Monday 10 April 2017

திருத்தங்கள் தேவைப்படும் தேர்தல் சட்டம்

கடந்த ஆண்டு நான்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் எழுகின்ற பிரச்சினைகள் பலவும் இந்தத் தேர்தலின்போதும் எழுந்தன, சில பிரச்சினைகள் முடிந்து விட்டன, சில அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் பின்னணியில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் எந்த அளவுக்கு ஆற்றல் கொண்டவையாய் உள்ளன, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமாய் இருக்கிறது, தேவைப்படும் மாற்றங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.

தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வரும் தன்னாட்சி அமைப்பாகும். நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், குடியரசுத் தலைமை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் கொண்ட உச்ச அமைப்பு அது. குடியரசுத் தலைவருக்கும்கூட பதிலளிக்கும் கட்டாயம் அதற்குக் கிடையாது. ஒரு தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் நீக்க முடியும். தேர்தல் நேரத்தில் தேர்தல் தொடர்பான எல்லா அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். தேர்தல் முடிந்த பிறகே நீதிமன்றத்தின் கதவைத் தட்ட முடியும்.
தேர்தல் ஆணையம் இவ்வளவு சக்தி வாய்ந்த அமைப்பு என்பதே 1990களில்தான் வெளியே தெரிய வந்தது. அதற்குக் காரணம் சேஷன். அவரது விமர்சகர்களால் ‘அல்-சேஷன்’ என்று வர்ணிக்கப்பட்ட சேஷன், தேர்தல் ஆணையத்துக்கு இருந்த அதிகாரங்களை செயல்படுத்துவதில் முதன்மையானவர் என்பதற்காக என்றென்றும் நினைக்கப்படுவார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வாக்களார் அடையாள அட்டை துவங்கியது. வேட்பாளர்களின் செலவுக்கான உச்சவரம்பு கண்காணிக்கப்பட்டது. அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் மூலம் பிரச்சாரம் செய்யவும், உரிமையாளர்களின் ஒப்புதலின்றி சுவர்களில் விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நடத்தை நெறிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தன. இப்படி இன்னும் சிலவற்றையும் குறிப்பிடலாம்.
அவர் துவக்கி வைத்ததை அடுத்து வந்த தேர்தல் ஆணையர்களும் – கறாராகவோ மிதமாகவோ – பின்பற்றத் துவங்கினார்கள். தேர்தல் ஆணையம் என்பது ஆட்சியில் இருப்பவர்களின் சொற்படி ஆடுகிற அமைப்பு அல்ல, சுயமாக முடிவு செய்யும் அமைப்பு என்பது மக்களுக்கும் தெரிய வந்தது. அதே நேரத்தில், சேஷனின் செயல்பாடுகள் காரணமாகவே ஒரே ஒரு தேர்தல் ஆணையரிடம் அதிகாரம் குவிந்துவிடாதபடி இப்போது மூன்று ஆணையர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தால் மெஜாரிட்டி கருத்துப்படி செயல்படுவார்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் என்று ஒருவர் இருந்தாலும் அவருக்கு மற்ற இருவரையும்விட கூடுதல் அதிகாரங்கள் ஏதும் கிடையாது என மாற்றங்கள் வந்தன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் காட்சி ஊடகங்களின் பரவலால் தேர்தல் ஆணையம் பற்றியும், அதன் அறிவிப்புகள் குறித்தும் மக்களுக்கு நிறைய செய்திகள் தெரிய வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை வலைதளத்தில் அனைவரும் பார்க்கும் அளவுக்கு வெளிப்படைத்தன்மை முன்னேறியிருக்கிறது.
கட்சிகளைப் பதிவு செய்தல், அங்கீகரித்தல், சின்னங்களை ஒதுக்குதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகளைத் தவிர தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி, தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது; போட்டியிடும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பது. இந்தக் கடமையை ஒட்டியே வாக்குக்குப் பணம் கொடுத்தல், அதிகார துஷ்பிரயோகம், சாதி-மத-இன ரீதியாக பிரச்சாரம் செய்தல், வாக்காளர்களை மிரட்டுதல் போன்ற நீதிக்குப் புறம்பான செயல்களைத் தடுக்கும் கடமைகளும் ஆணையத்துக்கு உண்டு.
ஆனால் உண்மையில் ஆணையம் தனது அதிகாரங்கள் அனைத்தையும் ஆற்றலுடன் பயன்படுத்துகிறதா, பயன்படுத்த முடிகிறதா என்று பார்த்தால், பெருமளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. பணபலமும் ஆள் பலமும் தன் வேலையைக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேட்பாளர்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எத்தனை பேர், ஒவ்வொருவர் மீதும் எத்தனை குற்றம் சாட்டப்பட்டது என்ற புள்ளிவிவரங்களைத் தருவதற்கும் மேல் ஏதும் செய்துவிட முடியவில்லை. நடத்தைநெறி மீறலுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டது தவிர எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கண்மூடித்தனமாக இலவசங்களை அறிவிக்கக்கூடாது, நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும்போது அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பதையும் சொல்லியாக வேண்டும் என்கிறது நடத்தை நெறி. ஆனால் இலவசங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அறிவித்த கட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் காணோம்.
