. குரங்கு கடித்தாலும் பதினாலு ஊசியா? என்ன இருந்தாலும் குரங்கிலிருந்து பிறந்தவன்தானே மனிதன். அதனால் ஊசிகளைக் குறைத்துக் கொண்டால் என்ன? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்தக் கேள்விகளெல்லாம் இப்போது எதற்கு?
குரங்கு ஊஞ்சலாடுவதை நிறுத்தி விட்டு மீண்டும் சுவரில் உட்கார்ந்து கொண்டது. என்னைப் பார்த்தது, கீழே பார்த்தது, வராந்தாவின் மறுபக்கம் பார்த்தது. ஒருவேளை என் பார்வைக்கு எட்டாத அந்தப் பகுதியிலிருந்து யாராவது வந்து கொண்டிருக்கிறார்களோ என்று உள்ளுக்குள் பிறந்த நம்பிக்கை மீண்டும் குரங்கு என்னைப் பார்த்த பிறகும். அந்தப் பக்கத்திலிருந்து யாரும் வராததாலும் சிதைந்துவிட்டது. திரும்பிப் போகலாமா என்று ஒரு எண்ணம் வந்தது. அப்படியே திரும்புவதானாலும் சில நிமிடங்கள் கழித்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும். இல்லையேல் அங்கே உட்கார்ந்திருந்த பியூன்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் உடனே திரும்புவதைத் தடை செய்தது.
திடீரென்று குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டியது. நிச்சயமாக அது சிரிப்பாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். அசையாமல் நின்று கொண்டிருந்த எனக்குள் ஒரு யோசனை பளிச்சிட்டது. குரங்கு என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, நாமும் கொஞ்சம் சிரித்தால்தான் என்ன? என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் புன்னகை மன்னன் என்று பட்டம் பெற்றவன்தான். அப்படியொன்றும் என் சிரிப்பு அசிங்கமாக இருக்காது...  இருந்தாலும் குரங்கின் சிரிப்பை விடவா அசிங்கமாக இருந்துவிடும்... கொஞ்சம் நம்பிக்கை பிறக்கவே, நானும் சிரித்தேன். இருப்பினும் அந்தச் சிரிப்பு பல்லைக்காட்டாமல் வெறும் புன்னகையாக இருந்திருக்க வேண்டும். குரங்கு எந்த எதிர்வினையும் காட்டவில்லை. சில நொடிகள் கழிந்தன. குரங்கு மீண்டும் பல்லைக் காட்டியது, இந்த முறை எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. நானும் பல்லைக் காட்டினேன். அது கண்களை விரித்துப் பார்த்தது. மீண்டும் பல்லைக் காட்டியது. இப்போது எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டிருந்தது. குரங்கு ஒருவேளை நட்புப் பாராட்ட விரும்புகிறதோ என்றும் தோன்றியது. நானும் பல்லைக் காட்டினேன். ஒருவேளை இந்த முறை என் வாய் சற்றே அதிக அகலமாகத் திறந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை, குரங்கு எழுந்து நின்று தலையை முன்னே நீட்டி பல்லைக் காட்டியது. இதுவரை கிடைத்த எதிர்வினைகளால் எனக்குத் தைரியம் மிகவும் அதிகமாகி விட்டிருக்க வேண்டும். நானும் கொஞ்சம் அதிகமாகவே பல்லைக்காட்டி, தலையை முன்னே நீட்டி பழித்துக் காட்டினேன். கூடவே ஒரு உற்சாகத்தில் 'ஹீ...' என்று குரலும் எழுப்பி விட்டேன்.
அவ்வளவுதான், குரங்குக்குக் கோபம் வந்திருக்க வேண்டும்... இந்த அற்ப மானிடன் என்னை நகலடிக்க முனைகிறானே என்று தோன்றியிருக்க வேண்டும். ஜிவ்வென்று தாவி என்னை நோக்கி முன்னால் குதித்தது. பேலன்ஸ் தவறி ஸ்கேட்டிங் செய்வது போல மூன்றடி தூரம் சறுக்கிக் கொண்டே என்னை நோக்கி வந்தது. அப்போது நான் எழுப்பிய சத்தம் ''''வா, ''''வா. ''பே''வா என்று இப்போது என்னால் சொல்ல முடியவில்லை. தூக்கத்தில் பயங்கரக் கனவு கண்டால் எழுப்புகிற சத்தம். சத்தம் போட்டவாறே கணப்பொழுதில் ஓடத் திரும்பினேன். ஆனால் என்ன அதிசயம்? குரங்கு அப்படியே மீண்டும் சுவரின்மீது தாவியது. அங்கிருந்து மரத்தின்மீது தாவியது. கிளைக்குக் கிளை தாவி மாயமாய் மறைந்துவிட்டது. ஒருவேளை அதன் தாவலைக் கண்டு நான் பயந்தது போலவே என் அலறலைக் கேட்டு அதுவும் பயந்திருக்கலாம்.
