Sunday 17 November 2013

சச்சினுக்கு பாரத ரத்னா சரிதானா...


இப்போது இந்தக் கேள்வியே ஒருவகையில் அர்த்தமற்றது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாகிவிட்டது. இனி கேட்டுப்பயனில்லை என்றும் கூறலாம். அல்லது, இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் இனிமேல் கவனமாக இருப்பார்கள் என்றும் கூறலாம்.

விருதுக்கு இந்தியர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று இல்லை. பிரதமரின் பரிந்துரையின்பேரில் உலகின் எந்தப் பகுதியில் இருப்பவருக்கும் தரலாம். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானுக்கும், நெல்சன் மண்டேலாவுக்கும் தரப்பட்டது இப்படித்தான்.

பாரத ரத்னா என்பது நாட்டின் மிக உயரிய விருது. 1955இல் நிறுவப்பட்டது. அப்போதைய முடிவின்படி, காலமானவர்களுக்கு இந்த விருது தரப்படாது என்று முடிவாகியிருந்தது. 1966இல் இந்த விதி மாற்றப்பட்டது. அபுல் கலாம் ஆசாத் அரசுப் பொறுப்பில் இருக்கும்போது அவர் பெயர் தேர்வுசெய்யப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். 1992இல் தேசிய முன்னணிக்கு அடுத்து வந்த காங்கிரஸ் அரசு அபுல் கலாம் ஆசாதுக்கு விருது அளித்தது.

இந்த விருதில் அரசியல் அல்லது நிர்ப்பந்தம் எப்போது கலந்தது? 1987 வரை விருது அளிக்கப்பட்டவர்கள் கல்வி, அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் சேவை செய்தவர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. 1988இல் எம்ஜிஆருக்கு விருது அளிக்கப்பட்டதிலிருந்து அரசியல் தொடங்குகிறது. 1984 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி இருந்தது. எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு விருது தர மத்திய அரசு முடிவு செய்தது. 1989 தேர்தலில் அதே கூட்டணி தொடர்ந்தது. திமுக ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாமல் துடைத்தெறியப்பட்டது.

இப்படிச் சொல்வதால், 1988க்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டவர்கள் எல்லாருமே அரசியல் காரணங்களுக்காகவே வழங்கப்பட்டவர்கள், தகுதி அற்றவர்கள் என்பதாகக் கருதிவிடக் கூடாது. நெல்சன் மண்டேலா விடுதலை ஆகிற கட்டத்தில் அவருக்குத் தரப்பட்டது இதற்கு உதாரணம். தேசிய முன்னணி அரசின்போது அம்பேத்கருக்குத் தரப்பட்டதும், அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்திக்குத் தருகிறபோது, படேலுக்கும் தரப்பட்டதும் அரசியலானதன் உதாரணம்.

ஆக, விருதுகள் தகுதியுள்ளவர்கள் என்பதால் மட்டுமல்ல, நிர்ப்பந்தங்களின் காரணமாகவும் அளிக்கப்பட்டன. அழுதபிள்ளைக்குப் பால் கிடைக்கும் என்பது போல. 2001இல் லதா மங்கேஷ்கருக்குத் தரப்பட்டது, பி. சுசீலாவுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இளையராஜாவுக்கு இன்னும் தரவில்லையே என்று தமிழர்கள் பலருக்கும் குறையாக இருக்கிறது.

இப்படி கிடைக்காதவர்கள் பெயர்களைப் பட்டியலிடுவது மிகச் சுலபம். ஏன் என்றால், இந்தியாவில் திறமை வாய்ந்தவர்கள் ஏராளம். இன்னும் விருது வழங்கப்படாத சீர்திருத்தச் செம்மல்கள், விஞ்ஞானிகள் அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். பட்டியலிடுவதும் சாத்தியமில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், பெரியார், ஹோமி பாபா, கேப்டன் லட்சுமி, சுந்தர்லால் பகுகுணா என எத்தனையோ பேரைக் குறிப்பிடலாம். இந்திய வேதியியல் தொழில்துறையின் தந்தையும்கல்விக்கே தன் வாழ்க்கையையும் சேமிப்பையும் முழுவதையும் அர்ப்பணித்த பிரபுல்ல சந்திர ரே - அவருக்கே இந்த விருது தரப்படவில்லை. அதற்காக, அரசியல் அல்லது வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக எல்லாரையும் திருப்திப்படுத்த பட்டாணிக்கடலை விநியோகிப்பது போல விருதுகளை வழங்கினால் அப்புறம் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதுக்கு இருக்கிற மரியாதைதான் அதற்கும் இருக்கும்.