தேர்தல் பிரச்சாரத்தில் சாதியையோ மதத்தையோ பயன்படுத்தக்கூடாது என்பது ஒரு விதி. தில்லி சட்டமன்றத்துக்கான தேர்தலின்போது பாஜக கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர், “பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் ராமர் சாதியினர், மற்றவர்களுக்கு வாக்களிப்போர் நீச சாதியினர்” என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் “மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்” என்றார் பாஜகவின் கிரிராஜ். இதுபோன்ற மதவெறிப் பேச்சுகளுக்கு தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை வெறும் எச்சரிக்கை விடுப்பது மட்டுமே.
தேர்தல் நேரத்தில் பார்வையாளர்களை நியமிக்கிறது தேர்தல் ஆணையம். வேட்பாளர்களும் கட்சிகளும் தமது குறைகளை பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்கிறது நடத்தை நெறிமுறை. நாடாளுமன்றத்துக்கான தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மோதல்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் அளித்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த பார்வையாளர்களை கடுமையாக சாடினார் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் சவுத்ரி. திரிணமுல் காங்கிரசின் அத்துமீறிய செயல்களைப் பார்த்தபிறகும் செயல்பட முடியாத “பல்லில்லாத புலிகள்” என்று தேர்தல் ஆணையத்தை நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும், அனுமதிக்கப்பட்ட பாதை வழியாகவே செல்ல வேண்டும் என பல்வேறு விஷயங்களை முன்வைக்கிறது தேர்தல் நடத்தை நெறிமுறை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூன்று தொகுதிகளில் தாக்கப்பட்டனர். மால்டா தக்ஷிண் தொகுதியில் விதிக்குப் புறம்பாக ஊர்வலம் நடத்த முயன்ற திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களைத் தடுக்க முடியாமல் போனதால் ஊர்வலத்தைப் புகைப்படம் எடுக்க முயன்றனர் தேர்தல் ஆணையத்தினர். கட்சித் தொண்டர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளைத் தாக்கியதோடு அவர்களுடைய கேமராக்களையும் உடைத்தெறிந்தனர். இறுதியில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, பிரச்சினையை தீவிர கவலையுடன் கவனித்து வருகிறோம் என்று தில்லியிலிருந்து தேர்தல் ஆணையம் கூறியது. அத்துடன் விஷயம் முடிந்து விட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்திலேயே இவ்வளவுதான் நடவடிக்கை.
இவற்றை எல்லாம் பார்க்கையில், நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்துவது என்ற திசையில் செய்ததைவிட அமைதியாக தேர்தல் நடந்தால் போதும் என்ற திசையில்தான் இதுவரை தேர்தல் ஆணையம் அதிகம் செயல்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் எப்போது எங்கே துவங்கியது என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் தமிழகம்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா என்று நாடெங்கும் பிரபலமாகி விட்ட இந்த வழக்கம் இப்போது இதர மாநிலங்களுக்கும் பரவிவிட்டது. முதலிடத்தைத் தக்க வைப்பதில் தமிழகம் ஆந்திரத்துடன் போட்டி போட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில்தான். 100 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டது. (570 கோடி ரூபாய் விவகாரம் மர்மமாகவே தொடர்கிறது.) பணம் தவிர, வாக்குக்கான லஞ்சம் வழங்குவதில் புதுப்புது கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி வருகிறது தமிழ்நாடு. 6112 பறக்கும் படைகளையும், 21,300 பேரைக் கொண்ட கிராம விழிப்புக் குழுக்களையும் அமைத்தும்கூட பணப்பட்டுவாடா நடந்துகொண்டுதான் இருந்தது. சரத் குமார் காரில் 9 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஈரோட்டிலும் தஞ்சாவூரிலும் பெட்ரோல் வாங்கிக் கொள்வதற்கான 3,000 கூப்பன்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு பெட்ரோல் பம்ப்களிலிருந்து 700 கூப்பன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர, ஒரு மாதத்துக்கான பால் கூப்பன், நகைக் கூப்பன், செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்தல், ரயிலுக்கான பயணச்சீட்டு பதிவு செய்து கொடுத்தல் என வாக்காளர்களுக்கு லஞ்சம் தரும் புதிய வழிவகைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒருகாலத்தில் பண விநியோகம் செய்ததுபோல இப்போது தைரியமாகச் செய்ய முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், யாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதோ அல்லது யார் விநியோகம் செய்தார்களோ அவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்பது கடைசிவரை தெரிவதில்லை.
வாக்குக்கு பணமாகவோ பொருளாகவோ லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(1)ஆவது பிரிவின்படி, வாக்குக்கு பணம் வாங்கியதற்காக அல்லது கொடுத்ததற்காக ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், தவறாமல் வாக்களியுங்கள் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக விளம்பரம் செய்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் மற்றொரு பக்கம் பணவிநியோகமும் நடந்து வருகிறது. பண விநியோகம் காரணமாகவே அரவாக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம்  எந்தக் கட்சியினருடையது என்று தெரிந்தும் கட்சிகளின்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மேல்பாடியில் வாக்குக்காகப் பணம் பெற்ற திமுகவைச் சேர்ந்த ஒருவரும், மாச்சனூரில் பணவிநியோகம் செய்த அதிமுகவினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இவர்களைப் போன்ற சிறிய மீன்கள்தான் மாட்டுவார்களே தவிர, தலைவர்கள் எவரும் சிக்குவதும் இல்லை, தண்டிக்கப்படுவதும் இல்லை.