அந்த இடைப்பட்ட கணநேரத்தில் நான் பத்தடி பின்வாங்கி விட்டிருந்தேன். பின்னாலிருந்து 'க்யா ஹுவா?' என்ற குரல்கள் எழுந்தன. ''ஒன்றுமில்லை, ஒரு குரங்கு வந்தது. போய் விட்டது'' என்று அவர்களைப் பார்த்து குரல் கொடுத்துவிட்டு தைரியமாய் இருப்பவன் போல மேலே போனேன். யாரும் பார்க்கவில்லை என்றாலும் மார்பின் படபடப்பையும். கால்களின் நடுக்கத்தையும் சமாளிப்பது சிரமமாகத்தான் இருந்தது. தமிழ்ப் பிரிவு ரூமுக்குப் போனேன். அங்கே யாரும் இருக்கவில்லை. நான் போட்ட சத்தம் பியூன்களுக்குக் கேட்டிருக்குமா என்ற சந்தேகம் உள்ளுக்குள் உளைந்து கொண்டே இருந்தது. நிச்சயம் கேட்டிருக்கும். அல்லது இந்த மாதிரிச் சத்தம் அவர்களுக்குப் பழகிப் போனதாகவும் இருக்கலாம். இருந்தாலும் அவர்களின் கண்களைச் சந்திக்க வெட்கப்பட்டுக்கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் குருமூர்த்தி வந்துவிட்டார். நான் எதுவும் நிகழாதது போல குரங்கு வழியில் நின்றதைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு விட்டு, இதற்கு ஏதாவது செய்யக்கூடாதா, குரங்குகளை விரட்ட வழி இல்லையா? இங்கே வந்து பேப்பர்களை எல்லாம் கிழித்து விடாதா என்றெல்லாம் அக்கறையாகக் கேட்டேன். ''ஏன் இல்லாமே? இந்தக் குரங்குகளை விரட்டுறதுக்குன்னே கறுப்பு மூஞ்சிக் குரங்கு வச்சிருக்காங்க. அதைப் பாத்ததும் இந்தக் குரங்குகளெல்லாம் ஓடிப்போயிரும்'' என்றார் அவர்.
நானும் பலமுறை பார்த்திருக்கிறேன் - சௌத் பிளாக், நார்த் பிளாக் கட்டடங்களுக்கு அருகே ஒரு ஆள் சைக்கிளில் போவான். அவன் சைக்கிள் கேரியரில் கறுப்பு மூஞ்சிக் குரங்கு ஒன்று உட்கார்ந்திருக்கும். அதைப் பார்த்ததும் சாலையில் திரியும் குரங்குகள் எல்லாம் 'கீச்...  கீச்... '' என்று கத்திக்கொண்டே மாயமாய் மறைந்து விடும். சில குரங்குகள் அப்படியும் தைரியமாக காம்பவுண்ட் சுவர்களின் மீதோ அல்லது கம்பி வலைகளின்மீதோ உட்கார்ந்திருக்கும். சைக்கிள்காரன் ஸ்டாண்ட் போட்டுவிட்டு. கேரியரிலிருந்து குரங்கை இறக்குவான். கறுப்பு மூஞ்சிக் குரங்கு நாலடி எடுத்துவைக்கும். அதுவரை தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டிருந்த குரங்குகள் ஓட்டமாய் ஓடி மறைந்துவிடும்.
சைக்கிள்காரனும் கறுப்பு மூஞ்சிக் குரங்கும் இப்படியே பகல் முழுவதும் டியூட்டி செய்துவிட்டுப் போவார்கள். இந்தக் கறுப்பு மூஞ்சிக் குரங்கின் வேலைக்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் என்றும், இப்படிப்பட்ட குரங்குகளை சப்ளை செய்தே சில நிறுவனங்கள் லட்ச லட்சமாய் சம்பாதிப்பதாகவும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன், அந்த விஷயம் நினைவுக்கு வந்ததும் ''அந்தக் கறுப்பு மூஞ்சிக் குரங்குக் காரனைக் கொண்டுவந்து இதையெல்லாம் விரட்டலாமே?'' என்று கேட்டேன்.
''செய்யலாம்தான். ஆனா இந்த வருஷம் குரங்குக்காக வைச்சிருந்த பட்ஜெட் முடிஞ்சு போச்சு மார்ச் முதல் தேதியே... அதனாலதான் இந்த பத்திருபது நாளா தொல்லை தாங்க முடியல. இனி அடுத்த பட்ஜெட்டுல அலொகேட் ஆனப்புறம்தான் கறுப்பு மூஞ்சிக் குரங்குக்காரனைக் கூப்பிட முடியும்'' என்றார் குருமூர்த்தி.
இதுதான் சிக்கல். மானியக் கோரிக்கை பற்றிய விவாதத்தில் யாராவது எம்.பி. கேள்வி எழுப்பினால் பத்திரிகைகளில் செய்தி வரும். ரேடியோ ஸ்டேஷனுக்கு குரங்குக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று எவராவது கேட்க முடியுமா?
இனி அடுத்த வருஷம் மார்ச் மாதத்தில் வானொலி நிலையத்துக்குப் போவதாக இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே, அடுத்த மார்ச் மாதத்தில் இந்த விஷயம் ஞாபகத்தில் இருக்க வேண்டுமே என்ற கவலையோடு திரும்பி வந்தேன்.
 இது நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த மார்ச்சிலும் முன்னெச்சரிக்கை தோன்றவே இல்லை. வானொலி நிலையம் இப்போது புதிய கட்டிடத்துக்கு மாறி விட்டது. அதனால் என்ன... நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் என்பதுபோல அங்கும் வந்து விட்டன குரங்குகள். நேற்றும் குரங்கோடு ஒரு திடீர் நேர்முகம் கிடைத்தது. முந்தைய அனுபவம் தந்த பாடத்தால் சற்று நேரம் ஒதுங்கி நின்று மோதலை தவிர்த்துக்கொண்டேன். அடுத்த மார்ச் மாதம் தவறாமல் நினைவு வைத்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை.
அப்புறம் இன்னொரு விஷயம், இந்த சம்பவத்தை நான் யாருக்கும் இதுவரை கூறவில்லை. அதனால் நீங்களும் யாருக்கும் சொல்ல வேண்டாம். சரியா?