இந்த விருதுக்கு யார் தகுதி உடையவர்கள்.... கலை, இலக்கியம், அறிவியல், மக்கள் சேவை ஆகியவற்றில் மகத்தான பங்காற்றியவர்களுக்கு பாரத ரத்னா விருது தரலாம் என்பதுதான் ஆரம்பத்தில் விதியாக இருந்தது. தேசிய விளையாட்டான ஹாக்கியின் பிதாமகன் தியான்சந்துக்கு இந்த விருதை தர வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் கருதிய அதே நேரத்தில், 2011இல், சச்சினுக்கும் தர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. எனவே விதிகள் மாற்றப்பட்டன.

விளையாட்டும் இதில் சேர்க்கப்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் விளையாட்டும் இதில் சேர்க்கப்படவில்லை. மாறாக, எந்தத்துறைக்கும் வழங்கலாம் என்று விதி மாற்றப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.
It is awarded in recognition of exceptional service/performance of the highest order in any field of human endeavour.

அதாவது, இனிவருகிற காலத்தில் எவருக்கு வேண்டுமானாலும் இந்த விருது வழங்கப்படலாம். இந்தத் திருத்தம், மேலும் அரசியலாவதற்கே வழி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுகுறித்தே நாம் கவலைப்பட வேண்டும். அல்லது சச்சினுக்குக் கிடைத்ததில் சந்தோஷப் படுவதுபோல சந்தோஷப்பட பழகிக்கொள்ள வேண்டும்.

சச்சினுக்கு இந்த விருது தருவது அவசியமில்லை என்று நான் ஏன் கருதுகிறேன். சச்சின் மீது வெறுப்பா.... நிச்சயமாக இல்லை. கிரிக்கெட்டில் அவர் சாதித்தது நிறைய. அதில் சந்தேகமே இல்லை.  குற்றம் கண்டுபிடித்துப் பெயர் வாங்குவதா? இல்லை, வலைப்பதிவு எழுதி அப்படி என்ன பெயரும் புகழும் கிடைத்துவிடப்போகிறது. அதுவல்ல விஷயம்.

சச்சினுக்கு விருது வழங்குவதை கேள்வி கேட்டால் அதிருப்தி அடைகிறவர்கள் அடிப்படையான ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள் --- விளையாட்டுத் துறைக்கென தனியாக நாம் விருதுகளை வழங்கி வருகிறோமே, பின் இதையும் அவர்களுக்கே ஏன் வழங்க வேண்டும் என்பதே என் கேள்வி. விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருது கேல் ரத்னா - விளையாட்டு ரத்தின விருது. அத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

இந்தக் கேள்வி மேலும் சில துணைக்கேள்விகளை எழுப்புகிறது. அப்படியானால் இலக்கியம், கலை போன்ற துறையினருக்கும் தர வேண்டாமே? ஆம், தர வேண்டியதில்லை. (இலக்கியத்துக்கு இதுவரை யாருக்கும் பாரத ரத்னா தரப்பட்டதில்லை.) இலக்கியத்துக்கு சாகித்ய அகாதமி இருக்கிறது. கலைக்கு சங்கீத நாடக அகாதமி விருது இருக்கிறது. திரைப்படத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது இருக்கிறது. அவர்களுக்கே இந்த விருதையும் தர வேண்டிய அவசியம் இல்லை. இவை தவிர, எல்லாத் துறைகளுக்கும் தரப்படுகிற பத்ம விருதுகளும் நிறையவே உண்டு.