இந்த வரிசையில் இப்போது ஆர்.கே. நகர் தொகுதியும் சேர்ந்து கொண்டது. அதிமுகவின் சசிகலா அணியைச் சேர்ந்த தினகரன் ஒரு வேட்பாளர். ஒரு வாக்குக்கு சராசரியாக 4000 ரூபாய் என்ற விகிதத்தில் சுமார் 86 கோடி ரூபாய் விநியோகம் செய்ய விரிவாகத் திட்டமிட்ட ஆவணங்கள் எல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பிடிபட்டன. தேர்தல் ஆணையம் பொதுவாக ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று சோதனைக் குழுக்களை அமைக்கும். ஆர்.கே. நகர் தொகுதியில் 70 சோதனைக் குழுக்களை அமைத்தது. பல இடங்களில் பண விநியோகம் நடப்பது தெரிந்து பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடைசியில் நடந்தது என்ன? மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக 9ஆம் தேதி இரவு அறிவிக்கப்பட்டது. அதாவது, பணம் விநியோகிக்கப்படுகிறது என்று தெரிந்தாலும், எந்த வேட்பாளருடையது என்று தெரிந்தாலும், அந்த வேட்பாளரை மட்டும் நீக்கிவிட்டு தேர்தல் நடத்த முடியாது, ஒத்திவைக்க மட்டுமே முடியும். அந்த அளவுக்கு தேர்தல் ஆணையத்திடம் அதிகாரம் இல்லை.
எந்தவொரு மதத்தின் தலைவரும் அல்லது எவரும் குறிப்பிட்ட மதம், சாதி, இனம் அல்லது மொழி சார்ந்து குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(2)ஆவது பிரிவின்படி, ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். தேர்தல் நேரத்தில் இமாம்களும் மதவாத சாமியார்களும் இன்னின்னாருக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள். மதத்தின் பேரால் வாக்குக் கேட்டதற்காக ஆறு ஆண்டுகளுக்கு பால் தாக்கரேயின் வாக்களிக்கும் உரிமையும் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் பறிக்கப்பட்டது தவிர இதுவரை எத்தனை மதத்தலைவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? ‘ராம்ஜாதே-ஹராம்ஜாதே’ (பாஜகவுக்கு வாக்களித்தால் ராம-ஜாதி, மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீச-ஜாதி) என்று கூறிய மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இப்போதும் மத்தியில் அமைச்சராகவே தொடர்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் செலவு செய்வதற்கான உச்சவரம்பு – தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் 16 லட்சம் ரூபாய். கோவா, புதுச்சேரி போன்ற சிறிய மாநிலங்களுக்கு 8 லட்சம் ரூபாய். தமிழ்நாட்டில் எந்த வேட்பாளரும் 16 லட்சம் ரூபாய்க்குள் செலவு செய்வது கிடையாது, அதிலும் பெரிய கட்சிகள் பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் விதிக்கப்பட்ட வரம்புக்குள் செலவு செய்ததாக கணக்கு மட்டும் காட்டுவார்கள். 30 நாட்களுக்குள் கணக்குக் காட்டவில்லை என்றால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 10ஏ பிரிவின்படி அவர் பதவியிழக்க நேரிடும். உத்திரப்பிரதேசத்தில் உமலேஷ் யாதவ் என்ற பெண்மணி தவறான கணக்குக் காட்டியதற்காக அவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது தவிர உரிய காலத்தில் அல்லது கணக்குக் காட்டாததற்காக எத்தனை பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன? மது கோடாவும், அசோக் சவுஹானும் குறைவாகக் கணக்குக் காட்டினார்கள் என்று வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையமே விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
வேட்புமனுவிலும், அத்துடன் தரப்படுகிற சுயபிரமாணத்திலும் தரப்பட்ட தகவல்கள் தவறாகவோ பொய்யாகவோ இருந்தால் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் தவறான சான்றிதழ் தந்தமைக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இதேபோல முரண்பாடான தகவல் அளித்த இன்னொருவர் மத்தியில் கல்வித்துறை அமைச்சராகத் தொடர்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் சான்றிதழ் விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையில் இருக்கிறது.
மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முனைந்தால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், பீகார் தேர்தலிலும் மதவாதங்கள் பகிரங்கமாகவே முன்வைக்கப்பட்டன. இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை.  
அப்படியானால் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரங்களே இல்லையா? தேர்தல் முறைகேடுகளுக்கு முடிவே இல்லையா? இரண்டுமே உண்டுதான், ஆனால் இரண்டிலும் நிறையவே சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 329 (a) தேர்தல் பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வரையறுத்துள்ளது. வழக்குகளின் காரணமாக தேர்தல் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதே இதன் நோக்கம். தேர்தல் முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட வேட்பாளரும், குடிமகனும் நீதிமன்றத்தை அணுகலாம்.
1996 வரையில் தேர்தல் குறித்த முறையீடுகளை தேர்தல் ஆணையமே கவனித்துக் கொண்டிருந்தது. மாவட்ட நீதிபதி என்ற தகுதியுடையவரின் கீழ் தற்காலிக டிரிப்யூனல்களை அமைத்து விசாரித்து வந்தது. ஆனால் ஹரி விஷ்ணு காமத் – எதிர் – அஹமத் இஷாக் என்ற வழக்கில், டிரிப்யூனலிடம் ஒப்படைப்பதைவிட உயர்நீதிமன்றம் கவனிப்பதே சரியாக இருக்கும் என உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, இரண்டு அமைப்புகள் தேவை இல்லை என்று கருதிய தேர்தல் ஆணையம், தேர்தல் முறையீடுகள் அனைத்தையும் உயர்நீதிமன்றமே ஏற்க வேண்டும் என ஒப்புக்கொண்டது. 1996இல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டு, தேர்தல் வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று வழிசெய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் பலவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ளவைதான். எந்தவொரு வேட்பாளரும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதாகத் தெரிந்தால் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் முறையீடு செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதி கிடைக்கவில்லை என்று கருதினால், தீர்ப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம். இந்திரா காந்தி 1971 தேர்தலில் முறைகேடுகள் செய்தார் என்ற வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய தேர்தல் செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதான் தேர்தல் வழக்கில் மிக முக்கியமான வழக்காகும். (ஆனால் தீர்ப்பு வந்த சில நாட்களில் இந்திரா காந்தி நெருக்கடிநிலை பிரகடனம் செய்து விட்டது தனிக்கதை.)
மேற்சொன்ன விஷயங்களில் எல்லாம் வேட்பாளர்கள் பெரும்பாலும் தண்டனை பெறாமல் நழுவி விடுகிறார்கள். சட்டத்தில் உள்ள ஒரு வாசகம் கவனிக்கத்தக்கது. நிகழ்ந்த சம்பவம் வேட்பாளரின் ஒப்புதலுடன்தான் நடந்தது (with the consent of a candidate or his election agent) என்று வழக்குத் தொடுப்பவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.  
உச்சநீதிமன்றத்தில் தரப்பட்ட ஒரு முறையீட்டின்மீது ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும். 2009 தேர்தலின்போது ப. சிதம்பரத்தின் தேர்வு செல்லாது என 25 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவருடைய பதவிக்காலமும் முடிந்து அடுத்த தேர்தலும் முடிந்து விட்டது. 2009 தேர்தலுக்குப் பிறகு தொடுக்கப்பட்ட 110 வழக்குகளில் ஒன்றுகூட உரிய காலத்தில் முடியவில்லை. சச்சின் பைலட், கமல்நாத், மு.க. அழகிரி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் போதுமான சாட்சியங்கள் இல்லாததால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டன. 21 வழக்குகள் ஐந்தாண்டுகள் முடிந்தும் தீரவில்லை. சில வழக்குகளில் காலம் கடந்து விட்டது என்ற காரணம் காட்டி அர்த்தமிழந்தவை (infructuous) என்று தள்ளுபடி செய்யப்படும் வழக்கமும் உள்ளது. இது முறையற்றதாகும். குறிப்பிட்ட ஒரு வழக்கில் காலம் கடந்து விட்டாலும், அந்த வழக்கில் கிடைக்கும் தீர்ப்பு அடுத்த முறை அதேபோன்ற மற்றொரு வழக்குக்கு தீர்வாக அமையக்கூடும் என்பதை இதுவரை எவருமே கணக்கில் கொள்ளவில்லையா?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ள விதிகள் விரிவானவை. வேட்பாளர் அளிக்கும் சுயபிரமாணத்தில் (அஃபிடவிட்டில்) பொய்யான தகவலை அளித்தால் அல்லது தகவல்களை மறைத்தால் அபராதத்துடன் 6 மாதம் வரை சிறைதண்டனை விதிக்கலாம். தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும், தவறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னையின் பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை. வெறும் 500 ரூபாய் அபராதம் என்பது எவருக்கும் பொருட்டில்லை.
இத்தனை பின்னடைவுகள் இருந்தாலும் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இன்று வேட்பாளர்களின் விவரங்களை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்ள முடிகிறதே, இதன் பின்னால் இருப்பதும் ஒரு வழக்குதான். ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் (ADR) மற்றும் குடிமை உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUCL) தொடுத்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் மூலம்தான் வேட்பாளர்களின் சொத்துகள், குற்றப் பின்னணி, கல்வித்தகுதி ஆகிய விவரங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் குறித்து நிறையவே எழுத முடியும். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
 