Sunday 1 April 2012

படித்தவர் சூதும் பாவங்களும்...


முன் குறிப்பு - இன்று முதல் என் வலைப்பூவின் தலைப்புக் கவிதை மாற்றப்படுகிறது.


கூடங்குள விவகாரத்தில் ஜெயபாரதன் என்பவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு எழுதியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அவர் எழுதிய சில மறுப்புகளுக்கு புள்ளிவிவரங்களுடன் அவருடைய வலைப்பக்கத்திலும் கேள்விகள் எழுப்பினேன். வேறு பலரும் கேள்விகள் எழுப்பினர். அதற்கு புள்ளிவிவரத்துடன் பதில்தர முடியாத கோபமோ என்னவோ, தொடர்ந்து மின்னஞ்சல்களும் பின்னூட்டங்களும் அனுப்பத் துவங்கி விட்டார். அவற்றை முந்தைய பதிவின் பின்னூட்டங்களில் நீங்கள் பார்க்க முடியும். சிலவற்றை என் அஞ்சலுக்கு மட்டுமே அனுப்பினார். தன் வலைப்பக்கத்தில்கூட வெளியிடவில்லை.

பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப்பற்றும் குருதி, எலும்பு, சதை எல்லாவற்றிலும் பதிந்திருக்கிறது என்று எழுதுவதைப் படித்து விட்டு, ஆஹா என்று புல்லரித்துப்போன சிலர் பாராட்டுவதில் புளகாங்கிதம் அடைந்திருந்தவரை கேள்விகள் கேட்டால் அவரால் பொறுக்க முடியுமா...

அதனால்தான் ஒவ்வொரு அஞ்சலிலும் ஒவ்வொரு தொனி - புலம்பல், குழப்புதல், பொருந்தாத கூற்றுகள், மிரட்டல் எல்லாம் கலந்தவை அவை. அவரிடம் கேட்ட கேள்விகள் சரியானவையா என்பதை அவருடைய வலைதளத்திலேயே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு அவரிடம் பதில்கள் இல்லை என்பதையும் பார்த்துக்கொள்ளலாம். ஜெயபாரதன்

அலெக்ஸ் என்பவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு (இந்தக்கேள்விகள் ஞாநியால் பெரிதும் எழுதப்பட்டவைதான்) அணுஉலைக்கு ஆதரவாக ஜெயபாரதன் அளித்த பதில்களும், அதற்கு நான் எழுப்பிய கேள்விகளும் கீழே அட்டவணையாகத் தரப்பட்டுள்ளன.

வெற்று மார்தட்டல்களை நீங்கள் படிக்க நேரலாம் என்பதற்காக வருந்துகிறேன். ஆனால் நேர்மையான வாதங்களை முன்வைப்பதற்கு இது தேவைப்படுகிறது. ஞாநி சில நேரங்களில் பின்னூட்டங்களுக்கு கோபம் தொனிக்க பதில் எழுதுவது ஏன் என்று இப்போது புரிகிறது. இரண்டு மாதங்களாக எழுதி வருபவனுக்கே இந்த நிலை என்றால் இருபது ஆண்டுகளாக எழுதி வருபவருக்கு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

