Friday 18 November 2016

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டுகளும் - பகுதி 2

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

? பெலகேரி துறைமுக ஊழலில் பல்லாயிரம் கோடி சுருட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோம். 500/1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் செய்ததால் கறுப்புப் பணம் வெளியே வரும்தானே?
•-• வரக்கூடும்தான். ஆனால் எவ்வளவு? இந்திய மக்களில் பெரும் செல்வந்தர்களாக இருக்கும் 12 லட்சம் பேரின் மொத்த வருவாய், ஏழைகளாக இருக்கும் 66 கோடி மக்களின் வருவாயைவிட அதிகம். இப்போது வங்கிகளில் வரிசையில் நிற்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? அந்த 12 லட்சம் பேரா, இல்லை 66 கோடிப் பேரா?


இப்போது சாமானிய மக்கள்தான் வரிசையில் நிற்கிறார்கள். பெரும் பணக்காரர்களும் நாளை நிற்க வேண்டிவரும் அல்லது கணக்கில் போட வேண்டி வரும் என்றே வைத்துக்கொள்வோம். இந்த அவசர அடி நடவடிக்கையால் ஏற்பட்ட நட்டங்கள் என்ன என்று யாரேனும் மதிப்பிட்டார்களா? நாடு முழுவதும் தொழில்முடக்கம், தொழில் நெருக்கடி, வியாபாரச் சரிவு, மக்களுக்கு ஏற்பட்ட அலைச்சல், அலைச்சலின் காரணமாக ஏற்பட்ட பொருளிழப்பு, திரும்பப் பெறப்பட்ட ரூபாய்கள் உற்பத்தி செய்தமைக்கான செலவுகள், அவற்றை நாடு முழுவதும் பரப்பவும் பாதுகாக்கவும் பல ஆண்டுகளாக செய்து வந்த போக்குவரத்து, சேமிப்பு, பாதுகாப்புச் செலவு, இப்போது பாதுகாப்பாக திரும்பக் கொண்டு வந்து அழிப்பதற்கான செலவு, புதிய நோட்டுகளுக்கான செலவு, அவற்றை பாதுகாப்பாக நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான செலவுகள், ஏடிஎம் இயந்திரங்கள் சீர் செய்வதற்கான செலவு, நோட்டுகளை மாற்ற மக்கள் எழுதிக் கொடுத்த விண்ணப்பத்துக்கும் அடையாள அட்டை நகலுக்கும் பலகோடிக்கணக்கான காகிதங்களுக்கான செலவுகள், அவற்றை வங்கிகளில் மூட்டை மூட்டையாக வைத்திருக்க, பராமரிக்க வேண்டியதற்கான செலவு, மக்கள் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, ஒரு ஏடிஎம்மிலிருந்து இன்னொரு ஏடிஎம்முக்குப் பயணிக்க நேர்ந்த்தால் ஏற்பட்ட செலவுகள், கடைக்கோடி கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வங்கிகளுக்கு நடையாய் நடந்த செலவு.... இப்படி இன்னும் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்போது யோசித்துப் பாருங்கள் - நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதால் கிடைக்கக்கூடிய பயன்களைவிட, அதன் விளைவுகளால் ஏற்பட்ட நஷ்டம் அதிகமாக இருக்குமா இல்லையா?