இப்போது இருக்கிற நடத்தை நெறிமுறைகள் குறித்து கட்சிகள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. அது குரைக்கிறது, யாரையும் கடித்ததில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பிலிபிட் தொகுதியில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி சிறுபான்மையினருக்கு எதிராக விஷமம் தொனிக்கும் வகையில் பேசினார். அதன் காணொளியின் அடிப்படையில், அவரை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு அறிவுறுத்தியது. பாஜக அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவர் கைது செய்யப்பட்டார், 20 நாட்கள் சிறையிலும் இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் மீதான வழக்கு தொடர்ந்தது. 88 சாட்சிகளும் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். வழக்கில் நிரபராதி என வெளியே வந்தார் வருண் காந்தி. (சாட்சிகள் மிரட்டப்பட்டது குறித்து தெஹல்கா விரிவாக எழுதியுள்ளது.)
தேர்தல் விதிகளை மாற்ற வேண்டும் என்ற குரல் தேர்தல் ஆணையர்களிடமிருந்தும் பல்லாண்டு காலமாக எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. 1991இல் நடத்தை நெறிமுறைகள் அறிமுகம் ஆகி 2011 வரை இருபது ஆண்டுகளில் எட்டாயிரம் புகார்கள் தொடுக்கப்பட்டன. ஆனால் ஒன்றிலும்கூட முடிவு காணப்படவில்லை. ஓர் எச்சரிக்கை அல்லது கண்டனத்துக்கும் அதிகமாக ஏதும் நடந்துவிடப் போவதில்லை என்று கட்சியினரும் வேட்பாளர்களும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ‘நடத்தை நெறிமுறைகளுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட வேண்டும்,’ என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி. ‘அப்படியில்லை, தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை,’ என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி.
தவறு செய்யும் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது எழுவதுண்டு. ஒரு நபர் செய்த தவறுக்கு கட்சியையே எப்படி தண்டிக்க முடியும் என்பது குரேஷியின் வாதம். ஒரு கட்சி தொடர்ந்து தவறு செய்து வந்தால், அதன் சின்னத்தைப் பறிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. ஆனால் இதுவரை அப்படி நடந்தது இல்லை.
வேட்பாளர் சரியான தகவலைக் கொடுக்கவில்லை என்றால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க சட்டக் கமிஷன் பரீசீலித்து வருவதாக அண்மையில் தேர்தல் ஆணையர் கூறியிருக்கிறார். ஒரு கட்சிக்கு நாற்பது பேச்சாளர்கள் வரை அனுமதிக்கும் வழி இப்போது இருக்கிறது. அதைக் குறைக்கும் யோசனையும் பரிசீலனையில் இருக்கிறது. தேர்தல் நிதிக்காக தேசிய தேர்தல் அறக்கட்டளை நிதியம் ஒன்று உருவாக்கி, நிறுவனங்கள் அதற்கு நன்கொடை அளிக்குமாறு செய்யலாம், அரசே வேட்பாளர்களுக்கான செலவுக்குப் பொறுப்பேற்கலாம் என்றும் ஓர் கருத்து இருக்கிறது. ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது என்றே தோன்றுகிறது. சட்டக் கமிஷன் தேர்தல் சீர்திருத்த அறிக்கையை மைய சட்டத்துறை அமைச்சகத்துக்கு அளித்து (2015 மார்ச்) இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இந்தச்சூழலில், அவதூறு வழக்குகள் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவதூறு வழக்கு என்பது பிரிட்டிஷ் காலத்தியது, இப்போது அர்த்தமிழந்து விட்டது என்று சுப்பிரமணியம் சுவாமி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களின் பல்வேறு மனுக்களின் மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனிநபரின் பேச்சு சுதந்திரம் அடுத்தவரின் சுய கௌரவத்துடன் தொடர்புடையது என்றும், கிரிமினல் அவதூறு செய்வதை கிரிமினல் குற்றம் என்பது செல்லுபடியாகும் எனத் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் காலங்களில் வாய்க்கு வந்தபடி பேசும் அரசியல்வாதிகளை இது சற்றே கட்டுப்படுத்தும் என நம்பலாம். அதே நேரத்தில், பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டவர்களை இது பாதிக்கவும் செய்யலாம்.
தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அவ்வப்போது பேசப்படுகிறது. இதில் முக்கிய விஷயங்களாக விவாதிக்கப்படுபவை குறித்துப் பார்ப்போம் :
  • வேட்பாளரின் செலவு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் — பெரிய மாநிலங்களில் நாடாளுமன்ற வேட்பாளருக்கு 70 லட்சம், சட்டமன்ற வேட்பாளருக்கு 28 லட்சம் ரூபாய் என்பது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் இதனை அடிக்கடி உயர்த்துவதால் மாற்றம் ஏதும் வந்துவிடப் போவதில்லை. கடந்த சில தேர்தல்களில் சில மாநிலங்களில் போட்டியிட்டவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தொகையில் பாதியளவே செலவு செய்திருக்கிறார்கள் (அல்லது செய்ததாகக் காட்டினார்கள்) என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் பல கோடிகள் செலவு செய்ததும் தெரிய வந்தது. வரம்புக்கு மேல் செலவு செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • வேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும், தேவைப்படுமானால் தனி வரி விதிக்க வேண்டும் — தேர்தல்களில் கறுப்புப்பணமும் கார்ப்பரேட் பணமும் விளையாடும் இந்திய அரசியலில் இது சிக்கலான விஷயம். வேட்பாளரின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்பது அனைத்துக் கட்சியினருக்கும் சமமான நிலையில் போட்டியிட உதவும். ஆனால், கட்சி செலவுகள் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக மேலும் வரி விதிப்பது மக்களின் அதிருப்தியையே கொண்டு வரும்.
  • கட்சிகளுக்குத் தரப்படும் நன்கொடைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக கம்பெனி சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும், தனிநபர்கள் அளிக்கும் தொகைகள் காசோலை வழியாகவே தரப்பட வேண்டும் — அரசியல் கட்சிகள் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் வர வேண்டும் என்பதைக்கூட ஏற்காத நமது அரசியல் கட்சிகள் இதை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.
  • பணம் கொடுத்து செய்திகளை வெளியிடும் முறைக்கு முடிவு கட்ட வேண்டும் — வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் பல மாநிலங்களில் கட்சிகளுக்கு சொந்தமாக தொலைக்காட்சி சானல்கள் நிறையவே இருக்கின்றன. அதுதவிர, பெரும்பாலான செய்தி ஊடகங்கள் கட்சி சார்பு கொண்டவையாக அல்லது மறைமுகமாக கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கின்றன. பெய்டு நியூஸ் என்ற விவகாரம் வேறு இருக்கிறது. இப்போது புதிதாக முளைத்திருக்கும் சமூக ஊடகங்களும் வலைதளங்களும் கண்காணிப்பு முறைக்கு பெரும் சவாலாக இருக்கின்றன. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
  • கருத்துக் கணிப்புகளின் பெயரால் கருத்துத் திணிப்புகள் நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். அரசியல் கட்சிகளுக்கு சொந்தமான தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்புகள் என்று கூறாமல் வேறு பெயரில் தாக்கம் ஏற்படுத்த முயலும். இதையும் கண்காணிப்பது அவசியம்.
  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பழிவாங்கும் முறைகள் இல்லாத, நடைமுறை சாத்தியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • எந்த வேட்பாளரும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடலாம் என்று விதி வகுக்க வேண்டும். அல்லது ஒரு தொகுதியில் கிடைத்த வெற்றியை விட்டுக்கொடுக்கும்போது மறுதேர்தலுக்காக அரசு செய்யும் செலவுகளுக்கும் கூடுதலான தொகையை அவரிடமிருந்து வசூலிக்க வழி செய்ய வேண்டும்.  
  • தேர்தல் முறையீடுகள் மீது ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கென தனி நீதிமன்றங்களையும் அமைக்கலாம்.
  • இப்போது இருக்கிற நோடா (NOTA) எந்தப் பயனுமற்றது, செல்லாத வாக்குக்கு நிகரான மதிப்புடையது. இதற்கு பதிலாக, நோடாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல் நடத்தும் வகையில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான உரிமை (Right to Reject) ஆர்டிஆர், மற்றும் வேட்பாளரை திரும்பப் பெறுவதற்கான (Right to Recall) உரிமை ஆகியவை ஏற்கப்பட முடியாதது என்று சட்டக் கமிஷன் கருதுகிறது. இதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
  • தேர்தல் முறைகேடுகளில் பலவற்றை இல்லாமல் ஆக்கக்கூடிய ஒரு தீர்வு உண்டு, அதுதான் விகிதாச்சார பிரதிநிதித்துவம். சட்டக் கமிஷன் இதை முற்றாக நிராகரிக்கிறது என்பது வருத்தத்துக்குரியது. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் என்று வரும்போது தனிநபர் ஆதிக்கம், தனிநபர் புகழ்பாடுதல் குறையும். வாக்குக்குப் பணம் கொடுக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தனிநபர் அவதூறுகள் மட்டுப்படும். ஆரோக்கியமான கொள்கைரீதியான அரசியல் வலுப்பெறும். வாக்களிப்பு விகிதம் அதிகரிக்கும், நோட்டாவுக்கு வாக்களிப்போர் எண்ணிக்கை குறையும். இப்போது நடைமுறையில் இருக்கிற தேர்தல் முறைக்கு முற்றிலும் மாற்றாக அதைக் கொண்டு வருவதா, அல்லது, அத்துடன் இதையும் சேர்ப்பதா என்பதெல்லாம் அலசிப் பார்க்க வேண்டியவை.  ஆனால் இதைப்பற்றி தேசியக் கட்சிகள் ஒருபோதும் பேசப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