அலெக்ஸ் வினாக்களுக்கு (சிவப்பில்) ஜெயபாரதன் பதில்கள்
ஜெயபாரதனுக்கு என் கேள்விகள்
1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஜப்பானில் 52 அணு உலைகள் நிறுத்த நிலையில் சோதிக்கப்பட்டுச் செப்பனிடப் படுகின்றன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு மூடப்பட்ட ஒரே அணு உலை செர்நோபில் நாலாவது யூனிட் ஒன்றுதான். புகுஷிமா விபத்துக்குப் பிறகு உலகில் ஓர் அணு உலை கூட மூடப்பட வில்லை. நிறுத்திய அணு உலைகளில் வெப்பம் தணிப்பு நிகழ்ந்து இயங்கிய நிலையில் அவை யாவும் உயிருடன் உள்ளன. நிறுத்திய அணு உலைக்கும், மூடிய அணு உலைக்கும் வேறுபாடு உள்ளது.
1. ஜப்பானில் அணுஉலைகள் சோதிக்கப்படுகின்றன, அங்கே அதிகரித்து வரும் மக்களின் எதிர்ப்பையும் மீறி விரைவில் இயக்கப்படும் என்றே வைத்துக்கொள்வோம். வலுவான அணுசக்தி நெறிப்படுத்து ஆணையம் ஒன்றை உருவாக்குவது பற்றி தீவிர ஆலோசனை நடந்து வருகிறது அங்கே. மேலும் விவரங்களுக்கு நாளைய செய்திகளைப் பார்க்கவும். அதுவும் எப்படி அணுஉலை நிறுவனங்களின் தாக்கத்திற்கு ஆளாகாத, முழு சுதந்திரம் கொண்ட நெறிப்படுத்தும் ஆணையம். ஒழுங்குக்குப் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள் என்பது உலகுக்கே தெரியும். அவர்களே மறுபரிசீலனை செய்து பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வலிமையான நெறிப்படுத்து முகமை அமைக்கப் போகிறார்கள். நம் இந்தியாவில் குற்றவாளி, வழக்குரைஞர், சாட்சி, நீதிபதி எல்லாம் ஒருவரேதான் இங்கே ஜப்பானை உதாரணம் காட்ட எந்தத் தகுதியும் இல்லை.
2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?
இந்திய அணு உலைகளில் கதிரடி வீசும் சிறு விபத்துகள் நிகழ்வது உண்மைதான். உலகில் இயங்கும் 430 அணு உலைகளிலும் நேர்ந்துள்ளன. இவற்றால் பாதிப்பு நேருவதில்லை. இந்தச் சிறு தவறுகளால் அணு உலைகள் மூடப் படுவதில்லை. காரணங்கள் ஆய்வு செய்யப் பட்டு அதே தவறு மீளாமல் கண்காணிப்பர்.
2. இந்திய அணுஉலைகளில் விபத்தே ஏற்பட்டதில்லை என்பதிலிருந்து கீழே இறங்கி இப்போது விபத்துகள் ஏற்படத்தான் செய்கின்றன…. ஆனால் கதிரடியால் யாரும் உயிரிழந்ததில்லை என்று சாக்குப்போக்கு சொல்கிறீர்கள். ஜப்பானில்கூட உயிரிழந்தவர்கள் உண்மையில் எத்தனை பேர் என்ற முழுமையான தகவல் இதுவரை தெரியாது. இங்கே என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதை எவரும் ஊகித்துக்கொள்ளலாம்.
இதற்கு பதிலாக ஜெயபாரதன் எழுதியது விபத்தே ஏற்பட்டதில்லை என்று நான் கூறவில்லை.
3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
டாகடர் அப்துல் கலாம் கூறிய 57 மரண நபர்கள் விபத்தின் போதும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் உயிரிழந்தவர். கார்பசாவ் கூறியது 25 வருட மொத்த எண்ணிக்கைமிருவர் கூற்றும் மெய்யே.
3. 57 மரண நபர்கள் விபத்தின் போதும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் உயிரிழந்தவர் என்று அப்துல் கலாம் கூறவில்லை. அப்துல் கலாம் சொன்னது இதுதான் – “செர்னோபில் அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கேன்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 4000 பேர்கள் என்றும், நேரடியாக இறந்தவர்கள் 57 பேர்கள் என்றும் UNSCEAR என்ற அமைப்பு கணித்திருக்கிறது.
அணுஉலை கதிரியக்கத்தினால் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அணுஉலை விபத்தின் உயிரிழப்புகளில் விஞ்ஞானிகள் சேர்க்க மாட்டார்கள் போலும்.
4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?
கதிரியக்கத் தீவிர அளவே புற்றுநோய் விளைவைத் தூண்டுவது. சிறியதளவு கதிரடியை உடல் தாங்கிக் கொள்ளும். குமரிக்கரை மணலில் தோரியம் உள்ள மானசைட் மணல் ஏராளமாய் இருக்கிறது. அங்கே வாழும் தமிழரும், கேரளா மக்களும் திடகாத்திரமாய் இருக்கிறார். தோரியம் எடுக்கும் ஆலையும் அங்கே உள்ளது. கல்பாக்கத்தின் அருகே வாழ்பவர் சிலர் கதிரடி பட்டுப் புற்று நோயால் மடிகிறார் என்பதை டாகடர் சாந்தா மறுத்துள்ளார்.
4. குமரிப் பகுதியில் தோரியம் இருப்பது பற்றிய விழிப்புணர்வே இப்போதுதான் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் பற்றிய ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றால்தான் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்புகள் உள்ளன என்பது தெரிய வரும். சாந்தா அம்மையாரைப் பொறுத்தவரை, கதிரியக்கத்தால் புற்றுநோய் வராது என்று சொல்லும அளவுக்குப் போய்விட்டார்.