எனவே, பாரத ரத்னா விருதை நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டுமே என்று விதிக்க வேண்டும். இல்லையேல் இன்று எழுப்பப்படுகிற அதே கேள்விகள் ஒவ்வொரு ஆண்டும் எழுவதைத் தவிர்க்க முடியாது.

Wednesday 6 November 2013

தங்கிலீசு வேணுமோ தங்கிலீசு....


இரண்டு நாட்களுக்கு முன்பு, காலையில் பேஸ்புக் திறந்ததும் வா. மணிகண்டன் தங்கிலீஷில் இரண்டு வரிகள் எழுதியிருந்ததைப் பார்த்தேன். பொதுவாகவே தங்கிலீஷ் படிக்க நேரும்போது எனக்கு பயங்கர கடுப்பாகி விடும். சிலருடைய செல்பேசிகளில் தமிழ் வசதி இருப்பதில்லை என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால், எப்போதும் இப்படிச் செய்யாத மணிகண்டன் இன்று இப்படி எழுதுகிறாரே என்று வியந்துபோய், இந்த விஷப்பரீட்சையில் இறங்காதீங்க என்று நான் கமென்ட் எழுதினேன். அப்போதுதான் அவர் சேதியும் இணைப்பும் அனுப்பினார், ஹிந்து தமிழ் இதழில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் எதிர்வினை அது என்று.

ஓஹோ... இன்றைய அஜெண்டாவை அவர்தான் முடிவுசெய்திருக்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன். ஹிந்து இதழில் வந்த கட்டுரையைப் படித்தேன்.

சற்று நேரத்திற்குப்பிறகு பார்த்தால், இந்தக் கட்டுரைக்கு என்ன எதிர்வினைகள் வரும் என்று தெரிந்தே தான் எழுதியதாக ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் ஒரு பதிவும் எழுதியிருக்கிறார். அதாவது, பத்திரிகையில் எழுதியது விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல. அதைப்பற்றி மிகவும் சிந்தித்தே எழுதியிருக்கிறார், அவருடைய கருத்து முடிந்த முடிபு, இனி எந்த மாற்றமும் தேவையில்லை என்பதே அந்தப் பதிவின் நோக்கமாக இருக்க முடியும்.

அவர் அப்படிச் சொல்லி விட்டார் என்பதற்காக விவாதிக்காமல் இருந்துவிட முடியுமா..

அவருடைய கருத்தின் சாரம் என்ன...
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழ் வாசிக்கும் பழக்கம் அற்றுப் போகாமல் இருக்க ஆங்கிலத்தில் தமிழை எழுதலாம் என்பதுதான்.

இது ஏதும் புதிய கருத்தல்ல, புதிய விஷயமும் அல்ல. நாடு விடுதலை அடைந்தபோது, தேசிய மொழியாக எதை ஏற்பது என்ற கேள்வி வந்த காலத்தில், இந்தி தெரியாதவர்கள் ஆங்கில எழுத்து வடிவில் இந்தி எழுதலாம் என்ற வாதம்கூட வந்தது. இந்துஸ்தானிதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. இப்போதும்கூட வடக்கே இந்தியிலும் இதுபோல அவ்வப்போது யாராவது கிளப்பி விடுவது உண்டு. சரி, அதை விடுத்து, விவரங்களைப் பார்ப்போம்.

இப்போதும்கூட இந்தியாவில் பல மொழிகள் ஆங்கில எழுத்து வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காசி, கரோ, மிசோ போன்றவை. வேறு சில மொழிகளுக்கு இரண்டு விதமான எழுத்துகளும்கூடப் பயன்படுகின்றன. கொங்கணியை இந்தியிலும் - அதாவது தேவநாகரியிலும் எழுதுவதுண்டு, கன்னடத்திலும் எழுதுவது உண்டு. மணிப்புரியை வங்காளி வரிவடிவிலும் ஆங்கில வரிவடிவிலும் எழுதுவது உண்டு. பஞ்சாபில் சிலர் உருதுவை ஆங்கிலத்தில் எழுதுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பீகாரில் உருதுப் பத்திரிகைகள், இந்தி எழுத்துகளால் வெளிவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையெல்லாம் அவர் ஏன் குறிப்பிடாமல் விட்டு விட்டார் என்பது புரியவில்லை. இருக்கட்டும்.