எல்லாவற்றையும்விட முக்கியமான மற்றொரு விஷயம் இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற வாதம். அதாவது, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. பிரதமர் மோடி இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் விஷயம் என்னவென்றால், இதுகுறித்து திட்டமிடுமாறு 2015இலேயே தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது என்ற செய்தி ஜூலை மாதம் வெளியாகியிருக்கிறது.

விடுதலை பெற்ற பிறகு 1967 வரை நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. மத்திய அரசு சில மாநில ஆட்சிகளைக் கலைத்ததன் காரணமாகத்தான் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடைபெறும் வழக்கம் துவங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறை வருமானால், மத்திய அரசு எந்த மாநில அரசையும் கலைக்காது என்று உத்தரவாதம் தருமா? நிச்சயமாகத் தராது - மத்தியில் பாஜக இருந்தாலும் சரி, காங்கிரஸ் இருந்தாலும் சரி - இந்த உறுதிமொழி சாத்தியமில்லை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத தொங்குநிலை ஏற்பட்டால் என்னவாகும்? கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டு ஆட்சி கலைந்தால் என்னவாகும்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரைக்கும் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்குமா என்ன? எனவே, இது நடைமுறை சாத்தியமற்ற திட்டம்.

அப்படியானால் இந்தக் கோரிக்கை ஏன் எழுகிறது? நடுத்தர வர்க்க சராசரி மனநிலையில் பார்த்தால், முதல் பார்வைக்கு, இது நல்லதுதானே... செலவு குறையுமே என்று தோன்றும். ஆனால் இந்த யோசனையின் பின்னே இருக்கிற நோக்கம் முற்றிலும் வேறு. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சி அதே வேகத்தில் எல்லா மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதன் பிறகு,  நாடாளுமன்ற மாநிலங்களவைக்கும் அதே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் தேர்வு பெறுவார்கள். ஆக, மக்களவை-மாநிலங்களவை என இரண்டிலும் ஒரே கட்சியின் ஆதிக்கம் இருக்கும். இது அரசமைப்பு வலியுறுத்துகிற கூட்டாட்சி அமைப்பையே பலவீனப்படுத்தும். மையம்-மாநிலங்கள் என இரண்டிலும் ஒரே கட்சி என்னும்போது, மக்கள்விரோத சட்டங்களை கண்மூடித்தனமாக நிறைவேற்ற முடியும். மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முடியும். எனவே, நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி, ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தை நிறுவக்கூடிய இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கடமை இந்தியா முழுக்கவும் இருக்கும் எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கிறது.

வேட்பாளர்களுக்கென தனித்தனி வண்ணப் பெட்டிகள் இருந்த காலத்திலிருந்து வாக்குச்சீட்டு முறைக்கும், இப்போது மின்னணு இயந்திரத்துக்கும் மாறியிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, 1996இல் மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் பங்கேற்ற சம்பவத்தையும் கண்டது. அந்த வாக்குச்சீட்டு சிறிய புத்தகம் போல இருந்தது. உலகின் முன்னேறிய நாடுகள்கூட இன்றும் வாக்குச்சீட்டையே பயன்படுத்திக் கொண்டிருக்கையில், இந்தியா மின்னணு முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறது. 21 வயதினர்தான் வாக்களிக்க முடியும் என்று இருந்ததை 1988 முதல் 18 வயதாகக் குறைத்து, இளைய தலைமுறைக்கு வாக்களிக்கும் பொறுப்பை அளித்திருக்கிறது.

சில குறைகள் இருந்தாலும், வாக்காளர் பட்டியல் கணினிமயமாக்கப்பட்டு, எல்லாருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கச் செய்திருக்கிறது. ஒருகாலத்தில் ஆள்பலமும் பணபலமும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்தன. இன்று ஆள்பலம் என்ற அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பணபலம் இன்றும் பெரிய சவாலாக இருக்கிறது. தேர்தலில் பணம் புதிய புதிய வழிகளில் பாய்கிறது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் 41 சதவிகிதம் பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். 2014இல் ஐ.நா. வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, உலகிலேயே மிக அதிகமாக - 36 கோடி இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. நாளைய இந்தியாவை ஆளப்போகிறவர்களும் இவர்கள்தான், குடிமகன்களும் இவர்கள்தான். கட்சி நலன் என்ற குறுகிய பார்வைகளைக் கைவிட்டு, இவர்களுக்காக ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பை உறுதி செய்யக்கூடிய தேர்தல் முறையை விட்டுச்செல்வது நமது பொறுப்பு. அரசியல் கட்சிகள் இதை செய்யவைப்பது நமது கடமைகளில் ஒன்று. தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல, அரசியலில் தேர்தலும் ஓர் அங்கம் என்றும், நமது ஒவ்வொரு பிரச்சினைக்கும் பின்னாலும் அரசியல் இருக்கிறது என்பதை வரலாற்றோடு சேர்த்து புரிய வைப்பதும் நமது கடமை.

Friday 7 April 2017

மைல் கற்கள் பேசும் மொழி

வரலாற்றில் அல்லது வாழ்க்கையில் முக்கியமான சம்பவத்தை important milestone என்பார்கள். என்னதான் நாம் மெட்ரிக் முறைக்கு மாறி விட்டாலும், ‘கிலோமீட்டர் ஸ்டோன்என்று சொல்லும்போது அழகாக இல்லை. அது கிடக்கட்டும். தமிழ்நாட்டில் இப்போது milestone important ஆகியிருக்கிறது. மீண்டும் துவங்கி விட்டது இந்தி சர்ச்சை.

பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப அந்தந்தப் பகுதிகளுக்கு சர்ச்சை ஏற்படுத்துவதற்கென்றே தனியாக ஒரு துறையை மத்திய அரசு வைத்திருக்கிறதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. வெளிப்படையாக ஒரு துறை இல்லாவிட்டாலும் இப்படியொரு ஆலோசகப் பிரிவு இருக்கும் சாத்தியங்கள் நிறையவே உண்டு என்பதை கடந்த மூன்று ஆண்டுகால நிகழ்வுகளைப் பார்த்தால் ஊகிக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும்.

இப்போது துவங்கியிருப்பது மைல்கற்களில் இந்தி எழுத்துகள் என்ற சர்ச்சை. வேலூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் முன்னர் ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் தகவல்கள் இருந்தன. இப்போது ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி இடம் பெறுகிறது. தெற்கே வரும் வடக்கத்திய லாரிக்காரர்களுக்காக இந்தி என்று வழக்கம்போல மொக்கைக் காரணங்களை அடுக்குகிறார் பொன்னார். அப்படியானால் வடக்கே போகும் தமிழ்நாட்டு டிரைவர்களுக்காக வடக்கே தமிழில் போடுவீர்களா என்று யாரும் அவரிடம் கேட்டதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் போக்குவரத்துத் துறை அமைச்சர்!

மற்ற எல்லா மொழிகளையும்விட இந்தி சிறந்தது, மேன்மையானது, இந்தியாவின் மொழி இந்திதான் என்ற கருத்து, தெற்கத்தியர்களை விட தாம் மேலானவர்கள் என்று கருதும் வடக்கத்தியர்களிடையே ஆழமாகப் பதிந்திருக்கிறது. பொன்னார் போன்றவர்கள் அந்த வடக்கத்தியர்களின் அடிமைகள். சுயமாக சிந்திக்கத் தெரியாது, அல்லது சிந்தித்தாலும் பேச முடியாது. இந்த இந்தி வெறி ஏதோ பாஜகவினருக்கு மட்டும் உள்ளது அல்ல. நேரு போன்றவர்களைத் தவிர, அன்றைய லால் பகதூர் சாஸ்திரி, டாண்டன்கள் முதல் இன்றைய முலாயம் வரை எல்லாருக்கும் பொருந்தும். பாஜக ஆட்களுக்கு இந்த வெறி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதுவும் ஒருபக்கம் இருக்கட்டும்.