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மை யானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏராளமான அணு உலைகள் ஆற்றின் கரையிலும், ஏரிக் கரையிலும் ஜனத்தொகை மிக்க நகரங்களின் அருகில்தான் உள்ளன. ஜனத்தொகை பெருகினால் அணு உலையை நகர்த்திச் செல்ல முடியாது.
5. அமெரிக்காவிலும் கனடாவிலும் கண்காணிப்பு அமைப்புகள் வலுவாக அமைக்கப்பட்டு தீவிரமாக இயங்குகின்றன. த்ரீமைல் தீவு விபத்துக்குப் பிறகு ஒரு லட்சம் கோடி டாலர் செல்வு செய்து கசிவை சுத்தம் செய்தார்கள். அதை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது.
6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
1974 அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு மேலை நாடுகள் இந்தியாவுக்கு அணு உலைச் சாதனங்களை விற்க மறுத்து விட்டன. அதனால் இந்தியா தன் காலில் நிற்க வேண்டியதாயிற்று. 1974 இல் இந்தியாவிடம் இருந்தவை 4 அணுமின் உலைகள். 2012 இல் இப்போது உள்ளவை 20. 1988 இல் ரஷ்யா மட்டும் 1000 மெகாவாட் இரட்டை அணுமின் உலைகள் கட்ட கூடங்குளத்தில் முன்வந்தது. தாராப்பூரில் 500 மெகாவாட் இரட்டை கனநீர் அணு உலைகளை இந்தியா முழுக்க முழுக்க சுய முற்சியில் செய்து இயக்கியது ஒருமகத்தான சாதனை.
6. திரிக்கப்பட்ட தகவல். 1974இல் அணுவெடி சோதனைக்குப் பிறகு அணுஉலைகளை விற்க மறுத்து விட்டன என்றால் 1981, 84, 86, 91, 92, 93 என்று தொடர்ச்சியாக அணுஉலைகள் எப்படி உருவாயினசரி, தடை விலகியபிறகு உருவானவை என்றே வைத்துக்கொண்டாலும், மன்மோகன்-அலுவாலியா கூட்டணி அறிமுகம் செய்த உலகமயமாக்கம் தொடங்கி 20 ஆண்டுகளில் சுமார் 12 உலைகள் நிறுவப்பட்டு இருபது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அணுஉலை மின்சாரத்தின் சராசரி உற்பத்தி 60 சதவிகிதம்தான். இத்தனை ஆண்டுகளாக அதிகரிக்காத உற்பத்தி விகிதம் இப்போது கூடங்குளம் வந்ததும் அதிகரித்து விடுமா என்னஒருவேளை கூடங்குளத்திலிருந்து வேறு அணு உலைகளுக்கு கடன் கொடுத்து அதன் கணக்கில் காட்டப்படுமோ என்னவோ
7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
இது விபரம் தெரியாத மூடர் கூறும் தவறான கருத்து.
See this site for all the details [http://164.100.50.51/ (Nuclear Power Corporation of India Ltd)]
8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.
7 – 8. இது விவரம் அறிந்த விஞ்ஞானி கூறும் தவறான தகவல். இணைத்துள்ள சுட்டியில் முழுதகவல் கிடைக்காது. சரியான தகவல் பெற
http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=75
கல்பாக்கத்தின் உற்பத்தித் திறனை எவரும் இங்கே பார்த்துக்கொள்ளலாம் சராசரி 50 சதவிகிதத்துக்கும் குறைவுதான். இப்போதுதான் 65ஐ எட்டியுள்ளதாக காட்டப்படுகிறது.


கூடங்குளம் என்ன லட்சணத்தில் இயங்கப்போகிறது என்பதை நாமும் பார்க்கத்தானே போகிறோம்நாராயணசாமிகளுக்குக் கவலை இல்லை. நாளுக்கு ஒரு அறிக்கை விட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். உங்களைப் போன்றவர்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.
9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.
9. மழுப்பல். இதுகுறித்து ஆய்வு செய்யப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் தைரியம் இல்லாததால் வருகிற பதில்.

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.
10. இதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது பொய். கூடங்குளம் அணுஉலை பற்றிய விளக்க வரைபடம் ஒன்று அதன் வலைதளத்தில் இருக்கிறது. எதிர்பார்க்கப்படும் சுனாமியின் ஆபத்து என்று சுட்டிக்காட்டியிருப்பது வெறும் 5.4 மீட்டர்தான். அதற்காக 8 மீட்டர் உயர பாதுகாப்பு இருப்பதாகத்தான் அது காட்டுகிறது. உண்மையில் 2004 சுனாமியின் உயரம் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?
ரஷ்யச் சாதனங்கள் உள்ள கூடங்குளம் அணுமின் உலைகள் இயங்கட்டும் முதலில். ஊழல் இல்லாத நிர்வாகம் எங்கே உள்ளது ?
11. ஆக, இங்கும் ஊழல் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்த ஊழல் நிர்வாகம்தான் பாதுகாப்பான அணுஉலைகளை அமைக்கப்போகிறது இல்லையா.!!

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை. கற்பனைக்கு எல்லை இல்லை.
12. தவறான யூகம் அல்ல, நியாயமான அச்சம். ஜப்பானில்கூட யாரும் இப்படி ஒரு சுநாமி வரும் என்று கற்பனைகூட செய்திருக்கவில்லைதான். இயற்கைச் சீற்றங்கள் லாஜிக் பார்ப்பதில்லை.

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இந்தியா அரசு ஆயுள் காப்பீடுக்குத் தன் அணு உலைகளுக்குப் பொறுப்பேற்று உள்ளது. மற்ற நாடுகளுக்கு நாம் நியாயம் கூற முடியாது. தேவைக்கு அந்நிய அணு உலை வாங்குவது இந்தியா. அதன் நிபந்தனையை அந்நிய நாடு ஒப்புக் கொள்ளா விட்டால் என்ன ?
13. இது என்ன பதில் என்று புரியவில்லை. இந்திய அரசின் அணு உலைகளுக்கு இந்திய அரசே காப்பீடாஅதாவது, ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் இந்திய அரசுதான் இழப்பீடு தர வேண்டும் என்பதுதானே பொருள். அது வெளிநாட்டு இயந்திரத்தின் கோளாறாக இருந்தாலும் இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் இல்லையாஇதைத்தானே எல்லாரும் எதிர்க்கிறார்கள்.
14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியா தன் தேசீயப் பாதுகாப்புக்குத் தனிப்பட்ட விதியை வைத்துள்ளது அதை யார் குறை கூறினால் என்ன ? புகார் செய்தால் என்ன ? யாரும் மாற்ற முடியாது. கோபாலகிருஷ்ணன் கட்டுப்பாட்டை அமெரிக்க முறையில் மாற்ற விழைகிறார். இந்தியப் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் விதிமுறைகள் ஏற்றதல்ல.
14. இந்தியாவுக்கு அமெரிக்க வழிமுறைகள் ஏற்றதில்லையாஅது எப்படிஎன்னதான் வல்லாதிக்க நாடாக இருந்தாலும் நெறிப்படுத்து முறைகள் அங்கே சற்று வலுவாக உள்ளன என்பதாலாஅமெரிக்காவில் அதிகம் மூடி மறைக்க முடியாது, இந்தியாவில் எல்லாவற்றையும் மூடி மறைக்கலாம் என்பதாலாமற்றதெற்கெல்லாம் அமெரிக்கா வேண்டும். கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் என்றால் மட்டும் அமெரிக்கவழிமுறை இந்தியாவுக்கு ஒத்துவராது, இல்லையாநல்ல வாதம் ஐயா இது. அப்போதுதானே அணுஉலை நிறுவனங்கள் தம் இச்சைப்படி எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ள முடியும்