? லாப நஷ்டத்தை பொருள் ரீதியாக மட்டும் பார்க்க முடியாது அல்லவா? ஒருமுறை எல்லாப் பணமும் கணக்குக்கு வந்து விட்டால் மீண்டும் கறுப்புப்பணம் உருவாகாது இல்லையா?
•-• நான் பொருள் ரீதியாக மட்டும் பார்க்கவில்லை. சாமானியர்கள் எத்தனை கோடிப்பேருக்கு மன உளைச்சல்? அதற்கு ஏதாவது மதிப்பு உண்டா? அது ஒருபுறம் இருக்கட்டும்.
கறுப்புப் பணம் 500/1000 ரூபாய் நோட்டுகளாகத்தான் பதுக்கப்படுகிறது என்பதற்காகவே அவை செல்லாமல் ஆக்கப்பட்டன. ஆனால் இப்போது அதைவிட அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் வந்து விட்டன! அதுபோக, மீண்டும் 500/1000 ரூபாய் நோட்டுகளும் வருகின்றன. எனவே, அந்த வாதம் அடிபட்டுப் போகிறது. அதுவும் ஒருபுறம் இருக்கட்டும். ஏற்கெனவே சொன்ன அதே பதில்தான் இப்போதும் சொல்ல வேண்டும். இந்த நடவடிக்கையால் ரொக்கமாகப் பதுக்கி வைத்திருந்த சிலருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்தான். ஆனால் அது தற்காலிகம்தான். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் இப்படி பலவகையான வழிகளை கையில் வைத்திருப்பார்கள். எதுவுமே முடியாவிட்டாலும் எரித்துவிட்டுப்போகலாம், கறுப்புப்பணம் போனதால் கையில் காசில்லாமல் பட்டினி கிடந்து தெருவுக்கு பிச்சையெடுக்க வந்துவிடப் போவதில்லை. இப்போதே அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
எனவே, கறுப்புப் பொருளாதாரத்தை முடக்காத வரையில் கறுப்புப் பணத்தை அழிக்க முடியாது. கறுப்புப்பொருளாதாரத்தின் வழிகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அந்த வழிகளை அடைப்பதற்கான எந்த நடவடிக்கையும் காணோம் என்பதற்கான உதாரணம்தான் பெலகேரி துறைமுக ஊழல். அவ்வளவு ஏன், நாட்டின் பொருளாதாரத்தின் மீதான அக்கறையின் காரணமாகவே இதைச் செய்ததாகக் கூறும் அரசியல் கட்சிகள் தம்முடைய வருமானத்தின் வழிகளை வெளியிடுவதில்லையே?! யார் அவர்களுக்குக் கோடி கோடியாக வழங்குகிறார்கள் என்று விவரத்தைச் சொல்லுவதில்லையே?! அவர்கள் சொல்லாவிட்டாலும் யார் தருவார்கள் என்பதும், அரசியல் கட்சிகளுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுப்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் சும்மா தர மாட்டார்கள் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
பல்லாயிரம் கோடி ஊழல் செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் கொடுக்கும் பணத்துக்காக அவர்களை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, நாட்டுக்குச் சொந்தமான பொதுத்துறை வங்கிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவர்களுக்கு கடனாக வாரி வழங்கிக்கொண்டு, வாங்கிய கடனைத் திருப்பித் தராதிருக்கும்போதும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து கொண்டு, மக்கள் பணத்தை வாராக்கடனாக தள்ளுபடி செய்து கொண்டிருப்பவர்கள் கறுப்புப் பணத்தின்மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று சொல்வதை நம்ப வேண்டும் என்றால்... கேப்பையில் நெய் வடிகிறது என்றால் நம்பக்கூடிய கேனையர்களாக நம்மைக் கருதுகிறார்கள் என்பது தெளிவு.