மேலே குறிப்பிட்ட காசி, மிசோ போன்ற மொழிகள் ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணங்கள் வேறு. ஆங்கிலேய மிஷினரிகளின் தாக்கமும் அதில் இருந்தது. அது பேசப்படுவதும்கூட மிகக் குறைவான மக்களால்தான். அவ்வளவு ஏன், சிந்தி மொழி பெர்சியன் (அதாவது, அரபி), தேவநாகரி, ஆங்கிலம் ஆகிய மூன்று எழுத்து வடிவங்களிலும் எழுதப்படுகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டு பழமையான சிந்தி மொழி இன்று குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் பேசப்படுவதில்லை. அதனால் சிந்தி மொழியினர் ஆங்கில வரிவடிவத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். அப்படியிருந்தும்கூட, சிந்திக்கு யுனிகோட் எழுத்துகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆக, எந்தெந்த மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன என்று பார்த்தால், உலகின் ஏராளமான மொழிகள் வரும். ஆனால் அவை பெரும்பாலும் குறைந்த மக்கள் பேசுகிற மொழிகளாக இருக்கும். அல்லது வரலாற்றில் புதிய மொழிகளாக இருக்கும்.

இந்தியாவின் பெரும்பாலான பழங்குடி மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன. காரணம், அவர்கள் மொழி பேச்சு மொழியாக மட்டுமே இருந்தது. எழுத்து மொழியாக வளரவில்லை. பிற்காலத்தில் நாகரிகத் திணிப்பின் அல்லது ஏற்பின் காரணமாக, அவர்களுக்கு புதிய வரிவடிவத்தை உருவாக்க முடியாதபோது, ஆங்கில வரிவடிவத்தை வரித்துக்கொள்வது எளிதாகி விட்டது. ஆனால், அவர்களால் முடியும் என்றால், நிச்சயமாக சொந்த வரிவடிவத்தை உருவாக்குவார்கள்.

மிகக் குறைவான மக்கள் பேசும் மொழியினர்கூட தமக்கென புதிய வரிவடிவத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து புதிய எழுத்து வடிவங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, சந்தாலி மொழிக்கான ஓல் சிக்கி. தமிழர்களில் பலர் இப்படியொரு பெயரையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அப்படியொரு வரிவடிவம் இருக்கிறது. கூகுளில் தேடியறியலாம்.

இப்படி, குறைவான மக்களால் பேசப்படும் சந்தாலி மொழிக்கே சொந்த வரிவடிவம் உருவாகிக் கொண்டிருக்கும் காலத்தில், பல்லாயிரம் ஆண்டுகாலப் பழமை கொண்ட மொழிக்கு எதிர்காலத்தில் ஆபத்து வந்துவிடும் என்றும், ஆங்கில வரிவடிவைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுவது என்னவகையான மனநிலை என்று சத்தியமாகப் புரியவில்லை.

சரி, அப்படியே தமிழை ஆங்கிலத்தில் எழுதி விட்டாலும் வாசிக்க முடியுமா... தமிழ் எழுத்துகளின் ஒலிகளுக்கு நிகரான ஒலி ஆங்கிலத்தில் இல்லை. ஏன், இந்திய மொழியில் ஒன்றான இந்தியிலும்கூட இல்லை. விளம்பரங்களிலோ, திரைப்படப் பெயர்களிலோ ஒரிரு சொற்கள் ஆங்கிலத்தில் படித்துவிடுவது என்பது வேறு. அது அந்தந்தப் பொருள் சார்ந்த விஷயம். எல்லா தமிழ்ச் சொற்களையூம் ஆங்கில ஒலிமயமாக்கி எழுதுதல் சாத்தியமில்லை. ஒருவேளை இதற்கும் அவர் ஒரு தீர்வு சொல்லக்கூடும். ஆங்கிலத்தில் டயகிரிடிகல் Diacritical எழுத்துகள் இருக்குமே, அதைப் பயன்படுத்துங்கள் என்று சொல்வாரோ என்னவோ...