15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அந்த அதிகாரிகளைக் கேளுங்கள்
15. ஏன் இப்படி ஆத்திரப்படுகிறீர்கள்பதில் இல்லை என்பதாலாநீங்கள் தூக்கிப்பிடித்த லாம்பார்க் குரலுடன் உங்கள் குரலும் ஒத்திசைகிறது என்பது பகிரங்கமாகி விட்டது என்பதாலா
குறிப்பு லாம்பார்க் என்பவர், சிஎப்எல் விளக்குகளால் எந்தப் பயனும் இல்லை என்றும் கட்டுரை எழுதியவர்

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

கூடங்குளம் இப்போது இயங்கப் போகிறது. ஆனால் அணு விஞ்ஞானி உதயகுமாரை எந்த விஞ்ஞானியும் மாற்றிவிட முடியாது.
16. அதுதான் தெரிகிறதேநாங்கள் யாருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்ல, நாங்கள்தான் எல்லாம் அறிந்தவர்கள்நாங்கள் போட்டதுதான் திட்டம், நாங்கள் வைத்ததுதான் சட்டம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எது லாபம் தருவதோ அதுதான் நாட்டுக்கு நல்லது. எவருடைய கேள்வியும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

ஆணவத்தால் வரும் அறியாமை, அறியாமையால் வரும் ஆணவம் இரண்டுமே ஆபத்தானவை.
மனச்சாட்சியையும் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன் என்று கூறுவதைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்….

இனி, என் முந்தைய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்ப்போம்.

பின்னூட்டம் 1 -   27 மார்ச் 2012
30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் உலைகளைத் "தேவையான தீங்குகள்" என்று தெளிவாகத் தெரிந்துதான் இயக்கி வருகின்றன, பேரளவு மின்சக்தி கிடைப்பதால்.
அணுமின் உலைகள் இன்னும் 25 - 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், கதிர்வீச்சில்லாத அணுப்பிணைவு (Nuclear Fusion Power) நிலையம் வாணிப ரீதியாக வரும்வரை.
30க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தனியார்வசமே இருந்தாலும் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கடுமையாக உள்ளன. ஜப்பானிலும் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பற்றி தீவிரமாக பரிசீலிக்கப்படு வருகிறது. இந்தியாவில் கட்டுப்பாடு முழுக்கவும் அணுசக்தித்துறையிடம் மட்டுமே உள்ளது.
அணுப்பிணைவு 2050வாக்கில் வரலாம். நம் அடுத்த தலைமுறையினர் அதை முடிவுசெய்து கொள்ளட்டும். ஆபத்தான இப்போதைய தொழில்நுட்பத்தை நம் எதிர்கால சந்ததிகளின்மீது சுமத்த நமக்கு உரிமை இல்லை என்பதுதான் இன்றைய வாதம்.

பின்னூட்டம் 2 - 27 மார்ச் 2012 
மதுவும், சிகரெட்டும் கோடான கோடி ரூபாய் வருமானம் தருவதால் அவற்றைத் தமிழக அரசாங்கம் நிறுத்துமா வென்று கேளுங்கள்.
பாமரத்தனமான கேள்வியாகத் தோன்றவில்லையா. சிகரெட்டும் மதுவும் அதை நுகர்வோர்கள் தீமை என்று அறிந்தே பயன்படுத்துவது. அது தனிநபர் விவகாரம், அதிகபட்சம் குடும்பத்தை மட்டும் பாதிக்கக்கூடியது. அணுஉலையை இவற்றுடன் ஒப்பிடுபவர் பொறியிலாளராம். இதற்கு பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார் அருண் என்பவர், நானும் கேட்டேன், அதற்கும் அவருடைய வலைதளத்தில் பதில் இல்லை.

பின்னூட்டம் 3 - 29 மார்ச் 2012 
ஷாஜஹான் இந்திய அணுசக்தித் துறை பற்றி அரைகுறை விஞ்ஞான அறிவோடு மூடத்தனமாக என்னைப் பற்றி எழுதி இருக்கிறார். டாக்டர் கோபாலகிருஷ்ணன் அமெரிக்க முறையில இந்தியப் பாதுகாப்பு விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அமெரிக்காவில் இந்தியா போலின்றி அணுவியல் துறைகள் தனியார் வசம் உள்ளன. ஆதலால் அந்த விதிமுறைகள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல.
எனக்கு விஞ்ஞான அறிவு கிடையாது என்பதில் எனக்கே ஐயமில்லை. பகுத்தறிவுதான் என்னைக் கேள்வி கேட்க வைக்கிறது. விஞ்ஞான அறிவுள்ளவர்கள் எல்லாம் பகுத்தறிவைக் கழட்டி வைத்துவிட்டு ஆட்சியாளர் அறிவிப்புகளுக்கு ஆமாம்சாமி போட்டால் அது என்ன அறிவு...
அதுசரி, கோபாலகிருஷ்ணன் அதை மட்டும்தான் சொன்னாரா... அப்பணசாமியின் வலைப்பூவில் படிக்கலாமே... - அப்பணசாமி