? இந்த நடவடிக்கையால் கள்ளநோட்டுகளுக்கு முடிவு வரும் அல்லவா?
•-• நிச்சயமாக. இந்த விஷயத்தில் அதனை நல்ல பயனாகச் சொல்ல முடியும். இங்கே இன்னும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கள்ள நோட்டு என்று சொல்லும்போதே அதுகுறித்து ஒரு சித்திரம் நமக்குள் உருவாகிறது - இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் கள்ளநோட்டுகளை அனுப்பி வைக்கிறது என்பதாகும். அது உண்மையாகவும் இருக்கலாம். உள்நாட்டில் சிலர் அதற்கு உடந்தையாகவும் இருப்பார்கள். இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கள்ள நோட்டு ஒரு தலைவலியாகத்தான் இருக்கிறது. கள்ளநோட்டுகள் ஒழிக்கப்பட வேண்டும், கள்ள நோட்டுகளை பரப்புவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இந்தியப் பணப்புழக்கத்தில் கள்ளநோட்டுகளின் பங்கு என்ன? 0.04 விழுக்காடு என்கிறது ஓர் மதிப்பீடு. ஆனால் வெளியே பரப்பப்படும் செய்தி என்ன? “நான்கில் ஒரு நோட்டு கள்ளநோட்டு.இவ்வாறு மிகைப்படுத்திய செய்திகளை தொலைக்காட்சி உரையாடல்களில் பங்கேற்போர், சமூக ஊடகங்களில் எழுதுவோர் மூலமாகப் பரப்பி ஓர் அரசியல் செய்கிறது பாஜக. இதன் நோக்கமாகத் தெரிவது ஒன்று, கறுப்புப்பணம்-கறுப்புப் பொருளாதாரம் என்ற பிரச்சினையை கள்ளநோட்டுகள் என்ற அளவுக்குள் குறுக்கி, கறுப்புப் பொருளாதாரம் பற்றிய விவாதம் எழாமல் திசைதிருப்புவது. இரண்டாவது, அவசரகோலத்தில் ரூபாய் நோட்டை செல்லாமலாக்கிய நடவடிக்கையை விமர்சிப்பவர்கள் எல்லாரையும் கள்ள நோட்டுக்கு ஆதரவாகப் பேசும் தேச விரோதிகள் என்று குற்றம் சாட்டுவது. எந்தவொரு பிரச்சினையையும் தேசபக்தி என்ற வளையத்துக்குள் அடக்குவது. இது மிகவும் அபாயகரமானது. இந்த அரசும், ஆளும் கட்சியும் இதை தொடர்ந்து செய்து வருகின்றன.
மற்றொரு விஷயம் அவசர கோலத்தில் செய்த இந்த அறிவிப்பால் கள்ள நோட்டுகளும் வங்கிக்குப் போய்ச்சேரும். கள்ளநோட்டுகளை மட்டுமே வைத்திருக்கிறவர்கள் அதை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போக இருக்கலாம். ஆனால் அறியாமையால் மக்கள் கைக்கு வந்து கலந்துவிட்ட கள்ள நோட்டுகள் வங்கிக்குப் போய்ச்சேரும். எல்லா வங்கிகளிலும் கள்ளநோட்டுகளை சோதனை செய்து நிராகரிக்கும் வசதி இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, கள்ள நோட்டுகள் இருந்தால், அவை வங்கிக்கு வந்தால், நல்ல நோட்டுகளாக மக்களிடம் திரும்பிப் போகும் என்பது எவ்வளவு பெரிய முரண்.

? இந்த நடவடிக்கை ஏழைகளையும் பணக்காரர்களையும் சமமாக்கி விட்டது என்று சொல்கிறாரே பிரதமர்?
•-• அவர் என்ன சொல்கிறார் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அவருடைய பக்தர்களுக்கும்கூடப் புரியுமா என்று தெரியவில்லை. உங்களுக்குப் புரிந்திருந்தால் நீங்கள் சொல்லுங்கள், நானும் புரிந்து கொள்கிறேன்.