டயகிரிடிகல் என்பது ஒலிக்குறி வடிவம். ஆங்கிலத்தில் இல்லாத எழுத்துகளை குறிக்கப் பயன்படுகிறது. உதாரணமாக கஃபே என்பதற்கு cafe என்று எழுதுகிறோம். ஆனால் உண்மையில் அது café. ஆங்கில எழுத்துகளுக்கு மேலாகவோ கீழாகவோ சில குறிகளை இட்டு தமிழின் ன், ள், ழ் போன்ற எழுத்துகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவற்றை வாசிப்பது மொழியியல் வல்லுநர்களுக்கே திணறல்தான். இதைக் கற்றுக்கொள்வதைவிட ஒரு மொழியையே கற்றுக்கொள்ளலாம். இந்தப் பத்தியில் உள்ள வாதம் நிச்சயமாக விதண்டாவாதம்தான் என்று எனக்கே தெரியும். இருந்தாலும் இப்படிஎழுதியதன் காரணம், எதிர்வினை எப்படி வரும் என்று தெரிந்தவர் இதையும் ஊகித்தாரா என்று தெரிந்து கொள்வதுதான்.

சரி, இந்து இதழில் ஜெயமோகன் முன்வைத்த கருத்தின் சாரங்களைப் பார்ப்போம்.

1. //நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. //
அபத்தமான கருத்து. இளைய தலைமுறை வாசிக்கவில்லை என்பதே உண்மை. இளையதலைமுறையினர் நிறையபடிக்கிறார்கள் என்பது உண்மை - ஆனால் அது பாடப்புத்தகப் படிப்பு. நூல் வாசிப்பு அல்ல. இதற்குக் காரணங்கள் பல - செல்பேசிகளின் ஊடுருவலும், அதில் இசைகேட்கும் வசதிகளும், அண்மைக்காலத்தின் செல்பேசிகளில் பரவலாகி வி்ட்ட சமூக ஊடக வசதிகளும் சேர்ந்து வாசிப்பை அருகச் செய்திருக்கின்றன என்பதே உண்மை. ஓர் இலக்கியவாதியாக இருந்துகொண்டு எப்படி இப்படியொரு கருத்தைமுன்வைக்கிறார் என்று தெரியவி்ல்லை. நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன என்பதை வைத்து வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருக்கிறது என்று கருதக்கூடாது. சொல்லப்போனால், மிகச்சிலர் மிக அதிக நூல்களை வாங்குகிறார்கள். மிகப் பலர் மிகச்சில நூல்களையே வாங்குகிறார்கள். இது குறித்து உலகப்புத்தகத் திருவிழா குறித்த என் வலைபதிவில் பார்க்கலாம்.

2. //இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்றுசொல்லலாம்.//
பல்வேறு துறைகள் குறித்து ஆழமாக எழுதுகிறவராகக் கூறிக்கொள்பவர் எப்படி இப்படியொரு அபத்தமான கருத்தை முன்வைக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. குழந்தைகள் இரண்டு மொழிகளை அல்ல, நான்கு மொழிகளைக்கூட எளிதில் கற்கமுடியும் என்று ஆய்வுகள் பலவும் காட்டியிருக்கின்றன. கூகுளில் தேடினால் நிறையவே கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், இரண்டு மொழி பேசும் பெற்றோர் உள்ள குடும்பத்தின் குழந்தைகளுக்கு பலமொழித் திறன் எளிதாக வரும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. அவ்வளவு ஏன், இரண்டு மொழிகளைக் கற்றுக்கொண்டவர்களுக்கு அல்ஜெமிர் நோய் தாமதமாகவே வரும் என்றும்கூட ஆய்வுகள் காட்டுகின்றன. (மாதிரிக்கு, பதிவின் படத்தைப் பார்க்கவும்.)

