Friday 26 December 2014

காகிதப்படகில் ஒரு பயணம்



ஏதேனுமொரு நூல் பிடித்துப்போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமான ஒரு காரணம் அந்த நூலின் பாத்திரங்களோடு அல்லது நிகழ்வுகளோடு நாம் ஒன்றிப்போவது. நூலில் உள்ள ஒன்று அல்லது பல நிகழ்வுகள் நம்மோடு தொடர்புடையவையாக இருந்தால் இன்னும் அதிக ஒட்டுதல் ஏற்படும். அப்படிப்பட்ட அனுபவத்தைத் தந்தது காகிதப்படகில் சாகப்பயணம். பெ. கருணாகரன் எழுதியது.


கருணாகரன் பேஸ்புக்கில் என் நட்புவட்டத்தில் இருக்கவில்லை. ஆனாலும் நண்பர்களின் தயவால் அவ்வப்போது அவருடைய பதிவுகள் அல்லது கமென்ட்கள் காணக்கிடைக்கின்றன. அண்மையில் பேஸ்புக் வழியாக வெளியிடப்பட்ட அவருடைய நூலை பேஸ்புக் தோழி வடுவூர் ரமா கொண்டு வந்து தந்தார். வழக்கம்போல, இரண்டு நாட்களின் உணவுவேளைகளில் முடித்து விட்டேன். 

கருணாகரன் கடந்துவந்த பாதை கிட்டத்தட்ட நான் கடந்து வந்த அதே பாதை என்பதே நூலுடன் என்னை மிகவும் ஒன்ற வைத்தது. அவர் சென்னையில் வசித்த காலத்தில் நானும் சென்னையில் சில ஆண்டுகள் இருந்தேன். அவர் கண்ட அரசியல் நிகழ்வுகளை நானும் கண்டேன். அவர் சந்தித்த பத்திரிகையாளர்கள் சிலரை நானும் சந்தித்திருக்கிறேன். அவர் பணியாற்றிய சிறுகதைக் கதிர் இதழின் தலைப்பு நக்கீரனுக்காக நான் ஆர்என்ஐ அலுவலகத்தில் வாங்கி அனுப்பிய தலைப்புதான். அவர் பணியாற்றிய நக்கீரனுக்கு நானும் எழுதியிருக்கிறேன். நாளிதழும் வார இதழும் எப்படி இயங்கும் என்பதை நானும் நேரில் கண்டிருக்கிறேன். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பண உறைகள் குறித்து நானும் கொதித்திருக்கிறேன். பணம் வாங்கிக் கொண்டு சிலரைப் போற்றி அல்லது சிலரின் சின்னத்தனங்களை மறைத்து எழுதியவர்களை நானும் பார்த்திருக்கிறேன். இவர் பத்திரிகைத் துறையிலேயே இருந்திருக்கிறார், நான் வேறு பக்கம் திரும்பி விட்டேன்.

நூல் நேர்கோடாகச் செல்லாமல் வாழ்வின் பல்வேறு கட்டங்களை முன்னும் பின்னுமாக முன்வைக்கிறது. விகடன் மாணவ நிருபராகத் தொடங்கும் நூல், பள்ளி வாழ்வுக்குப் பின் நகர்கிறது. மீண்டும் பத்திரிகையாள அனுபவத்துக்கு நகர்கிறது, மறுபடி மாணவ காலம் செல்கிறது.... ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பத்திரிகைத் துறையில் காலடி வைக்க விரும்புவோருக்கு, ஆசிரியர்களுக்கு, சக மனிதர்களுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது. உபதேசமாக அல்ல, அனுபவத்தின் பாடமாக. தவிர, 31-32ஆம் அத்தியாயங்களில் இதழியல் குறித்து அருமையான சில ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. இளையவர்களுக்குப் பயனுள்ளவை.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இதழாளர்கள் அனைவரும் இந்நூலில் வருகிறார்கள். அவர்களுடனான அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன. சிலரை பிரமிக்கவும், சிலரை பிரேமிக்கவும் வைக்கிறார் கருணாகரன். ஒரு பத்திரிகையாளனும் அரசியல்வாதியும் மனம்திறந்து எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. சில பிம்பங்களை உடைத்து விடாதிருக்க வேண்டியிருக்கும், சில பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்க வேண்டியிருக்கும், சில விஷயங்களை மறைக்க வேண்டியிருக்கும். இந்த நூலிலும் அதைக் காண முடிகிறது. நூலாசிரியரே அதை முன்னுரையில் கோடிகாட்டியிருக்கிறார். எனக்குப் புரிகிறது.