பின்னூட்டம் 4 -  29 மார்ச் 2012
கூடங்குளம் போன்ற ஓர் அணுமின் உலை 1000 மெகாவாட் மின்சார ஆற்றல் 30 ஆண்டுகள் மின்கடத்தில் அனுப்பி வருவதால், மின்சாரமோடு 100 கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி அது நீடித்து ஓடச் சாதனங்கள் தயார் செய்வதுடன், ஆயிரக்கணக்கான பேருக்கு ஊழியமும் ஊதியமும், அரசாங்கத்துக்கு வருமானம் தருகிறது.
In India Atomic Power Industries & Space Exploration are two major components of its sustaining Infrastructures
ஷாஜஹான் கண்களுக்கு கிட்டப் பார்வை தவிர தூரப் பார்வை இல்லை.
அதீத உணர்ச்சிவசப்பட்டதால் என்ன எழுத வந்தாரோ அதை எழுத இயலவில்லை போலத் தெரிகிறது. அணுஉலைகளும் வானியல் ஆய்வும் எத்தனை கோடிப்பேருக்கு அல்லது எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளித்தன என்று புள்ளிவிவரத்தோடு குறிப்பிட வேண்டும். வெற்று வாதத்தை முனவைத்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. இந்திய அணுசக்தித் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைத்த வேலைவாய்ப்பு விகிதம் என்ன என்பதை ஆதாரத்தோடு முன்வைப்பார் என்று நாம் எதிர்பார்க்கவே தேவையில்லை. ஆதாரத்தோடு முன்வைக்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதே இல்லை. 
எனக்கு தூரப்பார்வை இல்லை என்று எழுதியிருக்கிறார் பொறியாளர். தூரப்பார்வை என்றால் தொலைவில் உள்ளது தெரியாது என்று பொருள். ஆக, இவர் எனக்கு தொலைநோக்கு இருக்கிறது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி சொல்லலாமா...

பின்னூட்டம் 5 - 29 மார்ச் 2012
நான் யாரென்று "புதியவன்" தெரிந்து கொள்ள வேண்டும். 
ஷாஜஹான் உண்மையைத் திரித்துக் காட்டி என்னைத் தாழ்த்தித் தன்னை உயர்த்தி உள்ளார்.
அவர் வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் குறை கூறுவதைத் தவிர?
இது என்ன மிரட்டலா... நீங்கள் யார் என்பதுதான் உங்கள் தளத்திலேயே இருக்கிறதே... பாரதப்பற்று பிடித்தாட்ட, பாரதத்துக்கு 18 அணு உலைத் தொழில்நுட்பத்தை விற்பனை செய்திருக்கும் கனடாவின் காண்டுவுக்குச் சேவை புரிந்தவர் என்று நீங்களே எழுதியிருக்கிறீர்களே இதற்கும் மேல் என்ன தெரிந்துகொள்ள வேண்டும். 
குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் நக்கீரன் வரிசையில் என்னையும் சேர்த்து விட்டார் போலத் தெரிகிறது. நல்லது. அத்துடன் நான் என்னை உயர்த்திக்கொள்ள என்ன எழுதினேன் என்பதையும் சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும். நான் எதையும் சாதித்ததில்லை - குறைந்தபட்சம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவடி தூக்கியதில்லை, தூக்குவதில்லை, தூக்கப்போவதும் இல்லை. 

அஞ்சல் 1 - 27 மார்ச் 2012
இந்தியக் குடியரசைக் கிண்டல் பண்ணும் திராவிடத் தமிழகத் தேசீயவாதிகளுக்கு இது மூன்றாம் பாடம் :
1.  பெரியாரின் திராவிட நாடுப் பிரிவினைப் போராட்டம்
2.  வடக்கில் ஆயுத மனிதன் பிந்திரன்வாலாவின் காலிஸ்தான் பிரிவினைப் போராட்டம்.
3.  உதயக்குமாரின் கூடங்குள அணுமின் உலை நிறுத்தப் போராட்டம்.
பத்தாயிரம் மீனவக் கூட்டம் நூறு கோடி மத்திய அரசின் கையை முறிக்க முயன்றது.
விவாதிக்கப்படும் விஷயத்திற்குத் தொடர்பில்லாமல் பிந்தரன்வாலே, திராவிட நாடு என்றெல்லாம் உளறுபவரை என்னவென்று சொல்வீர்கள்...

அஞ்சல் 2 - 27 மார்ச் 2012
செர்நோபில் விபத்து தவிர உலக அணுமின் உலைகளில இதுவரை ஒருவர் கூட மரிக்க வில்லை.  புகுஷிமா  அணு உலை மேற்தள வெடிப்பில் ஒருவர் கூட மடியவில்லை.
மற்றொரு அபார உண்மை. இத்தகைய உண்மைகளை இவர் முன்வைக்கிறார் என்பதால்தான் நான் முந்தைய பதிவுக்கு தலைப்பு வைத்தேன் - உண்மை எனப்படுவது யாதெனில்....