3. மேற்கண்ட சிரமம்பற்றிய கருத்தைத் தொடர்ந்து வரும் பத்திகள் அனைத்தும் அதையொட்டிய கருத்தையே முன்வைத்துள்ளன என்பதால் ஒதுக்கி விட்டுகடைசிப் பத்திக்குச் செல்லலாம்.

4. // எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ்ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன.அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்தஎழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. .... வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. //
அபத்தத்தின் உச்சம்தான் இது. இங்கே அவர் சொன்ன மாற்றங்கள் யாவும் இயல்பாக மொழிக்கு ஏற்பட்ட மாற்றங்கள். மொழியின் தகவமைப்பு அது. மண்ணில் எழுதிய காலம், கல்லில் எழுதிய காலம், காகிதத்தில் எழுதிய காலம் என காலத்துக்கேற்ப வரிவடிவம் மாறியது. அதனையும், முற்றிலும் புதிய வரிவடிவத்தை தனதாக்கிக் கொள்வதையும் ஒப்பிட்டுப் பேசுவதை என்னவென்று சொல்ல... இன்று காகித உலகிலும் கணினி உலகிலும் ஆங்கிலத்துக்கு என்ன வசதிகள் உண்டோ அத்தனையும் தமிழுக்கும் உண்டு.

கடைசியாக,
காலப்போக்கில் தமிழ் வாசிப்பு அருகிவிடும் என்பதற்காக இந்தக் கருத்தை முன்வைக்கிறார் என்றால், சில கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
தமிழ் நாட்டின் மக்கள் தொகை என்ன, அதில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழில் எழுதப் படிக்கக் கற்றவர்கள் / கல்லாதவர்கள், தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்ன, அவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழ் கற்கமுடியாத சூழலில் இருக்கிறார்கள், அவ்வாறு கற்க முடியாத நிலைக்கு காரணம் என்ன, இதே நிலை தொடருமானால் இன்னும் எத்தனை காலத்துக்குப் பிறகு தமிழ் அருகிவிடும் ஆபத்து இருக்கிறது ....
இது போன்ற அறிவியல்ரீதியான கேள்விகளை எழுப்பி, அதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்து வந்திருந்தால், நிச்சயம் அது விவாதத்துக்கு உரியதுதான். ஆனால் இவர் வைத்திருப்பதோ, ஏதோ அரைத்தூக்கத்தில் இருக்கும்போது மனதுக்குள் எழுந்த கேள்வியை கருத்தாக முன்வைத்ததுபோல இருக்கிறதே அன்றி எந்த அடிப்படையும் இல்லாததாய் இருக்கிறது. வெறும் சர்ச்சையைக் கிளப்பும் நோக்கத்தில் அமைந்த கட்டுரை என்றுதான் இதைக்கூற முடியும்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்பது தமிழுக்கு மட்டுமல்ல. எல்லாமொழிகளுக்கும் இது பிரச்சினைதான். அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்தான். ஆனால் மொழியின் எழுத்துருவை மாற்றுவதால் அப்படியொரு மாற்றம்வந்து விடும் என்றால்....

கவிஞர் மகுடேசுவரன் பேஸ்புக்கில் எழுதிய பதிவின் கடைசிப் பத்திதான் நினைவுக்கு வருகிறது. இதோ...

//புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவரைப்பற்றி வாய்மொழிக் கதையுண்டு. எத்தனையோ நல்ல கருவிகளை உருவாக்கிய அவர்தம் இறுதிக்காலத்தில் ஓர் ஆராய்ச்சியைச் செய்தாராம். கொல்லைக்குச் சென்றுமலங்கழித்தபின் கழுவுவதற்குக் குளத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அதற்கு எளிதான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் இறங்கினாராம். மலங்கழிக்கும்போது முதலில் வரும் சிறுநீரை அடக்கி வைக்கவேண்டும். கழிப்பு முடிந்த பின்தான் சிறுநீரைக் கழிக்க வேண்டும். அவ்வாறு கழியும் சிறுநீரிலேயே கழுவிக்கொள்ள வேண்டும். இதுதான் அந்த விஞ்ஞானியின் தீர்வு.//