கருணாகரன், இருபத்தேழு ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் இருக்கிறார் என்பதை நூலின்வழி அறிகிறேன். தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட, பிரபலமாகிவிட்ட பத்திரிகையாளராக பல்லாண்டுகாலம் நீடிப்பது பெரிய விஷயம் இல்லை. வெளித்தெரியாத இடைநிலைப் பத்திரிகையாளராக 27 ஆண்டுகளைக் கடத்துவது என்பது சாமானிய விஷயமில்லை. பாராட்டுகள் கருணாகரன். சமரசமில்லா இதழாளராகத் தொடருங்கள் உங்கள் பயணத்தை.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என எனக்குக் கிடைத்த நூலை தில்லித் தமிழ்ச் சங்க நூலகத்துக்கு அனுப்பி விட்டேன்.

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன்
குன்றம் பதிப்பகம், 73/31, பிருந்தாவனம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. விலை ரூ. 150
கருணாகரனின் ஃபேஸ்புக் : https://www.facebook.com/perumal.karunakaran.1

Monday 15 December 2014

தளம் என்னும் இலக்கியக்களம்




தளம் இதழை தவறாமல் அனுப்பி வருகிறார் அதன் ஆசிரியர், நண்பர் பாரவி. முதல்முறை மூன்று இதழ்களை அனுப்பினார். அவற்றைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, தேர்தல் நேரத்துப் பதிவுகளால் சாத்தியப்படாமலே போயிற்று. சி.சு. செல்லப்பா குறித்த சிறப்பிதழைப் பற்றி கொஞ்சம் எழுதி வைத்திருந்த பதிவைத் தேடி எடுக்க இயலவில்லை.

அக்டோபர்-டிசம்பர் இதழ் சில நாட்களுக்கு முன் கிடைத்தது. இனியும் எழுதாமல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். இத்தனைக்கும் நான் இதுவரை சந்தாவே செலுத்தவில்லை. நான் தீவிர வாசகன் என்ற மரியாதைக்காகவே தொடர்ந்து அனுப்பி வருகிறார் என்று நினைக்கிறேன். நன்றி நண்பரே.


இந்த இதழில் என்ன இருக்கிறது? சுருக்கமாக, கீழே இருக்கிற பட்டியலின் அமைப்பைப் பார்த்தாலே இதழ் என்ன வடிவில் இருக்கிறது என்று புரியும். -
தி.க.சி.யுடன் அவருடைய இறுதிநாட்களில் நிகழ்ந்த உரையாடல்
சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி நடத்திய வாசகர் வட்டம் குறித்து அசோகமித்திரன் எழுதிய கட்டுரை. ஜானகிராமனின் அம்மா வந்தாள் இதழ் வெளிவந்ததும், கோவையைச் சேர்ந்த காந்தி-வள்ளலார் பக்தர் வாசகர் வட்டத்துக்கு சந்தாவை திரும்பப் பெற்றுக்கொண்டாராம்.
வாசகர் வட்டம் பற்றி லட்சுமியுடன் சிறிய நேர்காணல்.
பி.எம். கண்ணன் குறித்து வே. சபாநாயகம் எழுதிய கட்டுரை.
பி.எம். கண்ணனின் சிறுகதை
ஸித்தி ஜுனைதா பேகம் குறித்து அம்பை எழுதிய கட்டுரை
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஸித்தி ஜுனைதா பேகம் எழுதிய கட்டுரை. பெண்களுக்குக் கல்வியை மறுக்கும் இஸ்லாமியர் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை.
ஸித்தி ஜுனைதா பேகம் எழுதிய காதலா கடமையா நாவலுக்கு அவர் எழுதிய முகவுரை
எம்.வி. வெங்கட்ராம் குறித்து வி. விஜயராகவன் கட்டுரை
எம்.வி. வெங்கட்ராம் எழுதிய சிறுகதை
வ.ரா.வின் நடைச்சித்திரம் என்ற தலைப்பில் வி. அரசு எழுதிய கட்டுரை
வ.ரா. எழுதிய வண்டிக்கார செல்லமுத்து
க.நா.சு குறித்து செ. ரவீந்திரன் எழுதிய கட்டுரை
க.நா.சு. எழுதிய நினைவுப்பாதை கவிதை
கோபி கிருஷ்ணனைப் பற்றி தஞ்சாவூர் கவிராயர் கட்டுரை
கோபி கிருஷணனின் மகான்கள் சிறுகதை
காலத்தைக் கவிதை செய்த கலைஞன் என்ற தலைப்பில் ஆத்மாநாம் குறித்து இல. சைலபதியின் கட்டுரை
ஆத்மாநாம் கவிதைகள்
என்.ஆர். தாசன் குறித்து பா. இரவிக்குமார் கட்டுரை
என்.ஆர். தாசனின் கவிதை
ஜெயந்தனின் கோடு இதழ் குறித்து பாரவி எழுதிய கட்டுரை
ஜெயந்தன் எழுதிய துக்கம் என்னும் சிறுகதை
மருதகாசியைப் பற்றி மு.இரா. முருகன் கட்டுரை
மருதகாசியின் சில பாடல்கள்
மூவலூர் இராமாமிர்தம் குறித்து மனுஷியின் கட்டுரை
மூவலூர் இராமாமிர்தம் எழுதிய தாசிகளின் மோசவலையிலிருந்து ஒரு பகுதி
சுரேஷ் பாபு மலையாளத்தில் எழுதிய லோகாயதம் நாடகம், தமிழில் மு. ஜீவா.
யு.ஆர். அனந்தமூர்த்தி, கொல்கத்தா கிருஷ்மூர்த்தி, ராஜம் கிருஷ்ணன், தேனுகா, அசோக் குமார் ஆகியோரின் பணிகள் குறித்த கட்டுரைகள்
இன்னும் சில இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், நூல் அறிமுகம்....