பின்னுரை
நேற்று இரவு வழக்கம்போல என் நண்பன் அலைபேசியில் அழைத்தான். மின்வெட்டால் ஆலை நின்றிருக்கிறது, இரண்டுமணிநேரம் மின்சாரம் வரும், இரண்டு மணிநேரம் வெட்டப்படும். இதுதான் அட்டவணை. கூடங்குளம் வந்தால் ஓரளவக்கு நிலைமை சரியாகும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றான். 
அப்பனே, 1000 மெகாவாட்டில் உத்தேசமாக 500-600 மெவா உற்பத்தி ஆனாலும் அதில் பாதி 300 மெவா இப்போது தமிழகத்துக்குக் கிடைத்தாலும் அதில் நிச்சயம் நம் ஊருக்கு பத்து நிமிடத்துக்கூட பயன்தரப் போவதில்லை“” என்றேன்.
என்னடா நீ இப்படிப்பேசறே... கரண்டு கட்டு தீரப்போற நேரத்துல வீணா ஜெனரேட்டரை வாங்கிப்போட்டுட்டோமே, அதுக்கும் வேற இந்தம்மா கூடுதல் டேக்ஸ் போட்டுட்டாங்களே அப்படீன்னு எங்க மில் ஓனரு பொலம்பீட்டிருக்காரு“” என்றான்.
கூடங்குளத்தால உங்க ஊருக்கு கரண்டு வரப்போறதில்லே, ஜெனரேட்டர் வீணாச்சேன்னு கவலையே பட வேணாம்னு சொல்லு என்றேன்.

கூடங்குள எதிர்ப்பாளர்களுக்கு தோல்வி என்று பல ஊடகங்கள் மகிழ்ந்து கூத்தாடுகின்றன. அகிம்சைப்போராளிகள் மீது வீசப்படுகிற அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களுடைய இலக்கில் வெற்றி பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் நானும் நீங்களுமான நடுத்தர வர்க்கம்தான். கூடங்குளத்தில் மேலும் உலைகள் இனி அமைக்கப்படாது என்பது என் நம்பிக்கை. ஆனால் வேறுபகுதிகளில் வரவிருக்கின்றன மேலும் சில அணுஉலைகள். எந்த மாநிலமாக இருந்தாலும்சரி, அரசுகளின் மெகா திட்டங்களால் இடப்பெயர்வு முதல் அனைத்தையும் இழக்கப்போகிறவர்கள் வறிய மக்கள் மட்டுமே.

ஜெயலலிதா அறிவித்தது போல கூடங்குளம் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கி விடலாம் - அல்லது ஆறு மாதங்களில். ஆனால் கூடங்குளம் எழுப்பிய கேள்விகள் இந்தியாவெங்கும் எதிரொலிக்கின்றன. அணுசக்திக்கு எதிரான இந்தக் குரல் இன்னும் வலுக்கப்போகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. மேதா பாட்கர் போராட்டத்திற்குப் பிறகு, வேறொரு அமைப்பின் சார்பில் தில்லியில் ஏழுநாள் தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது. தமிழக மக்களை ஏமாற்றி வெற்றிகொண்டதுபோல மராட்டிய, ராஜஸ்தானிய, ஹரியாணா மக்களையும் எதிர்காலத்தில் இப்படி ஏமாற்ற முடியாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் கூடங்குளத்தை ஆதரிக்கின்றன என்பது தெரிந்ததே. மார்க்சிஸ்ட் கட்சி சார்பான ஒரு தளத்தில் இதுகுறித்த நீளமான ஒரு கட்டுரையும் படித்தேன். ஆனால் அதே மார்க்சிஸ்ட் கட்சி ஹரியாணா மாநிலத்தில் அணு உலை அமைக்கப்படுவதை எதிர்த்துக் குரல்கொடுக்கிறது - மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பு


இனி நிறுவப்பட இருப்பதை எதிர்த்தோம். கூடங்குளத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டதால் ஆதரித்தோம் என்று சமாதானம் கூறப்படுமோ என்னவோ தெரியவில்லை. இதென்ன இரட்டை வேடம் என்று கேட்பவர்களும் கேட்கலாம். இப்போதேனும் இடதுசாரிகளுக்கு விழிப்பு வந்ததே என்று மகிழ்பவர்களும் மகிழலாம். நான் இரண்டாவது வகையில் சேரலாம் என்றிருக்கிறேன்.

படித்தவர் முன்னே இரண்டு வழிகள் இருக்கின்றன தான், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று தன்னல நோக்குடன் எதையும் ஆதரிப்பது / எதிர்ப்பது. அல்லது, நுனிப்புல் மேய்ந்து, ஊடகங்கள் பரப்பும் கருத்துகளையே தம் கருத்துகளாகக் கொள்ளாமல், தன்னலத்தோடு பிறர் நலத்தையும் பிரச்சினைகளின் மறுபக்க உண்மைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவது.

இணையம் இன்று வலுவான ஊடகமாக வளர்ந்து வருகிறது. ஆட்சியாளர்களின், அதிகாரவர்க்கத்தின் பொய்ப்பிரச்சாரங்களை லாபம் கருதும் மரபுவழி ஊடகங்கள் அப்படியே எதிரொலிக்கின்றன. இணையம் ஒன்றுதான் சுதந்திரமான கருத்துகளுக்கு இடம்தரக்கூடிய அரங்கமாக இருக்கிறது. எனவே, இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிரான கருத்துகளை மற்றவர்களுக்கும் எட்டச்செய்யும் விதத்தில் இணையப் பயனாளிகளான படித்தவர்கள் செயல்படலாம். நடுத்தர வர்க்கத்தில் பகுத்தாய்ந்து முடிவு செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிப்பது அவசியத் தேவையாக இருக்கிறது. 

படித்தவர் சூதுகளை படித்தவர்களே வெல்லுவோம்.