கவனிக்க வேண்டியது, இந்த சர்ச்சை விஷயம் புதியதல்ல என்பதே. இது எங்கிருந்து துவங்கியது என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ் (Indian Roads Congress) என்று ஓர் அமைப்பு இருக்கிறது. (ஒரு காலத்தில் நான் சென்னையில் அச்சகத்தில் பணியாற்றி வந்தபோது, IRC-யின் ஆண்டுக்கு நான்கு இதழ்களை எமது அச்சகம்தான் அச்சிடும். பெயர்தான் இதழ்கள், ஒவ்வொரு இதழும் 10 பாயின்ட் டைம்ஸ் ரோமன் எழுத்துகளில் சுமார் 300-360 பக்க புத்தகமாக வரும். தில்லியிலிருந்து வரும் கிழட்டு அதிகாரிகளின் கையெழுத்துப் பிரதிகள், எமது அச்சகத்தின் லலிதா, ஜூலி, காமாட்சி போன்ற கம்பாசிடர் பெண்களுக்கு மட்டுமே புரியும்.) மைய அரசால் நிறுவப்பட்ட இந்த காங்கிரஸ், பெரும்பாலும் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட அமைப்பு. சாலைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்கிறது, பரிந்துரைகள் வழங்குகிறது.

மைல்கற்கள் பலவகை என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளைக் கற்களில் கறுப்பு எழுத்துகள். மேலே மஞ்சள் நிறப் பட்டை இருந்தால் தேசிய நெடுஞ்சாலை. மேலே பச்சை நிறப்பட்டை இருந்தால் மாநில நெடுஞ்சாலை. கருநீல/கருமை நிறப்பட்டை இருந்தால் மாவட்ட சாலை. சிவப்பு நிறப்பட்டை என்றால் ஊரகச் சாலை.

மைல் கல் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும், வண்ணப் பட்டை எவ்வளவு அகலம் இருக்க வேண்டும், மைல்கல்லின் உச்சியிலிருந்து எத்தனை செமீ கீழே நகரத்தின் பெயர் இருக்க வேண்டும், எண்கள் என்ன அளவில் இருக்க வேண்டும், கல்லின் பக்கப் பகுதியிலிருந்து எத்தனை செமீ இடைவெளி விட்டு எழுத்துகள் அமைய வேண்டும், என பல விதிகளை அது பரிந்துரை செய்திருக்கிறது. அதன் பரிந்துரைகள்தான் பெரும்பாலும் விதிகளாக ஆகின்றன. புறப்பட்ட இடத்திலிருந்து முதல் மைல் கல்லில் என்னென்ன தகவல்கள் இருக்க வேண்டும், 2ஆவது மைல் கல்லில்... 3ஆவது.... இப்படி எல்லாம் அந்தப் பரிந்துரைகளில் தரப்பட்டிருக்கும். இதற்கு ஐஆர்சி ஸ்டாண்டர்டு என்று பெயர். (ஐஆர்சி ஸ்டாண்டர்டு வேறு சில நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது வியப்புதான்!)

கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தப் பரிந்துரையின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் மைல் கல்லில் (கிமீ கல்லில்) அடுத்து வரும் நகரத்தின் பெயர் இந்தியில் இருக்க வேண்டும். 2ஆவது மைல் கல்லில் அதுவே உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும். (தமிழ்நாடு என்றால் தமிழில்.) 3ஆவது மைல் கல்லில் இந்தி, 4ஆவது மைல் கல்லில் உள்ளூர் மொழி. ஐந்தாவது மைல் கல்லில் ரோமன் எழுத்துகளில் - ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இப்படியே 6...7...8 என்று இதே வரிசையில் தொடர வேண்டும். அதாவது, எந்தவொரு கல்லிலும் இரண்டு மொழிகள் கிடையாது. Only one script being used on any one km stone என்று சொல்கிறது அந்தப் பரிந்துரை. ஐந்தாவது மைல் கல்லில் மட்டுமே ஆங்கிலம் வரலாம். முக்கியமான சுற்றுலாத் தலம் அல்லது தொன்மை வாய்ந்த முக்கியப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆங்கிலத்தில் தரப்படலாம்.

2004இல் மைய அரசின்கீழ் வரும் போக்குவரத்து அமைச்சகம் ஓர் உத்தரவை இடுகிறது. 1-2-3ஆவது மைல் கற்களில், மேலே இந்தி, கீழே உள்ளூர் மொழி. (Next important place in Hindi on top and in local language on bottom and in between kilometerage in symmetrical manner.) நான்காவது கல்லில் உள்ளூர் மொழி. ஐந்தாவது கல்லில் மேலே உள்ளூர் மொழி, கீழே ஆங்கிலம். உள்ளூர் மொழியும் இந்தி மொழிக்கான தேவநாகரி எழுத்துகளையே பயன்படுத்துகிறது என்றால் (உதாரணமாக மராத்தி) உள்ளூர் மொழியின் இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும். சர்வதேச அளவில் பின்பற்றப்படும் 1-2-3... எண் வடிவத்தையே பயன்படுத்த வேண்டும். உள்ளூர் மொழி எண் வடிவங்களோ, தேவநாகரி எண்களோ பயன்படுத்தக்கூடாது.

ஆக, மேற்கண்ட பரிந்துரையிலும் சரி, மைய அரசின் உத்தரவிலும் சரி, மூன்று மொழிகள் கிடையாது.







இப்போது படங்களைப் பாருங்கள். இணையத்திலிருந்து எடுத்தவைதான். பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட உத்தரவு சீராகப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிற அதே பிரச்சினை 2004இலும் எழுந்தது. ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் எழுதுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மைய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு தான் ஏற்கெனவே அறிவுறுத்தி விட்டதாக அப்போதைய மைய அமைச்சர் பாலு பதில் கூறியிருக்கிறார். (அறிவுறுத்தியதாக கூறியுள்ளார், மைய அரசு உத்தரவிட்டதாகவோ, விதிகளில் திருத்தம் செய்ததாகவோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.)

நான் தேடிப்பார்த்த வரையில், 2004க்குப் பிறகு வேறெந்த உத்தரவும் கிடைக்கவில்லை. ஆக, மேற்கண்ட இருமொழிகள் தொடர்பான உத்தரவுதான் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.

இப்போதிருக்கிற விதிகளின்படி பார்த்தாலும் ஐந்து மைல் கற்களுக்குள் ஒரு முறை ஆங்கிலம் வந்து விடுகிறது. பெரிய பிரச்சினை என்று கூற முடியாது. என்றாலும், மொழி தெரியாதவர்கள் அந்த ஆங்கில மைல்கல்லைத் தவற விட்டுவிட்டால் 5 கிமீ அப்பால்தான் அடுத்த மைல் கல்லைப் பார்க்க முடியும். போனால் போகிறது என்று விடுகிற விஷயமில்லை. வங்கிகளில் இந்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மாநிலங்களில் இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களிலும் படிப்படியாக இந்தித் திணிப்பு நடைபெறுகிறது. இந்தியில் சிந்தியுங்கள் என்று விளம்பரம் செய்கிறது மைய அரசு. எவனொருவனும், அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் ஆயினும், அவன் எத்தனை மொழிகள் அறிந்தவனாக/பேசுபவனாக இருந்தாலும், அவனுடைய சிந்தனை தாய்மொழியில்தான் நடக்கும்.