? கறுப்புப்பணம் வைத்திருந்தவன் எல்லாம் இன்று 4000 ரூபாய்க்காக வரிசையில் நிற்கிறான் என்று கூறியிருக்கிறாரே?
•-• வங்கிகளிலும், அரிதாகச் செயல்படுகிற ஏடிஎம்களிலும் மணிக்கணக்கில் வரிசையில் நிற்பவர்கள் யார்? அதானி, அம்பானிகளா? டாடா பிர்லாக்களா? ரெட்டிகளா? வைரவியாபார படேல்களா? பெலகேரி ஊழல் புரிந்தவர்களா? அரசியல்வாதிகளா இல்லை அதிகார வர்க்கத்தினரா? அன்றாடம் காய்ச்சிகளும் சம்பளக்காரர்களும், கூலிக்காரர்களும், ஓய்வுபெற்ற முதியவர்களும்தானே நிற்கிறார்கள். அவசியச் செலவுக்கு தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக, அல்லது கையில் இருப்பதை மாற்றுவதற்காக, ஏற்கெனவே ஏதேனுமொரு செலவுக்காக எடுத்து வைத்திருந்த்தை வங்கியில் செலுத்துவதற்காக நொந்துபோய் மணிக்கணக்கில் நிற்கும் குடிமக்களை கறுப்புப் பணக்காரர்கள் என்று அவமதித்திருக்கிறார் மோடி.
மற்றவர்களின் பணத்தை மாற்றித் தருவதற்காக கமிஷன் வாங்கிக்கொண்டு வங்கிகளுக்கு வருகிறார்கள் என்று நேற்று செய்திகள் வந்தன. இருக்கலாம். வரிசையில் நின்று பழக்கமில்லாத செல்வந்தர்கள் கூலிக்கு ஆட்களை அனுப்பி வைத்திருக்கலாம். வரிசையில் நிற்கும் தெம்பில்லாத முதியவர்கள், நோயாளிகள், ஓய்வு பெற்றவர்கள் அனுப்பி வைத்திருக்கலாம். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் அனுப்பி வைத்திருக்கலாம். இது தவிர்க்க முடியாதது. அதற்காக, வரிசையில் நிற்பவர்கள் எல்லாரையும் கேவலப்படுத்தக்கூடாது.


கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடத்தியபோது அமைச்சராக இருந்தவர், கனிமவளச் சுரண்டலில் ஈடுபட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிறையில் இருந்தவர் ரெட்டி. தன் மகளின் திருமணத்துக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்கிறார். (2000 கோடி என்கிறார்கள் சிலர்.) இவர் எந்த வங்கியில் சென்று பணத்தை மாற்றியிருப்பார் என்று யாராவது சொல்லுவார்களா!
அது கிடக்கட்டும். உண்மையில், ராகுல் காந்தி வங்கிக்குச்சென்று வரிசையில் நின்றதைத்தான் அவர் கேலி செய்திருக்கிறார். பிரதமர் என்ற தகுதிக்கு இது அழகல்ல. முன்னாள் பிரதமர்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். தனிநபர் கேலிகளில் எவரும் இறங்கியதில்லை. ஆனால் இப்போதைய பிரதமருக்கு அது வழக்கம். இருக்கட்டும்.
ராகுல் காந்தி செய்தது அரசியல் நாடகம் என்றே வைத்துக்கொள்வோம். ஊழல் செய்தார்கள் என்று ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டிய இவர் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் ராகுல் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? சகல அதிகாரங்களும் இவர் வசம் இருக்கிறதே? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அது ஒருபுறம் இருக்க, அவர் பேசிய வசனம் அவரையே திருப்பித் தாக்கியிருக்கிறது. அவருடைய 96 வயது தாயார், பழைய நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் சென்றிருக்கிறார் (அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.) ராகுல் செய்தது விளம்பரம் என்றால் இது விளம்பரம் அல்லவா? தான் செய்த ஒரு குளறுபடியை நியாயம் என்று காட்டுவதற்காக, அதற்கு அனுதாபம் கிடைக்கும் வகையில் விளம்பரம் செய்து கொள்வதற்காக தள்ளாத வயதில் தாயை அனுப்பியிருக்கிறார்.
ஆக, இது வெறும் நாடகம். இந்த நாடகம் மக்களுக்குப் புரிந்துவிட்டது என்பதால்தான் நான் நாட்டுக்காக குடும்பத்தை தியாகம் செய்துவிட்டு வந்தேன், என் எதிரிகள் என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்...போன்ற பசப்பு வசனங்களை எல்லாம் பேச வேண்டியிருக்கிறது.

...தொடரும்

No comments:

Post a Comment