மொத்தத்தில், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியக் கோட்பாடுகள், திரைப்படம், நாடகம் என அனைத்தும் கலந்து அமைந்திருக்கிறது இதழ்.

தளம் இதழ் எப்படியிருக்கிறது? இப்போது வெளிவருகிற இதர சில இலக்கிய இதழ்கள்போல வண்ணப்பக்கங்களோ, லேஅவுட் செய்வதில் ஜாலங்களோ இல்லை. நான் வெளியிட்டுவந்த தலைநகரத் தமிழோசை இதழும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது, ஆனால் நானே வடிவமைக்க முடியும் என்பதால் லேஅவுட்டில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினேன். தளம் இதழில் உள்ளடக்கத்துக்குத்தான் முக்கியத்துவம். அட்டையும்கூட கறுப்பு வெள்ளைதான். 160 பக்கங்களுக்கு கனமான இதழை கனமான விஷயங்களுடன் கொண்டுவருவது சாதாரண வேலையல்ல. அதற்காக வணங்குகிறேன் நண்பரே.

காலாண்டு இதழான தளம், இப்போது இரண்டாவது ஆண்டை நிறைவுசெய்கிறது என்று தலையங்கத்தில் அறிகிறேன். பாராட்டுகள்.

இத்தகைய இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டுமானால் வாசகர்கள்தான் ஆதரவு தர வேண்டும். தனி இதழ் 50 ரூபாய். ஆண்டுக்கு 200 ரூபாய். (இதுவரை சந்தா செலுத்தாத குற்றத்துக்காக ஐந்தாண்டு சந்தாவை உடனே அனுப்பி விட்டேன்.)

தொடர்புக்கு - தளம், 46/248, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014; தொலைபேசி 044-28485000; 9445281820


சந்தா செலுத்த விரும்புவோர் வங்கிவழி செலுத்தலாம்.
Name of the Account: THALAM ; Current Ac No. : 6087653615 ; Bank : Indian Bank ; Branch : Tamil Nadu Open University Campus Branch; IFSC Code : IDIB000T146

Saturday 6 December 2014

படித்ததில் பிடித்தவை - நவம்பர் 2014



சாலிம் அலி. இந்தியாவில் பறவையியலின் முன்னோடி. இயற்கை ஆர்வலர்.


மும்பையில் பிறந்தது, வீட்டில் குருவிகளை கவனித்தது, படிப்பு வராதது, பர்மாவில் குடும்பத் தொழிலைக் கவனிக்கச் சென்றது, அங்கும் இயற்கையின்பாலும் பறவைகளின்பாலும் ஆர்வம் கொண்டது, நாடுதிரும்பிய பிறகு ஜெர்மனி சென்றது, அங்கு பறவையியலை சற்றே முறையாகக் கற்றது, திரும்பி வந்தபிறகு சமஸ்தான மன்னர்களின் பிரதேசங்களில் பறவையியல் ஆய்வுகளை மேற்கொண்டது, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், போபால், இந்தூர் என ஊர் ஊராகச் சுற்றியது, பறவையியல் ஆய்வுக்காக ஆப்கானிஸ்தானுக்கு சாகசப்பயணம் மேற்கொண்டது, பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துடன் பல்லாண்டுகள் நெருங்கிய உறவு கொண்டிருந்தது ..... எல்லாவற்றையும் அவருடைய மொழியிலேயே வாசிக்க விரும்பினால்....

ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
(சாலிம் அலியின் சுயசரிதை - The Fall of a Sparrow)
தமிழாக்கம் - நாக. வேணுகோபாலன்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

*

காமராஜர்

காமாட்சி என்னும் இயற்பெயர் கொண்ட காமராஜர், இந்திய அரசியலில் ஒரு சகாப்தம். கர்மவீரர், தென்னாட்டு காந்தி என பலவாறாக அழைக்கப்பட்ட இந்த மாமனிதர் மக்கள் தலைவர் என்பதன் உண்மையான உதாரணமாகத் திகழ்ந்தவர். விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, கடைசிமூச்சு வரை மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்த ஒப்பற்ற தலைவர். நேரு மறைவுக்குப் பிந்தைய நெருக்கடியான காலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, நாடு எதிர்நோக்கியிருந்த பல சிக்கல்களைத் தீர்த்துவைத்தவர். அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில் கல்வி, தொழில்துறை, வேளாண்மை என பலதுறைகளிலும் தமிழ்நாடு அபார முன்னேற்றம் கண்டது. இந்த நூல், காமராஜரின் ஆளுமையை, அவரது அரசியல் வாழ்க்கையை வரலாற்றுச் சம்பவங்களோடு விவரிக்கிறது.

வி.கே. நரசிம்மன் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர். தி ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல நாளேடுகளில் பணியாற்றியவர். மொழி பெயர்ப்பாளராகவும் முத்திரை பதித்தவர். நரசிம்மனின் புதல்வர் வி.என். நாராயணன் பின்னுரை எழுதியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராகவும் டிரிப்யூன் நாளேட்டின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர்.

மொழிபெயர்ப்பாளர் நாக. வேணுகோபாலன் மைய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிஞர், பேச்சாளர், விமர்சகர், நாடக நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கடற்புரத்து கிராமம், நமது நீதித்துறை, ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, மனித உரிமைகள் உள்ளிட்ட பல நூல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

காமராஜர் - ஓர் ஆய்வு
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
ஐஎஸ்பிஎன் - 978-81-237-7101-4 , ரூ.230

*

கடந்தது கடந்து விட்டது
நடப்பது நடந்து கொண்டிருக்கிறது
நாளை என்பது நாளைமறுநாளுக்கு நேற்றாகியிருக்கும்.
(Past is gone, present is going, and tomorrow is day after tomorrow's yesterday. .....)

ஆர்.கே. நாராயணனின் The Painter of Signs வாசித்தேன்.

எளியவர்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்த சித்திரங்களால் தீட்டியவர் தம்பி லட்சுமணன்.
அதே எளியவர்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து எழுத்தில் சித்திரித்தவர் அண்ணன் நாராயணன்.
The Painter of Signs பெயர்ப்பலகை எழுதுகிறவனின் கதை. 1950களின் சமூகச்சூழலும் காதலும் பின்னிப் பிணைந்த கதை

*

பாஜகவும் காவிப் பரிவாரமும் படேலை சொந்தம் கொண்டாடுகின்றன. உண்மையில் அவர் இரண்டுக்கும் எதிராக இருந்தார்.
கோட்சே காந்தியைக் கொன்றிருக்கக் கூடாது, நேருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று அண்மையில் ஆர்எஸ்எஸ் பத்திரிகை ஒன்று எழுதியது
நேருவுக்கு பதிலாக படேல் பிரதமர் ஆகியிருக்க வேண்டும் என்பது காவிப்பரிவாரத்தின் நிலையான கருத்து. தன் வரம்பு என்ன என்று படேலுக்கே தெரிந்திருந்தது. அதை அவரே பல முறை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
இருந்தாலும் காவிப்பரிவாரம் இதை திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலோருக்கு வரலாறு தெரியாது என்பதே காரணம்.
வரலாற்றை மேலும் அறிய விரும்புவோர் வாசிக்க மூன்று நூல்கள் இருக்கின்றன. மூன்றுமே நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடுகள்.


1. GANDHI-PATEL: Letters and Speeches – This collection brings out some of the significant correspondences between Gandhi and Patel, their mutual respect for each other and also the differences between the two on various matters.
978-81-237-5556-4; Rs 75
2. NEHRU-PATEL: AGREEMENT WITHIN DIFFERENCES: Selected Documents and Correspondence, 1933-1950 – This collection brings together, correspondence between Pandit Jawaharlal Nehru and Sardar Vallabhai Patel. What is striking about these exchanges is the candour and high intellectual acumen with which they addressed many of these issues.
978-81-237-5874-9; Rs. 95
3. GANDHI-NEHRU CORRESPONDENCE: A Selection – Spanning a period of about 26 years, this collection brings together select correspondence between Mahatma Gandhi and Pandit Jawaharlal Nehru. Together they portray a strikingly unique relationship that was not only personal but also political. 978-81-237-6125-1; Rs 95