திமுகவின் டி.ஆர். பாலு அமைச்சராக இருந்த காலத்தில் காங்கிரஸ் அரசுதான் இதைச் செய்தது என்றே வைத்துக் கொள்வோம். இது தவறு என்றால் திருத்திக் கொள்ள வேண்டும்தானே? அவர்கள் செய்தது என்று குற்றம் சாட்டுவதால் இப்போது நியாயமாகி விடுமா? அதைத்தான் செய்வார்கள் இவர்கள். இந்தப் பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லாப் பிரச்சினைகளிலும் பாஜகவினரின் வாதம் இப்படித்தான் இருக்கிறது.


இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு மும்மொழிகளைப் பயன்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்வதுதான். நாடு முழுமைக்கும் சீர்மையாக்கச் செய்வது ஒன்றே இதற்குத் தீர்வு. (மும்மொழிகள் பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்தலாம் என்று சொல்வதில் பயனில்லை. அப்படிச் செய்யும்போது, எழுத்துகள் / எண்களின் அளவு குறித்தான விதிகள் மீறப்படும்.) அதைச் செய்யாத வரை, பிரச்சினை தீரப்போவதில்லை. தகவல் தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ந்திருக்கிற நிலையில் மைல்கற்கள் என்னும் பழங்கால தொழில்நுட்பத்தை படிப்படியாக கைவிட்டு, நவீன சின்னங்களுக்கு மாற வேண்டும். ஜிபிஎஸ் பரவலாகி வருகிற இக்காலத்தில் முக்கியமான அடையாளங்களுக்கு மட்டும் மைல்கற்களை வைக்கலாம், அவற்றில் மும்மொழிகளைப் பயன்படுத்தலாம்.

Thursday 6 April 2017

ஃபுட் பாய்ஸன் - டீஹைடிரேஷன்

ஜவஹர்லால் நேரு பல்கலையில் சில மாதங்கள் படிக்க வந்திருக்கும் ஒரு மாணவி, என் வீட்டுக்குப் பக்கத்தில் பேயிங் கெஸ்ட் போல தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறாள். அவளை இங்கே சேர்த்துவிட்டுச் சென்ற நண்பர்கள், என் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து, அவளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிச் சென்றார்கள். எப்போது என்ன உதவி தேவை என்றாலும் தாராளமாக வீட்டுக்கு வரலாம், வீட்டுச் சாப்பாடு தேவை என்று தோன்றினாலும் வரலாம், என்று எல்லாருக்கும் சொல்கிற உபதேசங்களை அந்தப் பெண்ணுக்கும் சொல்லி அனுப்பி வைத்தேன். சரி சரி என்று அவளும் மண்டையை ஆட்டிவிட்டுப் போனாள். மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது இது.

போனவாரம் திடீரென்று பல்கலையிலிருந்து பேராசிரியர் அழைத்தார். அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் நிற்கவில்லையாம். கொஞ்சம் கவனியுங்கள் என்றார். துணைவியாரை அனுப்பி அவளை அழைத்துவரச் செய்தேன். டீஹைடிரேஷன் ஆகிவிடக்கூடாது என்று விளக்கி, எலக்டிரால் வாங்கிவந்து கொடுத்து, வீட்டிலேயே சற்றுநேரம் படுக்க வைத்திருந்து, மாலையில் எதிர்வீட்டு டாக்டர் வந்ததும் காட்டி ஊசியும் மருந்து கொடுத்து அனுப்பி வைத்தோம். காலையில் வீட்டுக்கு வா, இட்லி சாப்பிடலாம் என்றேன். தலையை ஆட்டிவிட்டுப் போனவள்தான். பத்து மணிக்கு போன் செய்து, நன்றாகவே இருக்கிறேன், ரொட்டி சாப்பிட்டு விட்டேன், என்றாள்.

இதுதான் நம் குழந்தைகள். யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூச்சத்துடன் ஒதுங்கும் குழந்தைகள். சரி, அது கிடக்கட்டும். அவளுக்கு ஏன் வயிற்றுப்போக்கு வந்தது? முந்தைய தினம் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டது ஒத்துக்கொள்ளவில்லை, அதுதான் விஷயம்.

ஒரு விருந்துக்குப் போய் வந்திருப்போம், அல்லது குடும்பத்துடன் ஹோட்டலுக்குப் போய் சந்தோஷமாக சாப்பிட்டு வந்திருப்போம். வீட்டிலேயே பிடித்த உணவுகளை தயாரித்து உண்டிருப்போம். ஆனால் சற்று நேரத்தில் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கூடவே வாந்தியும் சேர்ந்து விடுகிறது. எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. மலம் கழிக்கப்போனால் நீர்போல பீய்ச்சுகிறது. சாப்பிட்ட உணவு சரியில்லாமல் போனதே பெரும்பாலும் இதற்குக் காரணம். இதை ஃபுட் பாய்ஸன் (food poison) என்கிறோம்.

ஃபுட் பாய்ஸன் என்றால் என்ன? அது என்ன செய்யும்?
ஃபுட் பாய்ஸன் என்றால் ஏதோ சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டதாக அர்த்தமில்லை. உணவு உண்பதற்கு முன் அல்லது உண்டதற்குப் பின் சில பாக்டீரியாக்களால் உணவு நச்சாக மாறுவது, அதன் விளைவாக ஆரோக்கியம் கெடுவதுதான் ஃபுட் பாய்சனிங் எனப்படும். அதாவது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்பட்ட நச்சுப் பொருட்களின் காரணமாக ஏற்படுவது ஃபுட் பாய்ஸன்.


பொதுவாக எல்லாருமே ஏதேனுமொரு கட்டத்தில் இதற்கு ஆளாகியிருப்பார்கள். சிலருக்கு இதன் விளைவு சில மணி நேரங்களில் சரியாகி விடும். சிலருக்கு ஓரிருநாள் தொடரும். சரியான உணவுமுறையைப் பின்பற்றாவிட்டால் சில நாட்கள் தொடரும். கவனிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்தாகவும் கூடும்.

அடிவயிற்றில் இசிவு எடுத்தாற்போன்ற வலி எடுக்கும், வாந்தி வரும், வயிற்றுப்போக்கு கடுமையாக இருக்கும். எதுவுமே சாப்பிடாதபோதும், அல்லது நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டாலும்கூட, வயிற்றுப்போக்கின்போது எப்படி அவ்வளவு நீர் வெளிவருகிறது என்று வியப்பாக இருக்கும். பொதுவாக நாம் உண்ணுகிற உணவு சிறுகுடல்-பெருங்குடல் வழியாக செரிக்கப்பட்டு சக்கை மட்டுமே மலமாக வெளிவரும். ஆனால் நச்சுணவு என்னும்போது, சிறுகுடல் ஏராளமான நீரை உருவாக்கும். செரிப்பதற்கு நேரமில்லாமல் அத்தனையும் உடனே வெளியேறும். அதனால்தான் தண்ணியாப் போகுதுஎன்கிறோம். இதனால் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும்.

நச்சுணவு எதன் காரணமாக ஏற்படுகிறது?
சில உணவுகளை உண்பதற்கு முன்பே அதில் நச்சு உருவாகி இருக்கலாம். சில உணவுகளை உண்ட பிறகு, வயிற்றுக்குள் போன பிறகு நச்சு உருவாகலாம். சாப்பிடுவதற்கு முன்பே நச்சு உருவாகி இருந்தால், அதன் விளைவு சில மணி நேரத்திலேயே தெரிந்து விடும். சாப்பிட்ட பிறகு. வயிற்றுக்குள் போன பிறகு நச்சு உருவானால், அறிகுறிகள் தாமதமாகவே தெரியும்.

எந்த பாக்டீரியாக்கள் நச்சு உருவாக்குகின்றன? எப்படி?
எல்லா உணவுப் பொருட்களுமே குறிப்பிட்ட நேரத்துக்குப் / காலத்துக்குப் பிறகு கெட்டுப்போகும் என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். கெட்டுப்போகாதிருக்க குளிர்பதனப் பெட்டியில் வைக்கிறோம. அப்படியும்கூட கெட்டுப்போவதுண்டு. காரணம் பாக்டீரியாக்கள். உதாரணமாக, சில பாக்டீரியாக்களும், அவை இருக்க்க்கூடிய உணவுகளும் கீழே
Norovirus (காய்கறிகள், பழங்கள், கடலுணவுகள்)
Salmonella (முட்டை, இறைச்சி, பால் பொருட்கள்)
Clostridium perfringens (இறைச்சி, கோழி, பண்ணைப் பொருட்கள்)
Campylobacter (இறைச்சி, தண்ணீர்)
Staphylococcus (முட்டை, பால், கிரீம்)

Staphylococcus aureus என்னும் பாக்டீரியா பொதுவாக எல்லாருடைய உடல்களிலும் மூக்கில், மூச்சுக்குழலில், தோலில் இருக்கும். அதே பாக்டீரியா உணவுப் பொருட்களை கெடுக்கவும் கூடியது. மீந்துபோன இறைச்சி, காய்கறிகள் போன்றவற்றில் விரைவாக பல்கிப் பெருகி அவற்றை நச்சாக்கி விடும். Salmonella, Campylobacter, Botulism என உணவை நச்சாக்குகிற பாக்டீரியாக்கள் பல உண்டு. இவை தவிர, ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள், ஒவ்வாமை ஏற்படுத்துகிற பொருட்கள் ஆகியவையும் உணவை நச்சாக்கலாம்.

மீந்துபோன உணவுகளால், இறைச்சிப் பொருட்களால் மட்டும்தான் புட் பாய்சனிங் ஏற்படும் என்பதில்லை. புட்டியில் அடைக்கப்பட்ட canned foods உணவுகளால்கூட ஃபுட் பாய்சன் ஏற்படலாம். பச்சைக் காய்கறிகளின் சலாட், அல்லது பாதி வேகவைத்த காய்கறிகள் காரணமாக ஏற்படலாம். பச்சை முட்டை, பச்சைக் காய்கறிகள், பால் பொருட்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை பச்சையாக அல்லது அரைவேக்காடாக உண்பதை தவிர்ப்பது நல்லது. பாக்டீரியா வளர முடியாத அளவுக்கு வெப்பம் அல்லது குளிர்ச்சியில் உணவுப் பொருட்களை வைப்பது நல்லது. அதாவது, வாங்கி வந்த காய்கறிகளை, கீரைகளை வெளியே வைக்காமல் ஃபிரிஜ்ஜில் வைப்பதும், பயன்படுத்தும் முன்னால் சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது. பிரிஜ்ஜிலிருந்து எடுத்து வெளியே வைத்த உணவுப் பொருட்களை குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகும் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. பிரிஜ்ஜிலிருந்து ஒரு முறை எடுத்தபிறகு பயன்படுத்திவிட வேண்டும். மறுபடி உள்ளே வைப்பது, மறுபடி எடுத்துப் பயன்படுத்துவது கூடாது.

கைக்குழந்தைகளை சுத்தம் செய்தபிறகு, டயபர்களை மாற்றிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். E. coli தொற்று குழந்தைகளின் கழிவிலிருந்தும்கூட ஏற்படக்கூடும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உணவின் காரணமாக ஏற்பட்ட வயிற்றுப்போக்கு என்றால் பொதுவாக 24 மணிநேரத்தில் சரியாகி விடும். அதிக நாட்கள் நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இருப்பினும், நாமாகவே மேற்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் உண்டு.
வீட்டில் சாப்பிட்ட பிறகு பிரச்சினை ஏற்பட்டிருந்தால், எந்த உணவு காரணமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறதோ, அதை முதலில் தூக்கி எறியவும்.
ஓரிரு மணி நேரம் எதையும் அருந்தாமல், உண்ணாமல் தவிர்க்கவும்.
தேநீர் / காபி, பால் கலந்த பானங்கள், மது அவசியம் தவிர்க்கவும்.
சிறுகுடல் அதிக நீரை வெளியேற்றிவிடும், வாந்தியின் காரணமாகவும் நீர் குறைந்து போகும். எனவே நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். அதைத் தவிர்க்க, கொஞ்சம் கொஞ்சமாக, நிறைய நீரை அருந்த வேண்டும். டீஹைடிரேஷன் ஏற்பட்டால், ரீஹைடிரேஷன் செய்ய வேண்டும்.
உப்பு-சர்க்கரை-நீர் மூன்றும் கலந்து அருந்தலாம். இதுவே ஓரல் ரீஹைடிரேஷன் எனப்படும். (ஓஆர்எஸ்) எலக்ட்ரால், எனர்ஜி டிரிங்க் என்ற பெயர்களில் கிடைப்பவை இவைதான்.
மோர் அருந்தலாம்.
கொழுப்புச்சத்து, நார்ச்சத்து உள்ள பொருட்கள் செரிப்பது கடினம். எனவே கொழுப்பு, நார்ச்சத்துப் பொருட்களை தவிர்க்கவும்.
வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்க்கவும்.
செரிப்பதற்கு எளிதான பொருட்களை உண்ணலாம். உதாரணமாக பிரெட், நன்றாக வேக வைத்து குழைய வைத்த சோறு, கஞ்சி, இட்லி, முட்டையின் வெள்ளைக்கரு, வாழைப்பழம்.
இஞ்சி செரிமானத்துக்கு உதவும், வேறு பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றால் இஞ்சிச்சாறு அருந்தலாம்.

மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கோடை காலத்தில் டீஹைடிரேஷன் ஏற்படும்போதும் உதவும். குறிப்பாக தில்லி போன்ற வெயில் மிக அதிகமாக இருக்கும் நகரங்களில். 
தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்க நேற்றும் சென்றிருந்தேன். சிலருக்கு டீஹைடிரேஷன் ஆகியிருப்பதாகத் தெரிந்தது. ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை யாரோ விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். அடுத்த முறை சந்திக்கச் செல்லும்போது நானும் கொஞ்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்தேன். 


எச்சரிக்கை 1 — இந்த சுய உதவிக் குறிப்புகள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்று அல்ல. ஓரளவுக்கு திடமாக உள்ளவர்கள், தைரியமாக எதிர்கொள்ளக் கூடியவர்கள் பயன்படுத்தலாம். அவர்களுக்கும்கூட 48 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தால் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். குழந்தைகள் அல்லது முதியவர்கள் என்றால் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். குழந்தைகளுக்கு நீடித்த வயிற்றுப்போக்கு உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும்.

எச்சரிக்கை 2 — வயிற்றுப்போக்கு-வாந்தி விஷயத்தில் கடையில் நாமாகவே மருந்துகளை கேட்டு வாங்கிப் பயன்படுத்துவது நல்லதல்ல. ஃபுட் பாய்சனிங் அறிகுறிகளை வயிற்றுப்போக்கு, வாந்தி, அடிவயிற்றில் வலி, காய்ச்சல், களைப்பு, மயக்கம், தலைவலி, மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் என பல்வேறு அறிகுறிகளைப் பொறுத்தே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பயன்படுத்திய மருந்து மற்றொருவருக்குப் பயன்படும் என்பதில்லை.